Jun 19, 2014

இந்த உலகம் எப்பொழுதுதான் நம்பியிருக்கிறது?

அலுவலகத்துக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு Spa வில் காக்கிச்சட்டைகளின் நடமாட்டம் இருந்தது. ஒரு காக்கிச் சட்டையைப் பார்த்தாலே மூக்கு வியர்த்துக் கொள்ளும். மூன்று நான்கு பேர் இருந்தால்? அதுவும் இது போன்ற இடங்களில்? பரவசமாகிவிட்டேன். சிறு கூட்டத்தை விலக்கிவிட்டு அருகில் செல்லும் போது கிட்டத்தட்ட எல்லாமும் முடிந்திருந்தது. பூட்டி ஸீல் வைப்பதற்கான முஸ்தீபுகளில் இருந்தார்கள். வேடிக்கை பார்க்க நின்றிருந்தவர்களை ‘ஓகி...ஓகி’ என்று துரத்திக் கொண்டிருந்தார்கள். 

வழக்கமான செய்திதான். 

விபச்சாரம் நடந்திருக்கிறது. வழக்கம் போல ரெய்டில் நான்கு பெண்களை மீட்டிருக்கிறார்கள். வழக்கம் போலவே தப்பித்து ஓடிவிட்ட ஒரு புரோக்கரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ‘மசாஜ் பார்லர் என்ற பெயரில் விபச்சாரம்’ என்ற தலைப்பில் எழுதுவதற்கான சாதாரண விஷயம்தான் இது. ஆனால் புகார் வந்த முறைதான் வித்தியாசமானது. 

ஒரு இளைஞன் சில நாட்களுக்கு முன்பு பெண்கள் தேவை என இணையத்தில் தேடியிருக்கிறான். திருமணத்திற்கு இல்லை. தேடலில் இவர்களது மின்னஞ்சல்தான் சிக்கியிருக்கிறது. விசாரித்திருக்கிறான். கல்லூரி மாணவிகள், மாடல்கள், சாதாரண பெண்கள் என வெளியூர்களிலிருந்து பெண்களை அழைத்து வந்து ‘மசாஜ்’ செய்கிறார்கள். ஒரு பெண்ணை பதினைந்து நாட்கள்தான் வைத்திருப்பார்களாம். பிறகு கொச்சி, ஹைதராபாத், சென்னை போன்ற ஊர்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அதற்கு பதிலாக அங்கிருந்து வேறு சில பெண்களை அழைத்துக் கொள்வார்கள். பார்த்த முகங்களையே திரும்பத் திரும்பப் பார்த்து வாடிக்கையாளர்கள் சலித்துவிடக் கூடாது என்பதற்காக இந்த சுழற்சியைச் செய்கிறார்களாம். Job ethics.

இவனுக்கும் மின்னஞ்சலில் நான்கைந்து பெண்களின் படங்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். இவன் இரண்டு பெண்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் - ஆமாம் இரண்டு பெண்கள்தான். மொத்தம் இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு. காரியமெல்லாம் முடிந்து வீட்டுக்குச் சென்றிருக்கிறான். அடுத்த சில நாட்களில் கடும் காய்ச்சல். பரிசோதனைகளில் உறுதிப்பட்டுவிட்டது. ஹெச்.ஐ.விதான். இருபத்தைந்தாயிரம் கொடுத்து வாழ்க்கையைத் தொலைத்துவிட்டான். Irreversible Mistake. ‘நான் தொலைந்தாலும் பரவாயில்லை...மற்றவர்களையாவது காப்பாற்றுங்கள்’ என்று கமிஷனருக்கு மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறான். அவர் உத்தரவிட வந்து அமுக்கிவிட்டார்கள். 

மதியம் சாப்பாடு எடுத்துச் செல்லாத நாட்களில்தான் இது போன்ற காட்சிகள் கிடைக்கின்றன. டொம்ளூரில் நல்ல மெஸ் இருப்பதாகத் தெரியவில்லை. பஞ்சாபி மெஸ் ஒன்று இருக்கிறது. ஆனால் சுத்தபத்தம் என்று எதிர்ப்பார்க்க முடிவதில்லை. அதனால் முக்கால் மணி நேரமாவது சந்துகளுக்குள் சுற்றுவேன். வாரத்தில் ஒரு நாளாவது இப்படி வெளியில் சுற்றுவது வாடிக்கையாகிவிட்டது. அப்படிச் சுற்றும் போதுதான் இந்த காக்கிச் சட்டைகள் கண்ணில் சிக்கினார்கள்.

கோரமங்களா, இந்திராநகர், டொம்ளூர் போன்ற இடங்களில் வீதிக்கு வீதி மசாஜ் பார்லர்கள் இருக்கின்றன. உஸ்பெகிஸ்தான் பெண் கைது, கஜகஸ்தான் பெண் கைது என்றெல்லாம் செய்திகள் வந்திருக்கின்றன. அங்கிருந்து சுற்றுலா விசாவில் இங்கே வந்து சம்பாதித்துச் செல்கிறார்கள். இந்தியர்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் வடகிழக்கு பெண்களும் ஆண்களும்தான் இந்த வேலையில் இருக்கிறார்கள். ஜீன்ஸ், டீசர்ட் என்று உடைகளில் டிப்-டாப்பாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கைத் தரத்தைப் பார்க்க வேண்டுமே- படு மோசம். ஈஜிபுரா சிக்னல் அருகில் நிறைய குடும்பங்கள் வசிக்கின்றன. கச்சடாவான ஏரியா அது. ஒண்டிக்குடித்தன வீடுகளில் குடும்பம் நடத்திவிட்டு இப்படி மசாஜ் பார்லர்களில் வாழ்வை இழந்து கொண்டிருக்கிறார்கள். நடுவண் அரசில் வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுக்கென்று தனியான அமைச்சர் கூட இருக்கிறாராம்.

சரி விடுங்கள். 

இரண்டு வாரங்களுக்கு முன்பாகக் கூட மசாஜ் பார்லருக்குச் சென்றிருந்தேன். வெயிட்டீஸ். தறிகெட்டு ஓடும் கற்பனைக் குதிரையைக் கொஞ்சம் இழுத்துப் பிடியுங்கள். சொல்வதை முழுமையாகக் கேட்டுவிட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமையில் சென்னை செல்ல வேண்டிய வேலை இருந்தது. காலையில் ஆறு மணிக்கெல்லாம் கோயம்பேட்டில் இறக்கிவிட்டுவிட்டார்கள். அந்நேரத்தில் யார் வீட்டுக் கதவைத் தட்டுவது? ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக சற்று அதிகமாகத் தூங்குவார்கள். தூங்குமூஞ்சியோடு அவர்களை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று யார் வீட்டுக்கும் செல்லவில்லை. டிஸ்கவரி புக் பேலஸில்தான் வேலை. அவர் பத்து மணிக்குத்தான் கடையைத் திறப்பார். அதுவரை என்ன செய்வது? அசோக் பில்லரிலிருந்து எவ்வளவுதான் மெதுவாக நடந்தாலும் முக்கால் மணி நேரத்தில் கே.கே.நகரை அடைந்துவிட முடிகிறது. மணி ஏழு கூட ஆகியிருக்கவில்லை. இன்னும் மூன்று மணி நேரத்தையாவது ஓட்ட வேண்டும். 

முன்பெல்லாம் ஒருநாள் வேலை என்றால் தி.நகரில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து அறை எடுத்துக் கொள்வேன். குளித்துவிட்டு ஒரு மணி நேரம் தூங்கி எழுந்து செல்லலாம். கடந்த முறை தெரியாத்தனமாக கட்டிலுக்குக் கீழாக பார்த்துவிட்டேன். இதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம்தான். ஐந்நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு அறையில் வாஸ்து பார்க்கலாமா? பார்த்துவிட்டேன். ஏகப்பட்ட Transparent பலூன்கள் அங்கே கிடந்தன. இதையெல்லாம் சுத்தமே செய்யமாட்டார்கள் போலிருக்கிறது. இனிமேல் இந்தப்பக்கமே தலைவைக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன். அப்படியே கீழே பார்க்காவிட்டாலும் இத்தகைய விடுதிகளில் படுக்கை கைவசமிருக்கிறதே என்று இஷ்டப்படியெல்லாம் தூங்கிவிட முடியாது. மல்லாக்கத்தான் படுத்துக் கொள்ள வேண்டும். தூக்கத்தில் குப்புற புரளும் போது மூக்கு தலையணையை முத்தமிட்டுவிட்டால் அவ்வளவுதான். மூன்று நாட்களுக்கு குமட்டிக் கொண்டு வரும். அவ்வளவு கப்பு.

இந்தப் பிரச்சினையெல்லாம் வேண்டாம் என்றால் ஆயிரம் ரூபாயாவது கொடுக்க வேண்டும் போலிருக்கிறது. பெங்களூரிலிருந்து சென்னை வருவதற்கு டிக்கெட்டே இருநூறு ரூபாய்க்குள்தான் ஆகும். ஆனால் கோயம்பேட்டில் ஆட்டோ கேட்டால் ‘ஐந்நூறு கொடு சார்’ என்பார்கள். அப்படித்தான் இதுவும். ஒரு மணி நேரத் தூக்கத்துக்கு ஆயிரம் என்பது டூ மச். அதனால் இந்தக் கருமமே வேண்டாம் என்று இந்த முறை அறை எடுக்கவில்லை. 

ஆனாலும் குளிக்க வேண்டுமே?

அதற்குத்தான் மசாஜ் பார்லர்கள் வைத்திருக்கிறார்கள். முந்தின நாள்தான் ஷேவ் செய்திருந்தேன். ‘ஷேவ் செய்ய வேண்டும்’ என்று கடையைத் திறந்ததும் திறக்காததுமாக சென்றவுடன் அவர் வித்தியாசமாகத்தான் பார்த்தார். ஒரு ஷேவ் செய்துவிட்டு ‘குளிக்க பாத்ரூம் கிடைக்குமா?’ என்றால் அடிதான் விழும் என்பதால் அடுத்து என்ன செய்வது என்று மூளைக்குள் மீட்டர் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. கடைக்கு மேலேயே மசாஜ் பார்லர். முக்கால் மணி நேர நீராவிக் குளியலுக்கு முந்நூறு ரூபாய்தான். நேரத்துக்கு நேரமும் விரயம். குளியலுக்கு குளியலும் ஆயிற்று. 

அறைக்குள் ஜட்டியோடு அமர வைத்து நீராவியைப் திறந்துவிட்டு போய்விட்டார்கள். நீளமான துண்டு ஒன்றைக் கொடுத்திருந்தார்கள். முழுமையாக போர்த்திக் கொண்டு படுத்துவிட்டேன். முக்கால் மணி நேரமோ ஒரு மணி நேரமோ கழித்து வந்து எழுப்பினார்கள். நல்ல தூக்கத்திலிருந்தேன். ‘இந்த சூட்டில் எப்படி சார் தூங்குனீங்க?’ என்றார். ‘கவர்மெண்ட் பஸ்ஸில் கடைசி சீட்டில் உக்காந்துட்டு பெங்களூரிலிந்து வந்து பாருங்க...அடுப்புல கொண்டு போய் படுக்க வெச்சாலும் தூக்கம் வரும்’ என்று சொல்ல வாய் வந்தது. நமது பலவீனம் அடுத்தவர்களுக்குத் தெரியக் கூடாதல்லவா? அடக்கிக் கொண்டேன்.  ‘அடுத்த தடவை வரும் போது கொஞ்சம் ரேட்டை குறைச்சுக்குங்க’ என்று வியாபார பேரத்தை முடித்துவிட்டு வந்திருக்கிறேன்.

காலை உணவை முடித்துக் கொண்டு புத்தகக் கடைக்குச் செல்லவும், வேடியப்பன் கதவைத் திறக்கவும் சரியாக இருந்தது. 

‘இத்தனை நேரம் எங்க இருந்தீங்க?’ என்றார். 

அவசரப்பட்டு ‘மசாஜ் பார்லர்’ என்று சொல்லிவிட்டேன். சற்று ப்ரெஷாக வேறு இருந்தேன் - அவ்வளவுதான் - அப்பொழுதிருந்து ஒரு மார்க்கமாக முறைக்க ஆரம்பித்தவர்தான், என்னதான் விளக்கம் சொன்னாலும் நம்ப வைக்க முடியவில்லை. அது சரி. அப்பாவிகளை இந்த உலகம் எப்பொழுதுதான் நம்பியிருக்கிறது?

19 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

at Koyambedu, u can kill the hours with get dormitary for little amount (inside the busstand)

Trouble? Rebel! said...

wow! how simple it is for you to spot the modern- human-error with that narration of one incident.

Trouble? Rebel! said...

hi manikandan, this is really good. You have talked about the flaw in the modern human with the simple narration of a seemingly common incident.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என்னதான் விளக்கம் சொன்னாலும் நம்ப வைக்க முடியவில்லை. அது சரி. அப்பாவிகளை இந்த உலகம் எப்பொழுதுதான் நம்பியிருக்கிறது?-finishing super

natarajan said...

அவரை நம்ப வைக்கதான் இவ்ளோ பெரிய கட்டுரையா? ஹி ஹி :)

”தளிர் சுரேஷ்” said...

கடைசி வரிகள் கலக்கல்!

Aba said...

//நமது பலவீனம் அடுத்தவர்களுக்குத் தெரியக் கூடாதல்லவா? //

:))

தருமி said...

//பாவிகளை இந்த உலகம் எப்பொழுதுதான் நம்பியிருக்கிறது?// அதானே!

செந்தில்குமார் said...

‘கவர்மெண்ட் பஸ்ஸில் கடைசி சீட்டில் உக்காந்துட்டு பெங்களூரிலிந்து வந்து பாருங்க...அடுப்புல கொண்டு போய் படுக்க வெச்சாலும் தூக்கம் வரும்’##

Unknown said...

அப்பாவிகளை இந்த உலகம் எப்பொழுதுதான் நம்பியிருக்கிறது...arumai...

Unknown said...

Mani anne,
T.nagar vilasam pls :-)

Vaa.Manikandan said...

:) நான் அப்பாவின்னு கூட நம்ப மாட்டேங்குறாங்க பாருங்க...

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

தப்பாக யோசிக்காதீங்க சொம்ப எடுத்து உள்ள வச்சீராதீங்க என்ற கதையாகவே கொண்டு போய் எங்களை கடைசி சீட்டில் உட்கார வச்சாலும் பரவாயில்லை கடைசி வரை நுனி சீட்டிலே இட்கார வச்சு கொண்டு சேத்துடறீங்களே .

Anonymous said...

Boss, do you believe that HIV+ can be identified with in a month time ?

சேக்காளி said...

//Boss, do you believe that HIV+ can be identified with in a month time ?//
எப்புடி போட்டாலும் அடிப்போமுல்ல.

Vaa.Manikandan said...

இப்படித்தான் சொல்கிறார்கள் - Early symptoms of HIV infection develop in 50 to 90 percent of people who are infected, usually beginning two to four weeks after exposure to HIV. The initial group of signs and symptoms is referred to as primary or acute HIV infection.

Jaikumar said...

//கவர்மெண்ட் பஸ்ஸில் கடைசி சீட்டில் உக்காந்துட்டு பெங்களூரிலிந்து வந்து பாருங்க//

Suvar irunthal than Sithiram vaanga mudiyum... Take care...

Yarlpavanan said...

சிறந்த ஆய்வுப்பதிவு

krish said...

தங்கள் blogsஐ விரும்பி படிப்பவர்களில் நானும் ஒருவன்,
அருமை,நன்றி.