Jul 20, 2016

ரஜினி காய்ச்சல்

கோபியில் ஒரு திரையரங்கில் கபாலி வெளியாகிறது. பத்து கிலோமீட்டர் தள்ளிச் சென்றால் இன்னொரு திரையரங்கிலும் வெளியாகிறது. இரண்டு திரையரங்குக்காரர்களும் சேர்ந்து ஊர் முழுக்கவும் போஸ்டர் அடித்திருக்கிறார்கள். அசத்தலான சவுண்ட் சிஸ்ட்டத்தில் சூப்பர் ஸ்டாரின் கபாலி வெளியாகிறது. டிக்கெட் முன்பதிவுக்கு தொடர்பு கொள்ளவும் என்று இரண்டு மூன்று எண்களைக் கொடுத்திருக்கிறார்கள். இணையத்திலேயே திரிகிறவனுக்கு வெளியுலகம் தெரியாது என்கிற கணக்குதான் எனக்கும். இரண்டு மூன்று நாட்களாக திரும்பிய பக்கமெல்லாம் இணையவாசிகள் ‘கபாலிக்கு டிக்கெட்டே கிடைக்கலை...வித்து தீர்ந்துடுச்சு’ என்று கூவிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? அதே எண்ணத்தில் நடுவழியிலேயே வண்டியை நிறுத்தி முதல் எண்ணை அழைத்தால் அவர் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். 24x7 மணி நேரமும் அவருக்கு அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கிறது போலிருக்கிறது என்ற கவலையோடு அடுத்த எண்ணுக்கு அழைத்தேன். ம்ஹூம். அதுவும் அப்படியேதான். இனி கஷ்டம் என்று வண்டியைக் கிளப்பிய சில நிமிடங்களில் அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

‘அண்ணா கபாலிக்கு டிக்கெட் இருக்குதுங்களா?’ 

‘நீங்க எங்கிருந்து பேசறீங் தம்பீ?’ என்றார்.

‘கரட்டடிபாளையதானுங்கண்ணா’

‘டிக்கெட் இருக்குது... தியேட்டர்ல வந்து வாங்கிக்குங்க’

‘வர்றதுக்குள்ள தீர்ந்துறாதுங்களா?’

‘மம்மானியா கெடக்குது..வந்து வாங்கிக்குங்க’ என்று சொல்லிவிட்டுத் துண்டித்தார். பேசி முடித்த பிறகு ‘வக்காரோலியா..எஸ்.டி.டி நெம்பரா? நாலேகால் ரூவா போச்சே’ என்று அவர் பதறியிருக்கக் கூடும். 

ஆக, டிக்கெட்டை அழைத்து விற்கிறார்கள்.

மாலையில் ஸ்ரீவள்ளி திரையரங்குக்குச் சென்றிருந்தேன். இதே திரையரங்கில்தான் ப்ளஸ் டூ விடுமுறையில் படம் பார்க்க வந்திருந்த போது பால்கனியில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த சில சில்லுண்டிகள் கை நிறைய முட்டை பப்ஸ் வாங்கி வந்து பிய்த்துப் பிய்த்து கீழே இருந்தவர்கள் மீது வீசவும் கடுப்பேறிய ஆட்கள் மேலே வந்து சில்லுண்டிகளை பிய்த்துப் பிய்த்து வீசினார்கள். அப்பொழுது நானும் சில்லுண்டிக் கணக்காகத்தான் இருந்தேன். வீசுகிற வீச்சு இடம்மாறி என் முகத்தை இடம் மாற்றிவிடுமோ என்று பயந்தபடியே இருக்கைக்குள் தலையைத் திணித்துக் கொண்டு தப்பித்து வெளியேறி ‘ங்கொண்ணிமலையான்..இனி இந்த தியேட்டர் வாசலையே மிதிக்கக் கூடாது’ என்று முடிவெடுத்த வரலாற்று ஸ்தலம் அது.

திரையரங்கில் பந்தல் அமைக்கும் வேலையை ரசிகர் மன்றத்தினர் செய்து கொண்டிருந்தார்கள். ஒன்றியத் தலைவரின் பேரன் அநேகமாக கல்லூரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருக்க வேண்டும். இவர் இன்னமும் ரஜினிமுருகன் சிவகார்த்திகேயனின் மாமனாரைப் போல அல்டாப்பாக நின்று கொண்டிருந்தார். நக்கலுக்காகச் சொல்லவில்லை- உண்மையாகவே ரசிகர் மன்றத்தில் முக்கால்வாசிப் பேர் நரை கூடி கிழப்பருவமெய்தி மேலே கருஞ் சாயத்தைப் பூசி இளமையை இழுத்துப் பிடித்திருந்தார்கள். வாயிற்படியில் அமர்ந்து ஒருவர் பெட்டியைத் திறந்து வைத்திருந்தார். அவர் திரையரங்குப் பணியாளர்.

‘அண்ணா டிக்கெட்டுங்க....’

‘எந்த ஷோவுக்கு வேணுங்?’

‘எந்த ஷோவுக்கு டிக்கெட் இருக்குங்க?’

‘எல்லாத்துக்குமே இருக்குது’

‘அப்போ மொத ஷோவுக்கு ஒண்ணு கொடுங்க’

‘இருநூறு’

திரையரங்குக்காரர்களே கள்ளச்சந்தையில் விற்கிறார்கள். வெள்ளி மற்றும் சனிக்கிழமையன்று மட்டும் இருநூறு ரூபாய் என்றார். அக்கம்பக்கத்தில் விசாரித்த போது டிக்கெட் விற்கவில்லையென்றால் வெள்ளிக்கிழமையன்றே கூட ஐம்பது ரூபாய்க்குக் கிடைக்கும் என்றார்கள். 

வெளியே வரும் போது ரசிகர் மன்றத்து தலைவர் வந்து ‘எவ்வளவு டிக்கெட் வேணும்’ என்றார். 

‘பத்து வேணும்’ என்றேன் - குத்து மதிப்பாக.

‘தியேட்டரில் எவ்வளவு சொல்லுறாங்க?’ என்றார்.

‘இருநூறுங்க’

‘நூத்தி எழுபத்தஞ்சு கொடுங்க..நான் ஏற்பாடு பண்ணுறேன்..நெம்பரைக் குறிச்சுக்குங்க...நைன் டபுள் ஃபோர்...’ என்றார்.

ரசிகர் மன்றத்துக்கு என்று தியேட்டர்காரர்கள் சில நூறு டிக்கெட்களை விற்றிருக்கிறார்கள். அதை விலை கூட்டி இவர்கள் விற்று லாபம் சம்பாதித்து தலைக்கு டை வாங்கிக் கொள்வார்கள்.

‘சந்தோஷங்ண்ணா...நான் கூப்பிடுறேன்’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.

விட்டில் பூச்சிகள் நிறைந்திருக்கிற சென்னை, பெங்களூர் மாதிரியான பெருநகரங்களில் வேண்டுமானால் டிக்கெட்டுகள் விற்பனையாகியிருக்கக் கூடும். ஆனால் கோபி மாதிரியான மூன்றாம் நிலை ஊர்களில் எல்லாம் அப்படி எந்த அதீத எதிர்பார்ப்பும் ஆரவாரமும் இல்லை. 

‘இருநூறு ரூவா இருந்தா குவார்ட்டர் அடிச்சுட்டு முட்டை புரோட்டா சாப்பிடலாம்’ என்கிற ரீதியிலான மனநிலைதான். திருப்பூர் போன்ற ஊர்களில் கூட முதல் நாள் காட்சிக்கு டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. நம்பிக்கையில்லையெனில் விசாரித்துப் பார்க்கலாம்.

ரஜினி வியாபார காந்தம்தான். இல்லையென்றல்லாம் மறுக்கவில்லை. ஆனால் அந்த காந்தத்தைப் பயன்படுத்தி உறிஞ்சுகிற அளவுக்கு உறிஞ்சுகிறார்கள். டிக்கெட்டுக்கள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக கூப்பாடு போடுகிறார்கள். டுபாக்கூர் நிறுவனங்களின் லெட்டர்பேட்களில் ‘Management is pleased to announce..' என்று விடுமுறை அளிப்பதாக படம் காட்டுகிறார்கள். விடுமுறை நாளில் படம் ரிலீஸ் செய்தால் அது சல்மான்கான்; ரிலீஸ் ஆகிற நாள் விடுமுறை அளிக்கப்பட்டால் அது ரஜினிகாந்த் என்று பில்ட் அப் கொடுக்கிறார்கள்.

இதை எழுதுவதால் எனக்கு என்னவோ ரஜினி வெறுப்பு என்றெல்லாம் கருத வேண்டியதில்லை. ரஜினியின் மிகத் தீவிரமான ரசிகன் நான். அதை ஒத்துக் கொள்வதில் தயக்கம் எதுவுமில்லை. ஆனால் எல்லாவற்றிலும் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். பெங்களூரிலிருந்து சென்னைக்கு விமானம் பிடித்து வந்து படம் பார்க்கிறார்கள் என்று கதை அளந்தால் எப்படி நம்புவது? அப்படியான ஆட்கள் யாராவது ஒருவரையாவது அடையாளம் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். பெங்களூரில் அதிகபட்ச டிக்கெட் விலை ஆயிரம் கூட இருக்காது. பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து விமானத்தில் பயணித்து சென்னையில் படம் பார்ப்பானா?.

சரி விடுங்கள்.

இணையமே கபாலி கோவணத்தோடு சுற்றும் போது ‘நான் எல்லாம் எவ்வளவு பெரிய அப்பாடக்கர் தெரியுமா’ என்று ரஜினியை விமர்சித்து எழுதி அம்மணமாகச் சுற்றினால் கடித்துக் குதறிவிடுவார்கள். ஒண்ணே ஒண்ணு; கண்ணே கண்ணு.

முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கிவிட்டேன். அம்மாவிடம் ‘வெள்ளிக்கிழமை ஆறரை மணிக்கு படம் பார்க்க போறேன்’ என்றேன்.

‘என்ன படம்?’ என்றார்.

‘கபாலி டா..’

‘பொழைக்கிறவன் எவனாச்சும் கானங்காத்தால சினிமா தியேட்டருக்கு போவானா? உருப்படற வழியைப் பாரு’ என்றார்.

அது தெரிந்தால் நான் ஏன் இப்படி இருக்கப் போகிறேன்?

நெருப்புடா..நெருங்குடா பார்ப்போம்...

7 எதிர் சப்தங்கள்:

Moorthi Erode said...

http://cinema.dinamalar.com/kabali/detail.php?id=48787

ஏர் ஆசியா சிறப்பு விமானம்

Abdul Azeez said...

எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தும் பணம் இல்லாமல் தவிக்கும் மாணவி: முதல்வர் கரை சேர்ப்பார் என நம்பிக்கை
http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article8878958.ece?homepage=true
Today Tamil Hindu news. I know your policy that you need some good reference. I don't know personally. but looks like deserved candidate for some help. If possible do that.

Abdul Ajees

Umesh Srinivasan said...

இன்றைய கார்ப்போரேட் கலாச்சார உலகில் ரஜினியின் பெயரை வைத்து எல்லோரும் நன்றாகக் கல்லா கட்டுகிறார்கள் என்பது மட்டும் நன்கு புரிகிறது. இந்த ஜுரம் என்னையும் விடவில்லை ; தோஹாவில் நானும் நண்பனும் இன்றைய இரவுக்காட்சிக்கு முன்பதிவு பண்ணிட்டோம். நல்லாயிருக்கும் என்ற நம்பிக்கை. இருந்தா மகிழ்ச்சி.

Catherine Augustine said...

‘கபாலி டா..’/// உணர்ச்சி வேகத்துல 'டா ' போட்டுட்டீங்க ன்னு நெனைக்கிரேன்

நிகழ்காலத்தில்... said...

திருப்பூரில் இணையவழி முன்பதிவு இப்போதுகூட கிடைக்கிறது

சிங்கார செல்வராஜன் said...

பாண்டிசேரியின் துணைநிலை ஆளுனரின் கபாலி பற்றிய இன்றைய அறிவிப்பை படியுங்கள் .... தமாஷ் கூடும்....!

Vinoth Subramanian said...

Good analysis. Write a review after watching it. Hope you will write it.