Jan 1, 2010

நேற்று போல் இன்று இல்லை..

வருடத்தில் முதல் நாள் செய்வதே வருடம் முழுவதும் நடக்கும் என்பதால் மனப்பூர்வமாக அந்த நாளில் பாடத்தை படி என்று ஒரு காலத்தில் ஐந்து மணிக்கு எழுப்பி விட்டுவார்கள். ஆனால் படிப்பு விஷயத்தில் எப்பொழுதும் போலவே போராட்டமாகத்தான் வருடங்கள் ஓடியிருக்கின்றன.

நேற்று இரவில் பதினோரு மணிக்கு படுத்து புத்தாண்டின் முதல் நாளான இன்று காலை எட்டரை மணிக்கு எழுந்தேன். அனேகமாக இந்த வருடம் முழுவதும் ஒன்பது மணி வரை தூங்கும் சோம்பேறி ஆகக்கூடும்.

புத்தாண்டு என்பது ஒரு பிரிவினருக்கானது மட்டும்தானே என்று நினைத்தால், இன்று காலையில் தெருக்களிலும், குப்பை மேடுகளிலும் பொறுக்கி பிழைப்பை ஓட்டும் இரண்டு இளைஞர்கள், முட்டி வரைக்கும் மடக்கிய ஜீன்ஸ் பேண்ட்டும் கிழிந்த சட்டையுமாக ஒயின்ஷாப்புக்குள் இருந்து வெளியே வந்தார்கள். அந்த வழியில் சென்றவர்களிடமெல்லாம் ஹேப்பி நியூ இயர் சொன்னார்கள். தோளில் ஒரு வெள்ளைச் சாக்கு இருந்தது. இன்னும் காலியாகவே இருந்தது.

வரும் வழியில் வழக்கமான உணவு விடுதிக்கு விடுமுறை விட்டுவிட்டார்கள். இரண்டு ரூபாய்க்கு வேகவைத்த கடலையை வாங்கிய போது, கடலை விற்றவரிடம் "புது வருஷம் எப்படி இருக்குங்க" என்றேன். சிரிப்பைத் தவிர பதில் இல்லை. நான்கைந்து பதில்களை நானாக உருவாக்கிக் கொண்டேன். ஒரு பதிலாவது அவரது மனதிற்குள் இருக்கும் பதிலுடன் சரியாக பொருந்துமா என்று தெரியவில்லை. ஹேப்பி நியு இயர்!

ஊருக்குச் செல்லும் நாட்களில் நண்பர்களுடன் அலுவலகம் முடித்து நேராக ஒசூர் வரை சென்றுவிடுவதுண்டு என்பதால், வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு பைக்கில் வராமல், பேருந்தில் அல்லது நடந்து வருவேன். அலுவலகத்தின் பின் கதவு திறந்திருந்தால் 1.5 கி.மீ தான் நடக்க வேண்டியிருக்கும், மூடியிருந்தால் சுற்றி 3 கி மீ நடக்க வேண்டும். பத்தரை மணிக்கு மூடிவிடுவார்கள். நான் 7 நிமிடம் தாமதாக வந்தேன்.காவலுக்கு நின்றவர் திறந்து விட முடியாது என்று முகத்தில் கடுகடுப்பை காட்டினார்.

என் முக ராசியா என்று தெரியவில்லை என்னோடு பழகாத யாருக்குமே என்னைப்பார்த்தால் கோபம்/எரிச்சல் வருகிறது.நானும் கறுவிவிட்டு பசியோடு நடந்து வந்தேன்.

இதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

...புத்தாண்டு வாழ்த்துக்கள்.

3 எதிர் சப்தங்கள்:

ஆரூரன் விசுவநாதன் said...

நேற்றுபோல் இன்று இல்லை.....
இன்று போல் நாளை இல்லாமல் போக....
புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் ஆரூரன்

யாழினி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

cheena (சீனா) said...

அன்பின் மணிகண்டன்

இதயங்கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்