கோயமுத்தூர் புத்தகக் கண்காட்சியில் ஒரு மனிதரைச் சந்திக்க நேர்ந்தது. இலக்கியவாதி. அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார். அவரிடம் பல வருடங்கள் முன்பே அறிமுகமுண்டு. நேரெதிரில் வந்துவிட்டார்.
‘வணக்கம் சார்...நல்லா இருக்கீங்களா?’ என்றேன். அது அவரது வயதுக்கும், முந்தைய அறிமுகத்துக்குமாக தந்த மரியாதை.
‘வசூல் எல்லாம் எப்படிப் போகுது?’ என்றார். என்னுடன் ஜீவகரிகாலன் நின்றிருந்தார்.
‘எந்த வசூல் சார்?’ என்றேன்.
‘ட்ரஸ்ட் நடத்துறீங்க இல்ல..அந்த வசூல்’என்றார். இந்த வரியை தட்டச்சு செய்யும் போதும் கூட ‘ன்’விகுதி தன்னிச்சையாக வருகிறது. இன்னமும் அவ்வளவு கடுப்பு ஏறிக் கிடக்கிறது. ‘உங்ககிட்ட நின்னு பேசியிருக்கக் கூடாது...’ என்று நகர்ந்துவிட்டேன். பெயரைச் சொல்லி இரண்டு மூன்று முறை அழைத்தார். திரும்பிக் கூட பார்க்கவில்லை.
‘எப்படிங்க கட்டுபடுத்திட்டீங்க’ என்று கரிகாலன் கேட்டார். அத்தனை எரிச்சலையும் சேர்த்து காறித் துப்பிவிட்டு ‘விடுங்க’ என்றேன்.
அடுத்த நாளும் புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அதே ஆள் நேரெதிரில் வந்துவிட்டார். கையில் பஜ்ஜியும் டீயும் வைத்திருந்தவர் வலுக்கட்டாயமாக நிறுத்தி பஜ்ஜியை எடுத்துக் கொள்ளச் சொன்னார். அவ்வளவு தரம் கெட்டுப் போய்விடவில்லை. மறுத்துவிட்டு கண்களை நேருக்கு நேராகப் பார்த்தேன்.
‘எனது நண்பர்களிடமும் இப்படித்தான் விளையாட்டாகப் பேசுவேன்’ என்றார்.
‘நீங்க யார்கிட்டவும் பேசிட்டு போங்க...ட்ரஸ்ட்டோட மொத்த கணக்கும் நிசப்தம் தளத்திலேயே போட்டிருக்கிறேன். எதை வைத்து விளையாடுவது என்று விவஸ்தை இல்லையா’ என்று கேட்டதற்கு வழிந்தார். அதன் பிறகு அவரிடம் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது. ஜென்மத்திற்கும் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்று நினைத்தபடி விலகி வந்துவிட்டேன்.
அடுத்தவர்களின் பணத்தை வைத்துக் கொண்டு இயங்கும் போது இப்படியான விளைவுகளைச் சந்திக்கத்தான் நேரிடும். தவிர்க்கவே முடியாது. ஆனால் குறைத்துக் கொள்ளலாம். முன்னே நம்மைவிட்டு பின்னால் பேசுகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை. எந்த ஊடக வெளிச்சமும் விழுந்துவிடக் கூடாது என்று தயங்குவதும் கூட இதற்காகத்தான். கடலூர், சென்னை வெள்ளம் வந்த சமயத்தில் சில பத்திரிக்கைகளில் செய்தி வெளியானவுடன் ஏகப்பட்ட கோரிக்கைகள் வந்தன. நாம் செய்து கொண்டிருக்கும் செயல்களுக்கும் அவர்களின் கோரிக்கைகளுக்கும் சம்பந்தமே இருக்காது. பதில் சொன்னாலும் சங்கடம்; சொல்லாவிட்டாலும் சங்கடம்.
‘அதெல்லாம் கோடிக்கணக்குல ஃபாரின் பண்ட் வருது’ என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள். அடித்து விட வேண்டியதுதானே!
அடுத்தவர்களின் பணத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கும் போது நம்மோடு பயணிப்பவர்கள் நம்மைப் புரிந்தவர்களாக இருக்க வேண்டும். இந்தச் சமூக ஊடகச் சூழலில் எப்படி ஒருவர் நம்மைப் புரிந்தவராக இருக்க முடியும் என்றால் நம் சிந்தனை ஓட்டத்தையும், செயல்பாட்டையும் தொடர்ந்து பின் தொடர்கிறவர்களுக்கு அது தெரியும். அவ்வாறு நம்மைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு மட்டும் நாம் செய்கிற செயல்கள் தெரிந்தால் போதும் என்று தெளிவாகவும் இருக்கிறேன். அதனால்தான் நிசப்தம் தாண்டி எங்கேயும் எந்தச் செய்தியும் வராமல் முடிந்தவரை தவிர்த்துவிடுகிறேன். ஃபேஸ்புக்கிலும் கூட இணைப்பு மட்டும்தான். கட்டுரை நிசப்தத்தில்தான் இருக்கும். நமக்கான வட்டம் சுருங்கினாலும் ஒன்றும் பிரச்சினையில்லை. கொஞ்சமே கொஞ்சமாகச் செய்தாலும் இந்தச் சிறு வட்டத்துக்கு முழு திருப்தியும் நம்பிக்கையுமளிப்பதாக இருந்தால் போதும்.
இலக்கியவாதிகளிடமிருந்து வெகு தூரம் விலகி வந்துவிட்டதன் காரணமும் இதுதான். நம் ஊரில் இலக்கியவாதிகள் ஏதோவொரு முனைப்பில் எழுத வந்திருப்பார்கள். பெரும்பாலும் புகழ்தான் ஆரம்பகட்டத்தில் ஈர்த்திருக்கும். அது தவறில்லை. ஆனால் ஒன்றிரண்டு எழுத்துக்கள் வெளிவந்த பிறகு வாசிப்பை நிறுத்திவிடுகிறவர்களே இங்கு அதிகம். எழுத்திலும் வாசிப்பிலும் இருக்கும் கவனம் களையும் போதும் மனம் புகழை விரும்பிக் கொண்டேயிருக்கும். அதற்காகவே தம் இலக்கியத் தொடர்புகளை தொடர்ந்து கொண்டிருப்பார்கள். நானறிந்த வரையில் நூற்றுக்கு தொண்ணூற்றைந்து சதவீதம் பேர் இப்படித்தான். திட்டினாலும் பரவாயில்லை- இதுதான் உண்மை. இரு மனிதர்களுக்கிடையில் உரையாடல் நடக்க வேண்டுமானால் இருவரில் ஒருவரிடமாவது உள்ளடக்கம் இருக்க வேண்டும். இருவரிடமும் உள்ளடக்கம் இல்லாத போது மனம் தம்மையுமறியாமல் மூன்றாமவன் ஒருவனை உள்ளே இழுத்துப் போட்டுக் கும்மியடிக்கும். இங்கே இலக்கிய வட்டம் மிகச் சிறியது. அந்த வட்டத்துக்குள் இலக்கியத்தைவிடவும் தனிமனிதர் பற்றிய உரையாடல்களே அதிகம். அந்த வட்டத்துக்குள் இருக்கும் போது இவர் நல்லவர், அவர் கெட்டவர் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதைத் தவிர்த்து வெளியில் வரும் போது கவிஞர், எழுத்தாளர், இலக்கியவாதி என்றெல்லாம் பெயரையெல்லாம் இழந்தாலும் கூட பரவாயில்லை. பற்களில் அரைபடாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்றுதான் இலக்கியக் கூட்டங்கள், எழுத்தாள நண்பர்கள் என சகலத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது.
என்னை நல்லவன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் தப்பிக்க வேறு வழி தெரியவில்லை.
என்னை நல்லவன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் தப்பிக்க வேறு வழி தெரியவில்லை.
மேற்சொன்ன சம்பவம் சமீபத்தில்தான் நிகழ்ந்தது. அதற்கு முன்பாகவிருந்தே கசப்புகள் அதிகம். எந்தவிதத்திலும் தகுதியற்ற பரிந்துரைகளை சில எழுத்தாள நண்பர்கள் செய்தார்கள். குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்திய நபருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு பணம் தேவை என்று கூட கேட்டார்கள். இன்னும் பற்பல. தவிர்க்கும் போது என்னை அறிந்த இன்னொரு சக எழுத்தாள நண்பரிடம் குறை சொன்னார்கள். நமது செயல்பாடு பற்றி எதுவுமே தெரியாமல் பேசுகிறார்களே என்றிருக்கும். அனைத்து வரவு செலவு விவரங்களையும் பொதுவெளியில் வைப்பதைத் தாண்டி வேறு எப்படி வெளிப்படையாக இருக்க முடியும் என்று குழப்பமாகவும் இருக்கும். பிரச்சினை என்னவென்றால் எழுத்தாளர் ஆகிவிட்டால் வாசிப்பது என்பதே இருக்காதே! ‘நம்மை மிஞ்சி எவன் எழுதிடுவான்’ என்று நினைக்கிறவர்கள் ‘அவனைத் தெரியாதா? ஜல்லி பார்ட்டி’ என்று சலித்துக் கொள்கிறவர்கள் நாம் எதை எழுதினாலும் வாசிக்க மாட்டார்கள். புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.
அப்படியெனில் தீர்வு என்ன?
இப்பொழுதெல்லாம் உதவி கோரி வரக் கூடிய கோரிக்கைகளில் பெரும்பாலானவை நிசப்தம் வாசிக்கிறவர்கள் வழியாக வருபவைதான். ஏதோவொரு இடத்தில் உதவி தேவைப்படும் போது ‘இப்படி ஒருத்தன் இருக்கான்ல’ என்று அவர்களுக்கு நினைவுக்கு வரும். அப்படி நினைவுக்கு வரக் காரணம் அவர்களோடு எழுத்து வழியாகத் தொடர்பில் இருப்பதுதான். இலக்கியவாதிகளிடம் தொடர்பு வேண்டுமானால்- அவர்கள் வாசிப்பதில்லை என்பதனால்- அது முகம் வழியான தொடர்பாக மட்டுமே இருக்கும். முகத்தையே காட்டாமல் வைத்துக் கொண்டால் நம் நினைப்பே அவர்களுக்கு வராது. பிரச்சினையும் இருக்காது. தப்பித்துக் கொள்ளலாம். அப்படித்தான் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். இப்படியான கசப்புகளையெல்லாம் வெளியில் எழுதிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
‘அப்புறம் ஏன் எழுதற?’ என்று நீங்கள் கேட்கக் கூடும். ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா? அதுதான் பிரச்சினை. எது இலக்கியம், எது புண்ணாக்கு, எது தவிடு என்றெல்லாம் யாராவது சண்டையிட்டுக் கொண்டிருந்தால் உள்ளே புகுந்து யாருடைய தலையிலாவது ஓங்கிக் கொட்டு வைத்துவிட்டு வந்து ‘நானும் ரெளடிதான்’ என்று மனம் துள்ளத் தொடங்கிவிடுகிறது.
7 எதிர் சப்தங்கள்:
காய்க்கிற மரம் கல்லடிபடாமல் இருக்காது. அற்பர்கள் எங்கும் உண்டு. மனதுக்கு சரி என்று படும் வழியில் முன்னேறுங்கள். சிந்திப்பதற்கு அநேக நல்ல விஷயங்கள் உண்டு. விட்டுத்தள்ளுங்கள்.
Sir I like to get your watts app no . the a/c no given below is correct or not . contact me though this mail navee1994s@gmail.com
dear manikandan
namasthe
i know how difficult it is to keep explaining things to s many who just talk
someday they will come to know about the transparency with which you are making genine efforts to help the poor and needy
just continue with steadfastness and self discipline which is more than enough
radhakrishnan
Wise men talk, because they have something to say;Fools talk, because they have to say something. - Plato
Blogger raki said...
//someday they will come to know about the transparency//
ஒரு நாளும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
புரிந்து கொள்ள முடியாது.
காரணம் அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது அறியாமை அல்ல பொறாமை.
//பாவம் இவர்கள் செய்வதை இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னித்துவிடுங்கள்//
இதை வாசித்து விட்டு கடந்து செல்லுங்கள்
சல்லிப் பயல்கள் எல்லா துறையிலும் உண்டு போல .. விட்டு தள்ளுங்கள் .. நாய் வாலை நிமிர்த்தி நமக்கு ஒன்னும் ஆகப்போவதில்லை..
-Saravanan Sekar
Post a Comment