(1)
வா. மணிகண்டன் எழுதியிருக்கும் நாவல். பெயர்க் காரணமே சுவாரஸ்யமாக விளக்குகின்றார். கங்கா யமுனா சரஸ்வதி என்பதில் மூன்றாவது நதியை பார்க்க முடியாது. கூடுதுறையில் காவிரியும் பவானியும் தெரிகின்றன அமுத நதி தெரிவது இல்லை. ஆனால் மூன்றாவது நதி இணைகையில்தான் இந்த இடங்கள் சிறப்பு பெறுகின்றன. இப்படி கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ நதிகள்- அவற்றை ஒத்தவள்தான் இந்த கதையின் நாயகி பவானியும் என்று சொல்கின்றார்.
வா. மணிகண்டன் எழுதியிருக்கும் நாவல். பெயர்க் காரணமே சுவாரஸ்யமாக விளக்குகின்றார். கங்கா யமுனா சரஸ்வதி என்பதில் மூன்றாவது நதியை பார்க்க முடியாது. கூடுதுறையில் காவிரியும் பவானியும் தெரிகின்றன அமுத நதி தெரிவது இல்லை. ஆனால் மூன்றாவது நதி இணைகையில்தான் இந்த இடங்கள் சிறப்பு பெறுகின்றன. இப்படி கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ நதிகள்- அவற்றை ஒத்தவள்தான் இந்த கதையின் நாயகி பவானியும் என்று சொல்கின்றார்.
வா. மணிகண்டன் பற்றி இரண்டு வருடங்களாகத்தான் தெரியும். அவரது நிசப்தம் தளத்தினை தவறாமல் வாசிப்பவன் என்ற வகையில் அவரது எழுத்தாளுமை எனக்கு பரிச்சயமான ஒன்று. தேவையில்லாத வர்ணணை வம்பளப்புக்கள் இல்லாது சுவாரஸ்யமாக பக்கத்து வீட்டு அக்காவிடமோ அல்லது உடன் படிக்கும் நண்பனிடமோ கதை கேட்பது போன்ற ஓர் எழுத்து. படிக்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாது. முடித்துவிட்டுதான் ஓய வேண்டும். இவரது முந்தைய நூல்களில் மசால் தோசை 38 ரூபாய் சென்ற வருடம் புத்தக கண்காட்சியின் போது வெளியிட்டார். வாங்கி படித்தேன். அன்றாடம் நம் சமூகத்தின் ஊடே புழங்கும் சாமானியர்களைப் பற்றிய சரித்திரம் அது. மூன்றாம் நதியின் நாயகியும் ஓர் சாமானியப் பெண் தான்.
கதையை அவள் தான் தொடங்கி வைக்கிறாள். கனத்த இதயத்தோடு கடைசி பக்கத்தை முடித்து வைப்பவளும் அவள்தான். பெங்களூரூ போன்ற மாநகரங்களில் வசிப்போருக்கு குடிநீர்த் தேவை எத்தனை அத்தியாவசியம். அவை எங்கிருந்து எப்படி கிடைக்கிறது. ஒரு பாட்டில் நீருக்குள் புகுந்திருக்கும் நீர் அரசியல் உங்களுக்குத் தெரியுமா? இருபது ரூபாய் கொடுத்து ஒரு பாட்டில் நீரை வாங்கி பாதிக் குடித்துவிட்டு கீழே எறிந்துவிட்ட செல்லக் கூடியவரா நீங்கள்? இந்த கதையை படித்த பின் அப்படி எறிய நீங்கள் யோசிப்பீர்கள். அப்படி யோசிக்கவில்லை என்றால் வருங்காலத்தில் நீங்கள் நிறைய யோசிக்க வேண்டியிருக்கும். மக்கள் எப்படி வறண்டு போன நிலங்களால் தங்களது வருவாயை இழந்து பெருநகரமான பெங்களூரூ போன்ற நகர்களுக்கு பிழைக்கச் சென்று வாழ்க்கையை இழக்கிறார்கள் என்பதை காட்சி படுத்தும் விதம் சிறப்பு.
பெங்களூர் புறநகர் பகுதிகள் அங்கு குவியும் லே-அவுட் வீடுகள், அவற்றின் நீர்த் தேவை. அவற்றிற்காக செய்யப்படும் முயற்சிகள். நீர் வியாபாரம், அதில் மோதல், இரு வியாபாரிகளுக்கான மோதலில் எப்படி நாயகி பாதிக்க படுகின்றாள் இதுதான் கதை. நீர் அரசியலில் நீச்சலிட முடியாமல் தோற்றுப் போகும் மூன்றாம் நதியான பவானிகள் பெங்களூரூவில் மட்டும் அல்ல! வேறு பெருநகரங்களில் கூட இருக்கலாம். வருங்காலத்தில் மூன்றாவது உலகப் போர் என்று ஒன்று நடந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று சொல்கிறார்கள். அப்படியாம்ன நீர் போரில் தான் பவானி மூன்றாம் நதியாக காணாமல் போகின்றாள்.
எளிமையான எழுத்து நடையில் எல்லோருக்கும் புரியும்படியான பாணியில் கதையை நகர்த்தி செல்கின்றார். விறுவிறுப்பு, சஸ்பென்ஸ், த்ரில்லர் என்று இல்லை. ஆனால் அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்கும் என்று யோசிக்க வைக்கிறது. சிறு குழந்தையாக பெங்களூர் புறநகரில் அடியெடுத்து வைக்கும் நாயகி தன் கிராமத்து சூழலை மறந்து பெங்களூர் அடித்தட்டு மக்கள் சூழலில் வளர்ந்து எத்தனையோ ஏமாற்றங்களை சந்தித்து ஏற்றம் பெறும் சூழலில் வாழ்க்கையைத் தொலைக்கின்றாள். அவள் உழைப்பு எல்லாம் வீணாகிப் போகின்றது நீரூக்கு நடக்கும் போரில்.
எல்லோரும் வாசிக்க வேண்டிய சிறப்பான நாவல். புத்தகத்தின் வடிவமைப்பும் அழகு, தாள்களும் தரமாக அமைந்துள்ளது.
இதன் மூலம் கிடைக்கும் தொகை நிசப்தம் அறக்கட்டளைக்கு சென்று அறச்செயல்களுக்கு செல்லவிருக்கிறது என்பதும், இந்நாவல் ஏலத்தில் விடப்பட்டு அதன் மூலம் திரட்டப் பட்ட இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தொகை ஏழைப் பெண்களின் கல்வி உதவிக்கு பயனளிக்க உள்ளது என்பதும் கூடுதல் தகவல்.
***
(2)
(2)
மூன்றாம் நதியில் மூழ்கி எழுந்துவிட்டேன். எனக்கு முழுத் திருப்தியில்லாத முழுக்குதான். எல்லாப் பாத்திரங்களுமே ஒரு சிறுகதைக்குரிய அளவிலேயே படைக்கப்பட்டதோ எனும் எண்ணம் தோன்றியது.
ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கட்டுரை போல். தனியாகவும் கூட படிக்கும்படியான வடிவில் இருந்தன.
எல்லாப் பாத்திரங்ளையும் இன்னும் அழுத்தமாகப் படைத்திருக்க உங்களால் முடியும். பக்கங்களை மனதில் கொண்டு படைத்த படைப்பு என்பதால் இந்த நிகழ்வென்று நினைக்கிறேன்.
300 பக்கங்களில் படைத்திருந்தால் ஒரு முழுமையான நாவலாகவும் மனதில் நெடுநாள் தங்கும் பாத்திரங்களாகவும் அமைந்திருக்கும் என்பது என் எண்ணம். மீண்டும் ஒருநாள் பேசலாம்..அமாசை, பவானி, உமா, லிங்கப்பா, பால்காரர், ஏன் பவானியின் பள்ளிக்காதலன் அனைவருமே மேலும் பல பக்கங்கள் உலா வந்திருக்கவேண்டியவர்கள். வீணாகிவிட்டார்களே என்ற வருத்தமிருக்கிறது.
-புகழேந்தி
***
(3)
(3)
மூன்றாம் நதி - வா.மணிகண்டன்
பெங்களூரைக் கதைக் களமாகக் கொண்டு பவானி என்கிற பெண்ணின் வாழ்க்கை கதையாகச் சொல்லப் படுகிறது. பெங்களூரின் அசுர வளர்ச்சிகளும் மாற்றங்களும் அந்தப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பேசுகிறது கதை. அந்த வகையில் பெங்களூரின் முற்காலத்தையும் அதி வேக மாற்றத்துக்குள்ளாகிச் சிறிது சிறிதாய்ச் சிதையும் அந்நகரத்தின் ஆன்மாவையும் பளபளப்பான வெளிப்புறம் தாண்டி அந்நகரத்தின் அடியாழத்தில் வசிக்கும், ஒரு வகையில் அந்த நகரத்தின் ஆதார ஓட்டத்தைத் தாங்கிப் பிடிக்கும் முற்றிலும் பரிச்சயமற்றதொரு உலகைப் பெரும்பாலும் எவ்வித சமரசங்களும் இல்லாமல் காட்டுகிறது.
இது போன்ற பெரு நகரங்கள் வீங்கி வளரும் போது சந்திக்கும் ஆகப் பெரிய பிரச்னையான தண்ணீர்ப் பிரச்னையை மையமாகக் கொண்டு, அந்தப் பிரச்னையை அழுத்தம் திருத்தமாகச் சொல்வது ஒரு மிகப்பெரிய ப்ளஸ். படித்து முடித்தவுடன் சில நாட்கள், அல்லது சிறிது நேரமேனும் கதையையும் கதை மாந்தர்களையும் பற்றி வாசிப்பவனை அசை போடச் செய்வது ஒரு படைப்பின் பல வெற்றிகளுள் ஒன்று. அதை இந்தப் படைப்பு பெரிதாய் மெனக்கெடாமல் செய்திருக்கிறது.
குறைகள் என்று பார்த்தால் சில விஷயங்களைச் சொல்லலாம்.
எழுத ஆரம்பிக்கும் போதே நூறு ரூபாய் விலை தான். நூறு பக்கங்கள் தான் என்று முடிவு செய்து கொண்டு எழுத்தாளர் எழுத ஆரம்பித்தது போல் தெரிகிறது. இதனால் கதை முடியும் போது பவானியின் வாழ்க்கையை பாஸ்ட் பார்வேர்டில் பார்த்த உணர்வையே தருகிறது. பவானியின் கதையை பெங்களூரின் பின் புலத்தில் சொல்வது தான் எழுதியவரின் நோக்கம் என்பது புரிகிறது. ஆனால் சில இடங்களில் மாறி மாறி அத்தியாயங்கள் கடக்கும் போது, பெங்களூரின் பிரச்னைகள் பற்றிய பகுதிகள் அதிக சுவாரசியம் தருவதாயும் பவானி சம்பந்தப் பட்ட பகுதிகள் வேகத் தடையாகவும் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
பவானியின் இள வயதுச் சம்பவங்கள் இன்னும் கொஞ்சம் அழுத்தமாய்ச் சொல்லப் பட்டிருக்கலாம். அதைச் செய்திருந்தால் சித்திக் கொடுமை போன்ற க்ளிஷேக்கள் கதைக்குத் தேவையெனினும் இப்போது தெரிவது போல் அயற்வாகத் தெரிந்திருக்காது. மேலும் பெரும்பான்மைக் கதை மூன்றாம் மனிதனின் பார்வையிலேயே சொல்லப் படுகிறது. இதைச் சற்றே மெருகேற்றிக் கொஞ்சம் உரையாடல் வழிக் கதை நகர்த்தியிருந்தால் சிற்சில இடங்களில் ஆவணப் படம் பார்க்கும் உணர்வு ஏற்பட்டிருப்பது குறைந்திருக்கும்.
எழுத்தாளரின் வலைத்தளத்தை வழக்கமாக படிப்பதால் நாவலின் நடை கிரகித்துக் கொள்வதற்கு எளிதாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் நாவலில் பிரத்யேக நடை என்று இல்லை. மிகவும் எளிமையான படிப்பவர்களை துன்புறுத்தாத வாக்கியங்கள்.
குறைகள் இருப்பினும் இந்நாவல் நிச்சயம் பாராட்டுக்குரியதே. நல்லதொரு வாசிப்பனுபவத்தையும் தருகிறது.
ஹரீஷ்.
***
நாவலின் பக்கங்கள் குறித்தான விமர்சனத்திற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
இவ்வளவு பக்கங்கள் என்றும், இதுதான் விலை என்றும் முடிவு செய்யவில்லை. ஆனால் நாவல் சிறியதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஒரு அத்தியாயமும் இன்னொரு அத்தியாமும் தனித்தனியாகத் தெரிய வேண்டும் என்றும் சேர்த்து வாசிக்கும் போதும் நூலிழைத் தொடர்பு இழையோட வேண்டும் என்பதும் ஏற்கனவே முடிவு செய்திருந்ததுதான்.
குறைந்த பக்கங்கள் என்பதற்கு நிறையக் காரணங்கள் இருந்தன. நிறையப் பக்கங்கள் வேண்டுமா என்பதற்கு எனக்கு அப்பொழுது சரியாக ஒரு காரணமும் கிடைக்கவில்லை.
நாவல் பற்றிய தொடர்ச்சியான கருத்துக்களுக்கு நன்றி.
எழுத்து பற்றிய கருத்துக்கள் உடனடி விளைவு எதையும் ஏற்படுத்திவிடாது. ஆனால் மனதுக்குள் பதிந்துவிடும். அவை அவ்வப்போது நம்மையுமறியாமல் நம் எழுத்துக்களில் வெளிப்படும் - அதுதான் எழுத்து குறித்த உரையாடலின் தாக்கம் என்பது.
- மணிகண்டன்
1 எதிர் சப்தங்கள்:
நன்றிங்கோவ்
Post a Comment