May 12, 2008

நித்யா க‌விதை அர‌ங்கு : க‌.மோக‌ன‌ர‌ங்க‌ன் க‌விதைக‌ள்

1) பாற்கடல்

விதிக்கப்பட்டதற்கும்
கூடுதலாக ஒரு
நாழிகைக்கும் ஆசைப்படவில்லை.
மெய்யாகவே,
தாக மேலீட்டினால் தான்
அதுவும் கூட‌
ஒரு மிடறுதான் இருக்கும்
பதைத்து நீண்ட உன்
மெலிந்த கைகள்
நெறித்து நிறுத்த‌
விக்கித்துப் போனேன்
அறையின் நடுவே
கொட்டிக் கவிழ்ந்த கலயத்தினை
வெறித்த வண்ணம்
முணுமுணுக்கிறாய்
விதிக்கப் பட்டதற்கும்
குறைவாக ஒரு
நாழிகைக்கும் ஆசைப்படாததே
---
2) தவளையின் சங்கீதம்

என்
விழிக் கோணத்தின்
அரை வட்டப் பாதையில்
நூற்று எண்ப‌து
பாகைக‌ளுக்குள்ளாக‌
தோன்றி ம‌றையும்
காட்சிக‌ளின்
தொட‌ரோட்ட‌த்தில்
மித‌ந்து வ‌ருமொரு
ப‌ழுத்த‌ இலை மீது
அசையாம‌ல்
அம‌ர்ந்திருக்கும் த‌வ‌ளை
வித‌ந்தோதுகிற‌து
நேற்று நாளையென‌
ந‌ழுவிபோகும் நிமிஷ‌ங்க‌ளுக்கு
அடியில் எட்டாத‌
ஆழ‌த்தில்
அலையும்
த‌ற்க‌ண‌த்தின்
சிப்பியுள் திர‌ளும்
நித்திய‌த்துவ‌த்தை.
---

3) வ‌லிய‌றித‌ல்

பார்த்த‌
வ‌ண்ணமிருக்க‌
வெடித்த‌ நில‌த்தில்
விழுந்த‌ விதை
செடி
ம‌ர‌மென‌
பொழிந்த‌ ம‌ழைக்கு
த‌ழைந்த‌து
நிழ‌லுக்கு இற‌ங்கிய‌
ம‌ர‌ங்கொத்தி ஒன்று
க‌ழுத்தை வாகாய் சாய்த்து
நிறுத்தி
நிதானமாய்
துளையிடுகிற‌து
இத‌ய‌த்தை
குடையும‌ந்த‌
வ‌லி
அப்ப‌டியொன்றும் அதிக‌முமில்லை
அப்ப‌டியொன்றும் குறைவுமில்லை.
---

4)அருநிழ‌ல்

அன்பெனும் பிடிக்குள்
அக‌ப்ப‌ட்ட‌ ம‌லைய‌து
எவ்வ‌ள‌வு பெரிதோ
அவ்வ‌ள‌விற்கு க‌ன‌மில்லை
என்றாலும்
சிறுபொழுதும் தாம‌திக்க‌வோ
உட‌ன் சும‌ந்து ஏக‌வோ இய‌லாத‌
வ‌ழிந‌டைப் ப‌ய‌ணி
நான்
இற‌க்கி வைத்துப் போகிறேன்
ப‌த்திர‌மா ய‌தை
பாதையின் ம‌றுங்கே
திசைக‌ளோடி பிரிந்த‌ வ‌ழிக‌ள்
இருண்ட‌ பிற‌கு
என் பிராதுக‌ளையும், பிரார்த்த‌னைக‌ளையும்
காலத்தின் ப‌லிமுற்றத்தில்
கிட‌த்திவிட்டு
வெறும‌ கையோடு நான்
திரும்பும் காலில்
அடைக்க‌ல‌ம் த‌ரும்
அசையாத‌ அம்ம‌லையின்
அடிவ‌யிற்றுக் குகை
நிழ‌ல்.

0 எதிர் சப்தங்கள்: