Nov 2, 2019

நினைவூட்டல்

நாளை நடைபெறும் நிகழ்வுக்கு அழைத்து சில நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் எழுதியிருக்கிறேன். நிசப்தம் நண்பர்களுக்கு நினைவூட்டலுக்காக அதன் பிரதி...

                                                                ************

வணக்கம்.

நிசப்தம் அறக்கட்டளை கடந்த பல ஆண்டுகளாக கல்வி, மருத்துவ உதவி, கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட செயல்களில் - பெரும்பாலும் விளம்பரமின்றிச் செயல்பட்டு வருகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பயனாளிகளை மட்டும் அழைத்து அவர்களுக்கான உதவிகளைச் செய்துவிடுவோம். ஆனால், நாளை நடைபெறும் ஒரு நிகழ்வுக்காக நிறைய நண்பர்களை அழைக்க விரும்புகிறோம். 

அருப்புக்கோட்டையைச் சார்ந்த நிசப்தம் வாசகர்,  தம்முடைய பெற்றோரின் மணிவிழா கொண்டாட்டத்தை தவிர்த்துவிட்டு அந்தத் தொகையை ஆதரவற்ற பெண்களின் திருமணத்துக்கு செலவு செய்ய விரும்புவதாகச் சொல்லி முன் வந்தார். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மூன்று பெண்களைக் கண்டறிந்தோம். மூவருமே பெற்றோர் இல்லாத பெண்கள். அவர்களின் திருமணத்துக்குத் தேவையான சீர்வரிசைப் பொருட்கள் (ஒவ்வொருவருக்கும் தலா ரூ.75000/ மதிப்புள்ள கட்டில், பீரோ, கிரைண்டர், மிக்ஸி, சமையல் பாத்திரங்கள், ஒரு பவுன் நகை) உட்பட எல்லாவற்றையும் சேர்த்து 03.11.2019 அன்று கோபி ராமாயம்மாள் திருமண மண்டபத்தில் மதியம் மூன்று மணிக்கு வழங்குகிறோம்.


இந்நிகழ்ச்சியைக் கவனப்படுத்தும் போது ஆடம்பரத் திருமணங்களைத் தவிர்த்துவிட்டு அந்தத் தொகையை வேறொரு பெண்ணின் வாழ்க்கையில் ஒளியேற்ற பயன்படுத்தலாம் என்று யாரேனும் சிலருக்காவது எண்ணத் தோன்றும். இரண்டாவதாக, அந்தப் பெண்கள் தமக்காக இத்துணை உறவுகள் இருக்கின்றன என்று மகிழ்வார்கள். இந்த இரண்டு நோக்கங்களையும் மனதில் வைத்து நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கிறோம். ஞாயிற்றுக்கிழமையின் இரண்டு மணி நேரங்களை மூன்று பெண்களுக்காக ஒதுக்கித் தந்து நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு செய்யுங்கள்.

நன்றி.

மிக்க அன்புடன்,
வா.மணிகண்டன்

1 எதிர் சப்தங்கள்:

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

கண்டிப்பாக கலந்து கொண்டு அந்த மூன்று குழந்தைகள் மற்றும் மாப்பிள்ளைகளை நேரில் வந்து வாழ்த்த வேண்டும் என்று செப்டம்பர் 24,பதிவின் போதே முடிவு செய்தாயிற்று, மணி. வாழ்க வளமுடன்