Jun 24, 2014

கோபப்படாதீங்கய்யா

நஸ்ருதீன் ஷா எழுதிக்கொள்வது.

நீங்கள் எழுதியிருந்தது நூற்றுக்கு நூறு உண்மை. அப்படியே உடன்படுகிறேன். ஆனால் இதை உங்களுக்கு அனுப்பியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் தொலைபேசியில் அழைத்துச் சொன்னமையாலும், படித்த பின் ஏற்பட்ட பிறழ்வின் அவசரத்தில் எதையும் உளறிவிடக்கூடாது என்பதற்காகவும் பதிலை ஒரு நாள் கழித்து எழுதுகிறேன். பலமுறை உங்கள் கருத்துக்களுக்கு முரண்பட்டாலும் அதனை அப்படியே விட்டுவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இம்முறை என் அகத்தை சீண்டிவிட்டமையால் விடமுடியவில்லை.

நான் கண்டுகொள்ளப்படவில்லை என்று எழுதியிருந்தேன். உண்மை. நான் இரண்டேகால் ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய முதல் தமிழ்ப்பதிவை வெளியிட்டபின் மூன்று நாட்களுக்குப்பின்னரே இரண்டாவது ஹிட் கிடைத்தது. இன்று என் பதிவுகளுக்கு குறைந்தது 30 ஹிட்டுகள் வருகின்றன. இதுகுறித்து நான் கவலைப்பட்டதே இல்லை. காரணம் எனக்கு எழுத்து மட்டுமே முக்கியமே ஒழிய அதன் மூலம் Recognition பெறுவது எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

ஆனால், நான் பெயரும் புகழும் கிடைக்கவில்லையென புலம்புவதாகவும் அதற்கு நீங்கள் அறிவுரை செய்வதாகவும் இருந்தது அந்தக் கட்டுரை. மிகவும் ஏமாற்றமடைந்திருக்கிறேன். புறந்தள்ளப்படுவது என்பது புதியவன் என்பதால் இவனெல்லாம் என்ன எழுதியிருப்பான் என்ற நினைப்பில் நெருங்கிய இலக்கியவாதிகள் கூட புறக்கணிப்பதையே எழுதியிருந்தேன். நான் எழுதுவதற்கும் ஜெமோ சாரு எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஏன் அவை உச்சமாக இருக்கின்றன என்பதை வாசிப்பின் மூலமும் என் எழுத்தின்பால் மற்றவர்களின் மதிப்பீட்டைக்கொண்டும் உணர முற்படுகிறேன்.

வாசிப்பே அறியாத என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என் மட்டிக்கதைகளையெல்லாம் நல்லா இருக்கு என்பார்கள். அதற்கு சிரித்து வைப்பேன். எங்கள் கம்பெனியில் உள்-வலைதளம் இருக்கிறது. வெளியாட்கள் யாரும் பார்க்கமுடியாது. இங்கு விமு போன்ற சில எழுத்தாளர்களும் உண்டு. சிலர் நன்றாக எழுதுவார்கள் சிலர் சுமாராக எழுதுவார்கள். அங்குதான் ராஜனை கண்டுபிடித்தேன். (இதையெல்லாம் உங்களிடம் சொல்லக் காரணம் என்னவெனில் இந்த தளத்தில் தான் நான் எழுதுவதை சோதிக்கிறேன்)

சிலர் ஆஹா அருமை என்பார்கள். வாசிப்பு குறித்த தகவல்கள் புத்தக அனுபவம் போன்றவற்றைப் படிக்கும் சிலர் நீங்கதான் எனக்கு புக் படிக்க கத்து தரணும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் நான் கண்டுகொள்ளமாட்டேன். வெறுமனே சிரித்துவிட்டு வந்துவிடுவேன். ஆனால் எவரேனும் ‘சரியில்லை – கேவலம்’ என்று சொன்னால் அவர்களிடம் ‘எதன் அடிப்படையில் இது சரியில்லை என மேன்மேலும் விசாரித்து அதனை சரி செய்து கொள்வேன். இதுவரையிலும் அப்படித்தான் நடந்திருக்கிறது.

எனக்கு என் தரம் என்னவென்று தெரியும் அதனால்தான் நான் ‘அருமை’ போன்ற கருத்துக்களை ஏற்பதில்லை.

ஒரே ஊர்க்காரர். ஏற்கனவே பேசியிருக்கிறோம் என்பதன் அடிப்படையிலேயே உங்களுக்கு என் படைப்புகளை அனுப்பினேன். என்னுடைய கேள்விகட்கு எந்தவித பதிலும் தராமல் நீங்கள் இக்கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள். அது உங்கள் உரிமை. இக்கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

என்னுடைய பயணம் ஒன்றே ஒன்றுதான் இன்னும் 30 வருடங்களுக்குள் ( நான் அவ்வளவுதான் வாழக்கூடும் என்ற கணிப்பில்) காலத்தில் நிற்கக்கூடிய ஒரு படைப்பையாவது படைக்கவேண்டும்.

அவ்வளவே.

நன்றி.

ஷா.
                                                                   **

உங்கள் பதில் சந்தோஷமளிக்கிறது. 

ஏற்கனவே எழுதியிருக்கிறேன்- எசகுபிசகான மற்றும் செய்தி வலைத்தளங்களைத் தவிர தமிழில் பிற எந்த வலைப்பதிவும் ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் பேரைத் தாண்டி வாசகர்களை ஈர்க்குமா என்பது சந்தேகம்தான். ஏதாவது கலவரங்களைச் செய்தால் வேண்டுமானால் இந்த எண்ணிக்கையைத் தாண்டலாம்- அதுவும் கூட தற்காலிகம்தான். தொடர்ந்து வருவார்களா என்று சொல்ல முடியாது. இந்த நிசப்தம் தளத்திற்கு புதிதாக வருபவர்களில் தினமும் இரண்டு சதவீதமாவது ஆபாசத்தைத் தேடித்தான் வருகிறார்கள். கூகிளுக்கும் எனக்கும் எந்தப் பகையும் இல்லை- ஆனாலும் மிக வக்கிரமான தேடலை நிகழ்த்தினால் நிசப்தத்தைக் கண்ணில் காட்டிவிடுகிறது. 

எப்படியும் தமிழர்களில் ஒரு கோடி பேராவது இணையத்தில் புழங்கக்கூடும். இதில் ஐந்தாயிரம் என்பது எத்தனை சதவீதம் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்த எண்ணிக்கையில் வாசகர்களை அடைவது பெரிய காரியம் இல்லை. தொடர்ந்து எழுதுகிறீர்களா? வித்தியாசமாக எழுதுகிறீர்களா? சுவாரசியமாக எழுதுகிறீர்களா என்பதெல்லாம்தான் முக்கியம். முயன்று பாருங்கள். ஆறு மாதத்தில் இந்த இலக்கை அடைந்துவிடலாம்.

இணையத்தில் எழுதி எழுதி எதைச் சாதிக்கப் போகிறாய் என்று யாராவது கேட்பார்கள். அவர்கள் கேட்கும் போது பார்த்துக் கொள்ளலாம். ஆனால் ‘எழுதி எழுதி’ என்று அடுத்தவர்களைச் சொல்ல வையுங்கள். அதற்காக இடைவிடாமல் எழுதுங்கள். அதைத்தான் consistency என்று சொல்லியிருந்தேன். இணையத்தில் கொஞ்சமாவது கவனத்தைக் கவர இதுதான் சூட்சமம். இடைவிடாமல் எழுதுவதற்கு நிறைய உள்ளுக்குள் வாங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். நான்கு நாட்கள் தொடர்ந்து எழுதினால் மண்டை காலியாகிவிட்டது போல இருக்கும். எதையாவது உள்ளிட்டு நிரப்ப வேண்டும். ஆரம்பகாலத்தில்தான் இது கஷ்டம். போகப் போக பழகிவிடும்- யாராவது பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு பதிவுக்கான வஸ்து கிடைத்துவிடும். சாலையில் யாரையாவது பார்க்கும் போது ஒரு கதை கிடைத்துவிடும். செய்தி கேட்கும் போது ஒரு சுவாரசியத்தைப் பிடித்துவிடலாம். எழுதுவது ஒரு பழக்கமாகிவிடும்.

இதெல்லாம் வெறும் இணையத்தளத்துக்குத்தான்.

இதை வைத்துக் கொண்டு எந்தக் காலத்திலும் சுஜாதாவாகவோ, சுந்தர ராமசாமியாகவோ ஆக முடியாது. அதற்குத் தனியான உழைப்பு தேவை. தமிழின் இலக்கிய வடிவங்களான நாவல், சிறுகதை போன்றவற்றில் நம்மை நிரூபிக்க வேண்டும். அதற்கு எழுத்து வசமாக வேண்டுமல்லவா? முன்பெல்லாம் பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்புவார்கள். நிராகரிப்பார்கள். எங்கேயோ பிரச்சினை என்று திருத்துவார்கள். இன்னொரு முறை அனுப்புவார்கள். திருப்பி அனுப்புவார்கள். இப்படி தொடர்ந்து கொண்டிருக்கும் போது ஏதாவது சமயத்தில் எழுத்து கைவசமாகும். பிறகுதான் எழுத்தாளராவார்கள். இந்த எழுதுதல்- திரும்பப் பெறுதல்- திருத்துதல்- மீண்டும் எழுதுதல் என்பதை Tuning என்கிறோம். இந்த டியூனிங்கைச் செய்து கொள்ள இணையம் ஒரு வரப்பிரசாதம். ஆறு மாதம் தொடர்ந்து எழுதிப் பாருங்கள். எவ்வளவு பெரிய கட்டுரையையும் அரை மணி நேரத்தில் தட்டச்சு செய்துவிடலாம். பதிவிடும் போதே தெரிந்துவிடும்- இந்தக் கட்டுரை வரவேற்பைப் பெறுமா அல்லது மொக்கையாகிவிடுமா என்று.

இந்த சூத்திரங்களை எல்லாம் தெரிந்து கொண்டாலே இணையத்தில் மற்றவர்களை சற்று கவனிக்க வைத்துவிடலாம்.

உங்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ, தாழ்வுணர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவோ முந்தைய கட்டுரையை எழுதவில்லை. அதனால்தான் பெயர் கூட குறிப்பிடாமல் எழுதியிருந்தேன். அப்படியிருந்தும் உங்களை அந்தக் கட்டுரை உசுப்பேற்றியிருந்தால் மெத்த மகிழ்ச்சி. சவாலாகவே சொல்கிறேன் - ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பேரை படிக்க வைத்துக் காட்டுங்கள் பார்க்கலாம். அப்படிச் செய்துவிட்டு ஒரு தகவலை அனுப்புங்கள். முதலில் மகிழ்ச்சி அடைபவன் நானாகத்தான் இருப்பேன்.

ஆனால் ஒன்று - ஜெமோ, சாரு எழுதுவதற்கும் நான் எழுதுவதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்கள் பார்த்தீர்களா? இந்தக் கேள்விதான் அபத்தமாக இருக்கிறது. சாரு, ஜெமோவின் உழைப்பில் ஒன்றரை சதவீதத்தைக் கூட நீங்கள் எழுதுவதாகச் சொல்லும் இந்த இரண்டேகால் ஆண்டுகளில் செய்திருக்க மாட்டீர்கள் என்பதை புரிந்து கொண்டால் உங்களிடமிருந்து இத்தகைய மின்னஞ்சல்கள் வந்திருக்காது நஸ்ருத்தீன். நாம் பயணிக்க வேண்டிய தூரம் வெகுதூரம் இருக்கிறது. இப்பொழுதே எவரெஸ்டின் உச்சியில் கொடிபறக்க விட வேண்டும் என்று நினைப்பதுதான் தவறு.

ஜெயமோகன் ஒற்றை பத்தியில் இந்த இணைய உலகை ஸ்தம்பிக்கை வைக்கிறார். சாரு ஏதாவது சொன்னால் அது கிண்டலோ, பாராட்டோ ஏகப்பட்ட பேர் பதறுகிறார்கள். இதையெல்லாம் செய்வது அவ்வளவு சாத்தியமா என்ன? நமக்கென்று ஒரு credibility வேண்டும். நம்மையும் நான்கு பேர் பொருட்படுத்த வேண்டும். நீங்களும் நானும் controversy ஆன கருத்துக்களைச் சொல்லி கூட்டத்தை கவரலாம் என்றால் பல்லைக் காட்டியபடியே புறந்தள்ளிவிடுவார்கள்.

சுந்தர ராமசாமி போலவோ, ஜெயமோகன் போலவோ, சாரு நிவேதிதா போலவோ காலத்தில் நிற்கக் கூடிய ஒரு படைப்பை எங்கள் ஊர்க்காரன் எழுதினால் அதைவிட மகிழ்ச்சியைடைய வேறு என்ன இருக்கிறது? இந்த சவால்களை வெறும் கடிதத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் எழுத்தில் காட்டுங்கள். இந்த உரையாடலை நீட்டிக்காமல் நிறைய வாசியுங்கள். ஆயிரக்கணக்கான வாசகர்களை வசமாக்குங்கள். உங்கள் வலைப்பதிவிற்கான இணைப்பை இந்தப் பதிவில் தருகிறேன். ஆயிரம் பேராவது உங்கள் தளத்துக்கு வரக் கூடும் என நம்புகிறேன். தக்கவைத்துக் கொள்வது உங்கள் திறமையைப் பொறுத்தது. 

வாழ்த்துகள்.

6 எதிர் சப்தங்கள்:

Raja said...

//ஜெமோ, சாரு எழுதுவதற்கும் நான் எழுதுவதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்கள் பார்த்தீர்களா?// அவர்
அப்படியெல்லாம் கேட்டமாதிரி எனக்கு தெரியலையே

//நான் எழுதுவதற்கும் ஜெமோ சாரு எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஏன் அவை உச்சமாக இருக்கின்றன என்பதை வாசிப்பின் மூலமும் என் எழுத்தின்பால் மற்றவர்களின் மதிப்பீட்டைக்கொண்டும் உணர முற்படுகிறேன்.//
பாஸ் , அவரரவர் துறையில் லெஜன்ட் ஆக இருப்பவர்களுடன் தன்னை ஒப்பிட்டு, குறைகளை களைய நினைப்பது எல்லோரும் செய்வதே. அவர் எங்க பாஸ் உடனே எல்லாத்தயும் அடையணும்னு சொல்றாரு. அவர் அதற்கான பயணத்தில் இருக்கிறேன்னு தான் சொல்றாரு

RAM said...

Mani,

Nice Post.. I read that blog from your link.

26 Posts in Three years and most of them are copy paste from various sites and screenshots of charu's books.

I wonder how this guy could think as "not recognised".

nimmathiillathavan said...
This comment has been removed by the author.
சேக்காளி said...

அட!

சேக்காளி said...

//இதுகுறித்து நான் கவலைப்பட்டதே இல்லை//
நெசமாவா?

சேக்காளி said...

//சுஜாதாவாகவோ, சுந்தர ராமசாமியாகவோ//
அப்டின்னா "அவரு சொன்ன அவரு" சுஜாதா இல்லையா?