Oct 13, 2012

கூச்சம் கொள்ளச் செய்யும் கவிதைகள்


ஒரு கவிஞன் வாழும் சமகாலத்தின் முகத்திற்கும் முதுகுக்குமான தொடர்பை மொழிவழியில் கண்டடைகிறான். அதில் தன் விடுதலைக்காக மட்டுமின்றி தேச விடுதலைக்கான தேடலையும் மேற்கொள்ள வேண்டியிருக்கு. பெருத்த மனக்குழப்பங்களோடு ததும்பும் கண்ணீரில் வா.மணிகண்டனின் ‘கண்ணாடியில் நகரும் வெளிச்சம்’ தொகுப்பு பயணிக்கிறது. இத்தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் குழந்தைகள் உலகம், மரணம், காதலென பரவியுள்ளது.

கணக்கற்ற கவிதைகளையும் கதையாடல்களையும் உலகெங்கும் தன் வெளிச்சத்தில் பிதுக்கியபடி இருக்கும் நிலாவை ‘நிலவு மிதந்த சாக்கடை’ கவிதையில், நிலாப் பாட்டியை ‘வீதி நுனிச்/சாக்கடையிலிருந்து கூட்டி வருகிறேன்’ எனும் வரிகளின் மூலமாக வித்தியாசமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

குழந்தைகளின் கேள்விகளுக்கு நம்மால் விடையளிக்க முடியாமல் மழுப்பலான பதிலாலோ, அதிகாரத்தை கையாண்டோ சமாளித்து விடுவதை ‘கடலுக்குள் புதைந்த கேள்விகள்’ கவிதையில் 'கடலுக்குள்/மிதக்கின்றன/ஆயிரம் கேள்விகள் கேட்பாரற்று' என முடித்திருப்பார். 

குழந்தைகள் வியத்தகு கற்பனைகள் நிரம்பியவர்கள் என்பதை 'கடவுளும் ஸ்ரீநிதியும்’ கவிதையில் அழகிய கதையாடலை வாசிப்பவர்களின் நினைவில் ஊன்றிவிடுகிறார். கடவுள் ஒரு வெள்ளைத்தாளில் புது உலகை படைக்க நினைத்து வரைய முற்பட்டு முடியாது போக ஸ்ரீநிதியிடம் கொடுத்துவிடுவார், அவளோ வெற்றுத்தாளில் அம்மா, ஆடு, இலை வரைந்து அம்மா வேடிக்கை பார்க்க ஆடு இலையை தின்றது என முடிந்திருப்பதை கடவுள் பார்க்க ஆடு தின்ற மீதி இலை தாள் முழுவதும் விரவிக்கிடக்க இனி புது உலகம் இல்லை எனும் செய்தி பரவியது என முடியும் கவிதை. நாம் அம்மா, ஆடு, இலையை வாசித்தும் கேட்டும், கற்றும் கொடுத்திருக்கிறோம் இனி இம் மூன்று வார்த்தைகளும் இக்கதையாடலை நினைவூட்டும்.

‘எந்தப் புகாரும் இல்லை’ கவிதை குழந்தைகள் எல்லாவற்றையும் அவர்களின் மனவோட்டத்தில்தான் அணுகுவார்கள் என்பதை காட்டுகிறது. காதல் எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதான். ஒவ்வொருவருக்குமான தனித்த அனுபவம் அலாதியானது. வாழ்வின் எல்லா கணங்களிலும் காதலியின் நினைவோடு இருப்பவனுக்கு அதை சொல்வது எவ்வளவு கடினம் என்பதை ‘பிரியம் படிந்த வாக்குமூலம்’ கவிதையில் உனை நினைக்காத நேரத்தை மட்டும் சொல்வது எனக்கு எளிது என்கிறார். இப்படியான வாழ்முறையில் இருப்பவனுக்கு பிரிவு எவ்வளவு வலி நிறைந்ததாக இருக்கு.

ஒரு அழுகை, துயரம், வெறுமையென ஒற்றை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாதென்பதை ‘போன்றில்லாத பிரிவு’ கவிதையிலும், அவளற்ற வெறுமையை என்ன செய்வதென்ற பித்த நிலையை ‘நீ இல்லையென்றும் வெறுமை’ கவிதையிலும், எழுதி முடிக்கப்பட்ட கடிதத்தின் தனிமையின் எச்சம் நினைவின் சாலையெங்கும் பறவையின் எச்சமாக உதிர்ந்து கிடக்கும் அவஸ்தையை ‘யாரும் பாதிக்காத கால்தடங்கள்’ கவிதையிலும், பிரிவை விடவும் காதல் புறக்கணிப்பு அவஸ்தைமிக்கது. 

கண்ணீர், விசும்பல், நெஞ்சுக்குழியெங்கும் வியாபித்திருக்கும் கசப்புச்சுவையை ஒத்ததென்கிறார், 'புறக்கணிப்பின் கசப்புச் சுவை’ கவிதையில் கருணையின் நஞ்சை/கொஞ்சம் பருக விடுவென கேட்கும் ‘அன்பின் சாட்சியோடு’ கவிதை ‘முத்தத்தின் பழைய ஈரம்‘ கவிதையில் வெட்டுப்பட்ட மரத்தின் கசிவென/கசக்கிறது/நம் முத்தத்தின்/பழைய ஈரம் என முடிவுறுகிறது.

காதல் இன்பத்திலும் கொல்லும் அவஸ்தையிலும் கொல்லும் என்ற உண்மையின் உயிர் கவிதைகளில் பரவிக்கிடக்கிறது. ஆசை, பயம் இன்றி வாழ்வு உண்டா? மரண பயமின்றி யார் இருக்கிறோம். மரணம் பெருத்த மௌனத்தையும், வரலாற்றையும் கொண்டது. பிற சொற்களை சொல்லி எளிதில் கடந்து விடுவதைப்போல ‘மரணம்’ என்ற சொல்லை வெறுமனே சொல்லி கடந்துவிட முடியாதென்பதை ‘மரணத்தை எப்படி சொல்வீர்கள்’, கவிதையிலும், நமக்கேன் வம்பு என பார்த்தும் பார்க்காதவாறு புறக்கணித்த அனாதை பிணங்களை கண்முன் ஊசலாட விடுகிறார் ‘அநாதமையின் நிகழ் வரலாறு’  கவிதையில்.

மயானத்தின் சூழல் எந்த பிண வரவையும் எவ்வித சலனமின்றி இயல்போடு ஏற்றுக்கொள்வதை ‘ஸ்தம்பிதமில்லாத மயானம்’ கவிதையிலும், பேருந்து அல்லது ரயிலில் அடிப்பட்டு செத்துக் கிடப்பவர்கள் குறித்து பயணிப்பவர்கள் தங்களின் எல்லையற்ற யூகங்களை அவர்களை எட்டிப் பார்த்துவிட்டு கூறிக்கொண்டிருப்பதை கேலி செய்கிறது ‘விடைகளற்ற புதிர்கள்’ கவிதை. மலர்தலின் கணிதம்/சிகரெட் புகையின் ஓவியம்/உறங்கும் குழந்தையின் புன்னகையென எளிய சூத்திரம்தான் மரணம் என்கிறார் ‘மரணச் சூத்திரம்’ கவிதையில். இக்கவிதையின் நீட்சியை ‘எளியதொரு மரணத்திற்கான காத்திருப்பு’, உயிர் பிரிதலின் ஓசை’ கவிதைகளில் காணமுடிகிறது. 

அச்சம் சூழ எட்டிப்பார்க்கும் பிணவறையை பிசாசுகளின் விடுதி’ கவிதையிலும் உள்ள மோனநிலை அவஸ்தையை நமக்கும் தொற்றிக்கொள்ள செய்கிறார். மரணம் தன் சார்ந்து நிகழ்கையில் பெரும்வலி நிரம்பியும், வேறானவர்களுக்கு நிகழ்கையில் செய்தியாக மாற்றம்கொள்வதன் யதார்த்தம் மரணம் சார்ந்த கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

மழை ஓய்ந்த பின் இரவின் அமைதியை கொண்டாடப்பட வேண்டிய மரணம் என்கிறார் ‘மழை ஓய்ந்த இரவு’ கவிதையில். நகரங்களின் தெருவோரம் பஸ், ரயில் என தான் விற்கும் பொருளை தன் வார்த்தைகளில் சொற்களை நதியென அலைவுறச் செய்து விற்பனை செய்யும் லாவகம் மிக்க சாதூரியத்தை ‘வண்ணக் கைக்குட்டை விற்பவன்’ கவிதையில் ஓவியமாக்கியுள்ளார்.

நம்மில் இருந்து பிரியும் நிழல், நாம் ஆச்சரியம் கொள்ள பெருத்தும் சிறுத்தும் அலைவுறுவது குறித்த ஆய்வில் நிழலோடு விளையாடி சலித்து தோற்ற குழந்தையாகத்தான் நிற்கிறோம் என்கிறார் ‘நிழல் குறிப்பு’ கவிதையில்.

கவிதையின் பாடுபொருள்கள் பஞ்சமற்று கிடக்கிறது நம் கண்முன். தினசரி தோற்றம் கொள்ளும் விசயம்தான் யாராவது கவிதையில் சுட்டிக்காட்ட சுரணை வருகிறது. சுண்ணாம்பை உதிர்த்து ஓவியங்களை வரைந்து நிற்கும் சுவர்கள் குறித்த ‘சுவரில் ஊரும் கதைகள்’ கவிதை நாம் பார்த்த சுவருக்கும் நமக்குமான வாழ்பனுவங்களை நினைவில் தெறிக்கச் செய்கிறது.

நல்ல நேர்த்தியான வெளிப்பாடு, விளம்பர பலகையில் படுத்துக்கிடக்கும் பெண்ணிற்கும் பார்வையாளனுக்குமான ஈர்ப்பு குறித்து ‘வினைல் காதல்’ கவிதை. காலமாற்றத்தில் நாம் இழந்து நிற்கும் பல அனுபவங்களை நிழலென தொடரச் செய்து விடுகிறது. ‘கண்ணாடியில் நகரும் வெயில்’ கவிதை. கண்களில் சாந்தம் பொங்க கனவற்று வேட்கையற்று நிதானமாக நகர்வலம் வரும் பைத்தியக்காரன்களையும் ‘மேலும் ஒரு பைத்தியக்காரன்’ கவிதையில் ஆயிரம் காரணங்கள்/அவனுக்கு என தன் கவனிப்பை பதிந்துள்ளார்.

வெகு நாட்களாய் கூட்டிலிருந்த குருவி தன் நிழலை காதலிக்கத் தொடங்கிவிடுகிறது. கூடு திறக்க பறந்தலின் சுகத்திற்காக உயரம் செல்ல நிழல் சிறிதாகிறது. தன் காதலை இழந்துவிடுவோமோ என பயத்தால் தன்னை கல்லாக்கிக்கொண்டது எனும் ‘அமத்தா சொன்ன கதை’ கவிதை நினைவில் அசைபோட்டு லயிக்கச் செய்கிறது.

தட்டான் வாலில் புல் செருகி ராக்கெட்டாக பறக்க விடுதல், பொன்வண்டை நூலில் கட்டிவைத்து வண்ண முட்டை காணுதல், நாயின் மீது கல்லெறிதல், குளிக்கும் பெண்ணை எட்டிப்பார்த்து அவள் திட்டுவதை ரசித்தல், கோழியின் கழுத்தை திருகி கொல்லுதல் என எளிதில் கிட்டும் ஆத்ம திருப்திக்காக நீளும் அவரின் பட்டியல்களையும் மீறி அவரவர்களுக்கான பட்டியல் இன்னும் நீண்டு பால்யத்தில் வாழவைக்கிறது ‘ஆத்மதிருப்தி’ கவிதை.

பிரக்ஞையற்ற மரக்கிளை/சாவாதனமாக/சன்னலை உரசுகிறது, 

ஒருத்தியின் சிரிப்பொலியோடு/மெல்ல நகர்கிறது ரயில்,

கடைசி பேருந்துக்காக /காத்திருக்கும் இளம் தம்பதி,

மழைக்காற்று உதிர்த்த/செடிக் கிளைச்/சூரியன்கள்-

என நீளும் நிறைய தெறிப்புகள் தொகுப்பெங்கும் காணக்கிடக்கிறது. நாம் காணத் தவறிய சொல்ல நினைத்த விசயங்களை அக்கறையோடு எளிமையோடு சொல்லிச் செல்லும் இவரின் கவிதைகள் கூச்சம் கொள்ள செய்துகிறது.

[கண்ணாடியில் நகரும் வெயில் கவிதைத் தொகுப்புக்காக கவிஞர் ந.பெரியசாமி எழுதிய விமர்சனம். கவிதைத் தொகுப்பை மின் நூலாக தரவிறக்கம் செய்ய  க்ளிக் செய்யவும். ந.பெரியசாமியின் வலைப்பதிவு இங்கே]

May 18, 2012

கற்பழித்ததா இந்திய இராணுவம்? ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்

எழுத்தாளர் ஜெயமோகனின் ”கற்பழித்ததா இந்திய இராணுவம்?” என்ற கட்டுரை http://www.jeyamohan.in/?p=27320 என்ற இணைப்பில் இருக்கிறது.
                                                           
                                                                   ***

டியர் சார்,

வணக்கம்.

முள்ளிவாய்க்காலில் மூன்றாண்டுகளுக்கு முன்பாக அரங்கேற்றப்பட்ட கொடூரத்தை அசை போட்டுக்கொண்டிருக்கும் அதே மே மூன்றாவது வாரத்தில் ”கற்பழித்ததா இந்திய இராணுவம்” என்ற உங்களின் குறிப்பை வாசிக்க நேர்ந்துவிட்டது. இரண்டு நாட்களாக- குறிப்பாக இரவுகளில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திய குறிப்பு அது. 

திருமாவளவனும், ஷோபாசக்தியும் இந்திய இராணுவம் இலங்கையில் அரங்கேற்றிய கொடூரத்தின் நேரடி சாட்சிகளாக முன் நிற்கிறார்கள் என்பதும், அவர்களின் கடிதங்கள் ஜாஸ் டயஸ் மற்றும் உங்களின் கருத்துக்களுக்கு எதிர்வினையாக அமைந்து நீங்கள் குறிப்பிட்டவை ”உண்மையன்று” எனக் கலைப்பதும் சற்று ஆறுதலாக இருந்தது.

இந்திய இராணுவத்தால் தனது சொந்த மண்ணில் நிகழ்த்தப்பட்ட வன்புணர்ச்சிகளும், பாலியல் அத்துமீறல்களும் தொடர்ந்து ஊடகங்களிலும், மனித உரிமை ஆர்வலர்களாலும் முன் வைக்கப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது. அஸ்ஸாமின் கோக்ராஜார் (kokrajhar)நிகழ்த்தப்பட்ட வன்புணர்ச்சிகள், 1991 இல் குணான் போஸ்பராவில் (Kunan Poshpara)அரங்கேறிய பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், மணிப்பூரில் நிகழும் தொடர்ச்சியான வன்புணர்வுகள் மற்றும் பெண்கள் காணாமல் போகிறார்கள் என்ற செய்திகளை அவ்வப்போது எதிர்கொண்டுதானே இருக்கிறோம். நான் இருக்கும் பகுதியில் என் சாதியைச் சார்ந்தவனோ, என் தொழிலைச் செய்பவனோ எந்தப்பிரச்சினையும் செய்யவில்லை என்றால் எந்த ஊரிலும் என் சாதியைச் சார்ந்தவனும், என் தொழிலைச் செய்பவனும் குற்றமே புரிவதில்லை என்று சொல்வதன் அபத்தைத்தான் ஜான் டயஸின் கடிதத்தில் காண்கிறேன்.

பேரழிவின் கடைசிக் கணங்களில் இந்தியா தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது பொதுமக்கள் ஆதரிக்காமல் போனதற்கு இந்திய இராணுவத்தின் மீது நிகழ்த்தப்பட்ட பிரச்சாரத்தின் கசப்புதான் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதும் ஏற்புடையதில்லை. தமிழகம் தாண்டி இந்தக் கொடுமைகள் வெளியில் தெரியாமல் போனதற்கு பிற மொழி ஊடகங்கள் இந்த விஷயத்தை கையில் எடுக்கவில்லை என்றாலும், தமிழகத்தில் பொதுமக்களிடையே ஒரு கொந்தளிப்பு இருந்ததும், முத்துக்குமரனின் தற்கொலைக்குப் பிறகாக கொந்தளிப்பு ஒரு பெரும் மக்கள் போராட்டமாக மாறும் சூழல் உருவானதும்தான் உண்மை. ஆனால் அந்த கொந்தளிப்பில் நீர் ஊற்றியதிலும், போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ததிலும் தமிழக அரசியல்வாதிகளுக்கும், இந்திய அரசுக்கும் பெரும் பங்கு இருந்ததாகவே நம்புகிறேன். இந்த மழுங்கடித்தலில் இந்திய இராணுவத்தின் மீதான பிரச்சாரம் போன்ற சிறு காரணங்களைத் தாண்டி பெரும் அரசியல் காரணங்கள் இருந்தன என்பது உங்களுக்கும் தெரிந்தே இருக்கும்.

நேற்றிரவு முகநூலில் ஒரு குறிப்பை எழுதினேன் “Controversy மட்டுமே தன் மீதான ஈர்ப்பை தொடர்ந்து நிறுத்திக் கொள்ள உதவும் என்ற மனநிலையில் ஜெயமோகன் இருக்கிறாரோ என்ற உறுத்தல் இம்சிக்கிறது” பிறகு இன்னொரு குறிப்பையும் எழுதினேன் “ஜெயமோகனின் வாசகனான எனக்கு இப்படியான மனநிலையை உருவாக்கியது அவரின் தோல்வியாகவே பார்க்கிறேன்”.

இருப்பினும்- தீராத வருத்தத்தில் இந்தக் கடிதத்தின் முதல் வரியை எழுதத் துவங்கினேன்.

நன்றி.

அன்புடன்,
வா.மணிகண்டன்
                                                ***

அன்புள்ள மணிகண்டன்,

எப்போதுமே என் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு உண்டு. நான் எழுதவந்த காலத்தில் இருந்தே.

என்ன காரணம் என்று நான் பலமுறை விளக்கியிருக்கிறேன். வழக்கமாக எல்லா தளங்களிலும் எல்லாராலும் சொல்லப்படும் விஷயங்களுக்கு அப்பால் ஏதேனும் சொல்லப்படாத, கேட்கப்படாத ஒன்று உள்ளதா என்ற பார்வை எழுத்தாளனுக்கு இருக்கவேண்டும் என நான் நினைக்கிறேன். எப்போதும் விடுபட்ட இன்னொன்றைச் சுட்டிக்காட்ட விரும்புவேன். அது பிழையாக கூட இருக்கலாம். ஆனால் அந்தக்குரலையும் கேட்டாகவேண்டும் என்று நினைப்பேன்.

அப்படிச் செய்யும்போது அது பெரும்பாலான தரப்பின் கசப்புக்கும் கோபத்துக்கும் வழிவகுக்கும். அது உணர்ச்சிகரமானதாக இருக்கையில் இன்னும் சிக்கலானது.  அது எனக்கு ஒன்றும் புதியதல்ல. நான் பிராபல்யத்தை அல்லது பரவலான ஏற்பை விரும்பக்கூடியவன் அல்ல. பெரும்பாலானவர்கள் என்னை எதிரியாக நினைத்தாலும் அதில் எனக்கு வருத்தம் இல்லை.

இந்த விஷயத்தில் எனக்கு வந்த கடிதங்கள் நான் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறேனோ என எண்ண வைத்தன. ஏனென்றால் அந்த பிரச்சாரத்துடன் ஒருகாலகட்டத்தில் நான் சம்பந்தப்பட்டிருக்கிறேன். ஆகவே அவற்றைப் பிரசுரித்தேன். அவ்வளவுதான்

ஜெ