Aug 26, 2014

யோவ்..வாழ்த்துக்கள்

அபிலாஷ் இந்த வருடம் சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருதை வாங்குகிறார். எழுத்தில் தடம் பதிக்கும் முப்பத்தைந்து வயதுக்குள்ளான இளைஞர்களுக்கு வழங்கப்படும் விருது இது. மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விருதுக்கு அபிலாஷ் எல்லாவிதத்திலும் தகுதியானவர்தான். எடுத்துக் கொண்ட விஷயத்தில்- அது கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, இலக்கியமாக இருந்தாலும் சரி அல்லது அரசியல் செய்தியாக இருந்தாலும் சரி- அபிலாஷ் அளவுக்கு நுண் பரிமாணங்களோடு எழுதும் இளைஞர்கள் தமிழில் அரிது. விவரணைகளாலும் துல்லியத் தன்மைகளாலும் தனது எழுத்தை நீட்டிச் செல்லும் அபிலாஷுக்கு இருக்கும் மிக ஆழமான வாசிப்பும் எழுத்தை புரிந்து கொள்ளும் திறனும் எனக்கு எப்பொழுதுமே ஆச்சரியமளிப்பவை. 

அபிலாஷால் எழுதவும் வாசிக்கவும் முடியாமலும் இருக்க இயலுமா என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்பாக அவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. சில நாட்கள் நினைவு தடுமாறியிருந்ததாகச் சொன்னார்கள். அழைக்கும் போதெல்லாம் அவரது மனைவிதான் பேசுவார். ஐசியூவில் இருப்பதாகவும் தேறி வருவதாகவும் சொன்னார். சில நாட்களுக்குப் பிறகு அவர் தேறியவுடன் அபிலாஷூடன் பேச முடிந்தது. ‘எப்படி இருக்கீங்க?’ என்றேன். ‘நல்லா இருக்கேன்..என்ன வாசிச்சீங்க’ என்றார். மருத்துவமனையில் இருக்கிறார். நினைவு தடுமாறி திரும்பியிருக்கிறது. ஆனால் பேச்சின் இரண்டாவது வரி ‘என்ன வாசிச்சீங்க’. அந்த ஆர்வம்தான் அபிலாஷ் மீது ஈர்ப்பை உருவாக்குகிறது.

படைப்பாளிகளிடமிருக்கும் நிறைய கிறுக்குத்தனங்கள் அவரிடமும் உண்டு. சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பார். திடீரென்று ‘அந்த நாவல் சரியில்லைங்க’ என்று ஜம்ப் அடிப்பார். எதற்காக திசை மாறினார் என்று தெரியாது. ஆனாலும் சுவாரசியமானதாகத்தான் இருக்கும். எனக்குத் தெரிந்து கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நான்கைந்து வேலைகளாவது மாறியிருப்பார். ஆனால் இந்த நிலையின்மை கூட அவருக்கான அனுபவங்களாகத்தான் பார்க்கிறேன். தனக்கான சந்தோஷங்களையும், கசப்புகளையும் தொடர்ந்து அனுபவங்களாக சேகரித்துக் கொண்டேயிருக்கிறார். 

அபிலாஷ் நிறைய எழுதுகிறார். நாவல், சிறுகதை, பத்தி எழுத்துக்கள், கவிதை என அனைத்து தளங்களிலும் இயங்குகிறார். மொழிபெயர்ப்பு செய்கிறார். கிரிக்கெட் பற்றி எழுதுகிறார். மனோவியல் கட்டுரைகள் எழுதுகிறார். அரசியல் பற்றி எழுதுகிறார். இலக்கியம் பற்றி பேசுகிறார். முனைவர் பட்ட ஆராய்ச்சியைச் செய்து வருகிறார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழ் எழுத்து வெளியில் அபிலாஷின் தீவிரத் தன்மை உண்மையிலேயே பிரமிப்பூட்டக் கூடியது. அவரது அறிவும், சலிப்படையாமல் அவர் எழுதுவதும் ஆச்சரியமளிக்கக் கூடியது.

விருதுக்கு நாஞ்சில் நாடனும், பிரபஞ்சனும் சரியான ஆளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 

இந்த விருதை ‘கால்கள்’ நாவலுக்கான விருது என்று கொடுத்திருக்கிறார்கள் என்றாலும் அபிலாஷ் என்ற இளைஞனின் எழுத்துக்கும் உழைப்புக்குமான அங்கீகாரமாகவே எடுத்துக் கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரையிலும் எழுத்தாளனுக்கு விருதுகள் மிக அவசியமானவை. அவை அவனை கவனப்படுத்துகின்றன. அவனது எழுத்துக்கு வெளிச்சத்தை கொடுக்கிறது. அவனுக்கான புதிய வாசக பரப்பை கொண்டு வந்து சேர்க்கிறது. இந்த உற்சாகம் எழுதுபவனை இன்னமும் கூடுதலான உற்சாகத்துடன் எழுதத் தூண்டுகிறது. அதுவும் முப்பத்தைந்து வயதுக்குள்ளாக அவன் இத்தகைய கவனத்தை பெறுவது மிக அவசியமும் கூட. 

அடுத்த பத்தாண்டுகளில் அபிலாஷ், லக்ஷ்மி சரவணக்குமார் போன்றவர்கள் தமிழ் இலக்கியத்தின் நிகழ்கால முகங்களாக கொடிபறக்கச் செய்யக் கூடும். இவர்களிடம் அத்தகைய வேகத்தையும் தனித்துவமான உழைப்பையும் அதே சமயம் தீவிரத்தையும் பார்க்க முடிகிறது. 

இந்த விருது அறிவிக்கப்பட்டவுடன் சில நண்பர்கள் ஃபேஸ்புக்கில் விமர்சித்திருந்தார்கள். ஒரு விருது அறிவிக்கப்படும் போது இத்தகைய விமர்சனங்கள் இயல்பானதுதான். ஆனால் இந்த விமர்சனங்கள் இப்போது தேவையில்லை என்று நினைக்கிறேன். எனக்கும் அபிலாஷ் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், அதே சமயம் இந்த விருதைப் பெற்றுக் கொள்ளும் அனைத்து தகுதிகளும் அபிலாஷூக்கு இருக்கின்றன. 

அபிலாஷ் திருட்டுசாவி என்ற தனது வலைப்பதிவில் தொடர்ந்து எழுதுகிறார். இன்மை என்றொரு இலக்கிய இதழை நண்பர்களோடு சேர்ந்து நடத்துகிறார். இவை தவிர அம்ருதா, உயிர்மை போன்ற இதழ்களில் தனது தொடர்ச்சியான பங்களிப்பின் மூலம் தமிழ் எழுத்துலகில் தனக்கான இடத்தை அழுத்தமாக  பதிவு செய்து வருகிறார்.

அவருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். 

3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

''திருட்டுசாவி"
ன்னா திருடுன சாவியா? அல்லது திருடுவதற்காக பயன்படுத்தும் வேறொரு சாவியா?.

சேக்காளி said...

"ஏன் தினமும் எழுதுகிறாய்" க்கு பின்னூட்டத்துல சொல்லத்தான் செஞ்சேன். அதுங்காட்டியும் ரெண்டாவது பதிவா.

அமர பாரதி said...

அபிலாஷுக்கு வாழ்த்துக்கள்.