தீப்தி அழுது கொண்டிருந்தாள்.
இரவுக்காட்சிக் கூட்டம் நகரச் சாலையை சலனமூட்டுகிறது.
இடப்பக்கச் சந்தில்
அலையும்
நாயொன்றின் நிழலசைவு
இரவின் தனிமையை நகர்த்த துவங்கியது.
ஜன்னலோர திரைச்சீலையை யாரோ மூடிக் கொண்டிருந்தார்கள்.
மஞ்சள் ஒளியில் நனைந்து கிடக்கும்
சாலையோரச் செடியிலையில்
தன் ஓவியத்தை தொடங்கினான்
மழைக்கடவுள்.
இன்று தீப்தி அழுது கொண்டிருந்தாள்.
-------------------------
(2)
வித்யாவிடம் பேசுவதற்கு ஏதாவது இருந்து கொண்டிருக்கிறது.
இல்லாத பெண்களின் ரகசியங்களை
ராஜேஷ் வைத்திருப்பான்.
அருண் வேலையைப் பற்றி பேசுவான்.
நிவேதிதாவின் பொய்கள் சுவாரஸியமானவை.
எனக்கு
இந்த டி.வி. பெண்ணிடம்
என்ன பேசுவதென்று தெரியவில்லை
உந்திச் சுழி வளையம் நன்றாயிருப்பதாக
முடித்துக் கொண்டேன்.
-----------
(3)
ஏணிகளை வரிசையாகக் கட்டி
அருவி மீது ஏற முயன்றேன்
கீழே விழுந்தால்
எலும்பும் மிஞ்சாது என்று
தாயுமானவன் சொன்னான்.
உச்சியை அடையும் கணம்
விழத்துவங்கினேன்.
எப்படி
எலும்பு மிஞ்சியது என்றும்
இலை
சுழன்று
விழும்
தேவதச்சன் கவிதையையும்
யோசித்துக் கொண்டிருந்தேன்.
இட்லி வாங்கி வரச் செல்வதாக
தாயுமானவன்
கிளம்பிச் சென்றான்.
-----------
நன்றி: உயிர்மை, மே'2008.
ஓவியம்: ராஜன் புதியேடம்.
ஓவியம்: ராஜன் புதியேடம்.
2 எதிர் சப்தங்கள்:
நல்லா இருக்குங்க.
நன்றி சுந்தர்.
Post a Comment