Apr 20, 2010

எங்களை வாழவிடுங்கள்

"வளமையைத் தருவதாக வந்தார்கள். முதலில் கணவனைக் கேட்டார்கள். அவர் இறந்த பிறகு இப்பொழுது மகனைக் கேட்கிறார்கள். போதும். எங்களை வாழவிடுங்கள்". ஒரு வட இந்தியப்பெண்ணின் ஓவியத்துடன் நக்சலைட்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று உள்துறை அமைச்சகத்தால் இந்த விளம்பரம் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த விளம்பரத்தின் இலக்கு யார்? நக்சலைட்களுக்கு ஆதரவாக இருப்பது நகர்புறத்தில் ஐ.பி.எல் பார்த்துக் கொண்டிருக்கும் மேல்தர, நடுத்தர வர்க்கம் என்று உள்துறை நினைத்துக் கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படியானால் இந்த விளம்பரம் பொருளற்றது. வீண் செலவு.

ஆதிக்க சமூகத்தாலும், அதிகார வர்க்கத்தாலும் நசுக்கப்பட்டு, வாழ்வின் விளிம்பில் நின்று கொண்டிருப்பவன் தன்னைக் காத்துக் கொள்ள தீவிர போக்கை நோக்கி நகர்கிறான். அவனுக்கு செய்தித்தாள் விளம்பரமும், அமைச்சரின் அச்சுறுத்தலும் அல்லது வெற்று வாக்குறுதியும் எந்தவிதமான மாறுதலையும் உருவாக்கப்போவதில்லை.

நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட இடங்களில் என்றில்லை பொதுவாகவே தலித், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு என சமீபத்திய நடுவண் அரசுகள் என்ன திட்டங்களைக் கொண்டு வந்திருக்கின்றன அல்லது எந்தத் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டிருக்கின்றன என்று யோசித்தால் திட்டவட்டமான பதில் எதுவுமில்லை. அரசாங்கங்கள் கீழ் நிலை மக்களுக்கென செயல்படுத்தப்போவதாகச் சொல்லும் வாக்குறுதிகள் யாவும் வெறும் அறிக்கைகளாக நின்றுவிடும் அவல நிலைதான் இருக்கிறது.

அரசுக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறது.

இந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தித்தான் தலித் அரசியல் நடத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் விளிம்பு நிலை மக்களை உணர்வு ரீதியாக தூண்டிவிட்டு தங்களின் வாக்கு வங்கிகளாக மாற்றுகின்றன.

அரசாங்கம் பிரச்சினைகளின் மூலத்தை கண்டறிவதற்கான செயல்பாடுகளையும் அதை தீர்ப்பதற்கான திட்டங்களையும் முடுக்கிவிடுமானால் பெரும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். ஆனால் அரசுக்கு மக்களின் பிரச்சினைகளை விடவும், மேல்தட்டு வர்க்க அதிகாரிகளின் அறிவுரைகள்தான் முக்கியம். அவர்களுக்கு பிரச்சினைகள் பற்றிய எந்த அறிவும் இருப்பதில்லை. தன் அதிகாரத்தின் மூலம் செலுத்தும் வன்முறைகள் மூலம் எதிர்ப்பாளர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பயிற்சி. அதற்கு அவர்களுக்குத் தேவையெல்லாம் விசைத் துப்பாக்கிகளும் கண்ணை மூடிக் கொண்டு சுட்டுத்தள்ளும் பட்டாலியன் இராணுவத்தினரும் தான்.

அரசாங்கம் மக்களின் அரசாங்கமாக இருக்க வேண்டும். அவர்களின் பிரச்சினைகளையும் வாழ்வியல் சிக்கல்களையும் புரிந்து கொண்ட அரசாங்கமாக அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வளிக்கும் அரசாங்கமாக இருக்க வேண்டும். புள்ளிவிவரங்களைத் தரும் அதிகாரிகளின் அரசாங்கமாக இல்லை.

ஷரத் யாதவிடம் ப.சிதம்பரத்தின் செயல்பாடுகள் குறித்து வினவியதற்கு, "அவர் முதலில் பேச்சை குறைக்கட்டும், செயலில் காட்டட்டும்" என்றாராம். அது சரி.

2 எதிர் சப்தங்கள்:

vivek said...

மிக அருமையான பதிவு,
ஒரு மனிதன் தன் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படும் போதுதான் போராட வீதிக்கு வருகிறான்.இதை இந்த அரசுகள் என்றும் புரிந்து கொள்வதே இல்லை.இந்த அரசுகளின் ஆட்சிகள் எல்லாம் அடுத்த தேர்தலை நோக்கியே இருக்கிறது.

Thoughts said...

When i saw that add in Hindu.. I was thinking in the same line.. It is not going to reach the target