2004 ஆம் ஆண்டு எம்.டெக் ப்ராஜக்டுக்காக சென்னையில் தங்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. ஆரம்ப நாட்களில் பள்ளிக்கரனைக்குப் அருகில் நாராயணபுரத்தில் நண்பர்களோடு தங்கியிருந்தேன். அந்தப் பகுதி ஊருக்கு மிகத் தள்ளி இருப்பதாக உணர்ந்ததால், கொஞ்ச நாட்களில் அடையாறு ஐ.ஐ.டி க்கு அருகில் இருந்த ஒரு சந்தில் தனியாக வீடு எடுத்துக் கொண்டேன். அதை வீடு என்று சொல்ல முடியாது. ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த ஒற்றை அறை. காலையில் ஐந்தரை மணிக்கு எழுந்து அடி பம்பில் தண்ணீர் அடித்தால்தான் குடிப்பதற்கும், குளிப்பதற்கும், இன்ன பிறவற்றிற்கும் வசதியாக இருக்கும். ஏமாந்து தண்ணீர் அடிக்காமல் விட்டுவிட்டால் அடுத்த நாள் காலை ஐந்தரை மணி வரை தண்ணீருக்கு படு திண்டாட்டம் ஆகிவிடும். ஆயிரம் ரூபாயில் நகருக்குள் அதை விட மேலான அறை கிடைப்பது மிகச் சிரமம் என்பதால் தங்கிக் கொண்டேன்.
சனி, ஞாயிறு போன்ற தினங்களில் விடுமுறைதானே என்று அறையில் உறங்க முடியாது, ஆஸ்பெஸ்டாஸ் வழியாக இறங்கும் வெப்பம் ஆளை உருக்கிவிடும். காலையில் குளித்துவிட்டு தள்ளுவண்டி கடையில் ஏதாவது வயிற்றுக்கு ஈந்துவிட்டு அருகில் இருக்கும் காந்தி மண்டபத்தில் படிப்பதோ வேடிக்கை பார்ப்பதோ என்றிருப்பேன். மதிய உணவுக்குப் பின் மீண்டும் மண்டபத்திலேயே உறங்கிவிடுவது வாடிக்கையாகியிருந்தது. என்னைப் போன்று பலருக்கும் காந்தி மண்டபம் தற்காலிக வீடாக இருந்ததை உணர்ந்திருக்கிறேன். பூங்கா என்பது காதலருக்கும், இன்னும் பிறரின் பொழுதுபோக்குக்கும் மட்டுமே என்ற என் மனப்பிம்பம் சிதைந்தது அந்தச் சமயத்தில்தான். சென்னை போன்ற பெருநகரங்களில் போக்கிடம் அற்ற, வாழ்வின் கசப்புகளை அசைபோட அல்லது தவிர்க்கவேவியலாத துன்பங்களைச் சுமந்து கொண்டு திரியும் எண்ணற்ற நபர்களுக்குப் பூங்காக்கள்தான் இடம் தருகின்றன. சிலீரிடும் பூங்காவின் காற்றில் கணநேரமாவது வாழ்வின் வசந்தத்தை ஸ்பரிசித்துவிடுகிறார்கள்.
நான் தங்கியிருந்த அறைக்கு அருகில் அதே மாதிரியான ஆஸ்பெஸ்டாஸ் கூரையில் இன்னொரு குடும்பம் வாடகைக்கு இருந்தார்கள். அடையாற்றில் இருந்த புற்று நோய் மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க வந்திருந்த பெண்ணும், பெண்ணின் தாயாரும் அந்தக் கூரையில் தங்கியிருந்தார்கள். அந்தப் பெண்ணுக்கு முடியைக் கத்தரித்து விட்டிருந்தார்கள். புத்தி பேதலித்த ஒரு பார்வையை நான் எதிர்ப்படும் ஒவ்வொரு சமயமும் என் மீது நேர்கோட்டில் செலுத்துவாள். சற்று பயமாக இருக்கும். ஒரு சமயத்திலும் கூட அந்தக் கண்களை என்னால் நேருக்கு நேர் பார்க்க முடிந்ததில்லை.
கழிவறை எனக்கும் அந்தக் குடும்பத்துக்கும் வேறு என்றாலும் குளியலறை ஒன்றுதான். காலையில் பிடித்து வைத்திருந்த தண்ணீரை எடுத்துப் போய் சிக்கனமாக உபயோகப்படுத்த வேண்டும். ஐந்தரை மணிக்கு எழுந்து தண்ணீர் பிடித்தவுடன் குளித்து ஆறரை மணிக்கு எல்லாம் அறையைப் பூட்டிவிடுவேன். அந்த அறையில் எவ்வளவுக்கு எவ்வளவு தங்க முடியாமல் தவிர்க்க முடியுமோ அந்த அளவுக்கு தவிர்க்குபடி பார்த்துக் கொள்வேன்.
இந்தச் சமயத்தில்தான் உயிர்மை அலுவலகத்துக்குச் சென்று வர ஆரம்பித்தேன். இலக்கியங்களை வாசிக்கத் துவங்கியதும் அப்பொழுதுதான். சென்னையில் தனிமை என்னை நசுக்கத் துவங்கியிருந்தது. நான் எழுதுவதற்கும், படிப்பதற்கும் ஒரு பற்றுக்கோல் தேவைப்பட்டது. உயிர்மை அதைத் தந்தது. உயிர்மை அலுவலகத்தில் தமிழின் பிரபலமான படைப்பாளிகளை 'பார்க்கத்' துவங்கிய பருவம் அது. அந்தச் சமயத்தில் படைப்பாளிகள் யாரிடமும் பேசியதில்லை. வருபவர்கள் மனுஷ்ய புத்திரனோடு பேசிக் கொண்டிருப்பார்கள். நான் ஏதாவது இதழ் ஒன்றைப் புரட்டிக் கொண்டு அதே அறையில் இருப்பேன்.
பல சமயங்களில் இரவு ஒன்பதரை மணி தாண்டிய பிறகு பஸ் டிக்கெட் மிச்சம் ஆகும் என்பதால் அபிராமபுரத்திலிருந்து கோட்டூர் புரம் வழியாக அடையாற்றுக்கு நடந்து சென்றது ஞாபகமிருக்கிறது. இதை இப்பொழுது நம்புவதற்கு எனக்குமே கஷ்டமாக இருக்கிறது. வீட்டில் வறுமை என்றில்லை. ஐடி துறை கொடி கட்டத்துவங்கிய காலம் அது. உடன் படித்த நண்பர்கள் குறைந்தபட்சம் இருபதாயிரம் ரூபாயையாவது சம்பளமாக வாங்கத் துவங்கியிருந்தார்கள். நான் பி.இ. முடித்தவுடன் வேலைக்கு எதுவும் முயற்சி செய்யாமல் எம்.டெக் படித்தாக வேண்டுமென்று, வீட்டில் மாதம் இரண்டாயிரம் வாங்கிக் கொண்டிருந்தேன். போதாதற்கு வீட்டு ஓனர் தன் மகன் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருப்பதாகவும், படிக்கும் போதே அங்கிருந்து பணம் அனுப்புவதாகவும் என்னைக் கிளறிக் கொண்டிருந்தார். ஏதோ அடையாளம் இல்லாத குற்ற உணர்ச்சி என்னை அரிக்க ஆரம்பித்திருந்தது.
அந்தச் சமயத்தில்தான் சுனாமி வந்து தாண்டவமாடிவிட்டுப் போனது. கடல் கொந்தளித்த டிசம்பர் 26 விடுமுறையாயிருந்தது. நண்பனொருவன் தன் தோழியைப் பார்க்க பாண்டிச்சேரியிலிருந்து வந்திருந்தான். இருவரும் காதலித்துக் கொண்டிருந்தார்கள். நானும் அவனும் அவளது திருவான்மியூர் விடுதிக்குச் சென்று கொண்டிருந்தோம். வழியில் எதிர்ப்படுவோர் எல்லாம் கடல் கொந்தளிப்பு பற்றியே பேசினார்கள். திருவான்மியூருக்குள் கடல் புகுந்துவிட்டதாகவும் சொன்னார்கள். பயத்தில் அவன் அவளை போனில் அழைத்து எதுவுமாகவில்லையே என்றான். அவள் ஜெயந்தி தியேட்டருக்கு முன்பாக நின்று கொண்டிருப்பதாகச் சொன்னாள். எங்களுக்கு நிகழ்ந்துவிட்ட கோரத்தின் வீரியம் தெரியாமல் இருந்தது. அவர்கள் இருவருக்கும் ஊர் சுற்ற வேண்டும் என்று ஆசை, எனக்குக் கடலைப் பார்க்க ஆசை.
காதலர்களோடு மூன்றாமவன் கூடவே சுற்றுவது நாகரிகமல்லை என்பதால், எனக்கு வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். கூவத்தில் நீர் மட்டம் அதிகமாயிருந்தது. பஸ்ஸில் இருந்தவர்கள் அதைப் பற்றி மட்டுமே பேசினார்கள். ராயப்பேட்டைக்குச் சென்றேன். அரசு மருத்துவமனையில் பிணங்களை குவியல் குவியலாகக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். பிணத்தை அடையாளம் பார்ப்பதாக இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தார்கள். வெளியில் ஒருவர் தானும் கடலால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கையில் ஏதோ அகப்பட்டதை இறுகப்பிடித்து தப்பித்தாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது அதை நம்பிக் கொண்டேன். இப்பொழுது யோசித்தால் அது இயலக் கூடிய விஷயமா என்று சந்தேகமாயிருக்கிறது.
என் வாழ்நாளில் அத்தனை பிணங்களைப் பார்த்ததில்லை. இனியும் பார்க்க விருப்பமில்லை. மனம் முழுவதும் விரக்தியின் கசப்பு பரவத் துவங்கியது. இனி நின்று கொண்டிருந்தால் உருவாகும் மன அழுத்தத்தையும் பயத்தையும் தாங்க முடியாது என்பதால் மனுஷ்ய புத்திரனைப் பார்க்கச் செல்ல முடிவு செய்தேன்.
அபிராமபுரத்தில் இறங்கி நடந்த போது பசிக்கத் துவங்கியது. அங்கு ஒரு தள்ளுவண்டிக்கடையில் கறிக்குழம்போடு சோறு தருவார்கள். விலையும் சல்லிசு. பசியின் காரணமாக உணவை வாங்கினாலும் இரண்டு வாய்க்கு மேலாக உண்ண முடியவில்லை. மருத்துவமனைக் காட்சிகள் நிழலாடின. வயிறு குமட்டியது. காசு கொடுத்த போது, "சாப்பாடு சரியில்லையாப்பா?" என்ற கடைக்காரரின் கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை.
உயிர்மை அலுவலகத்தில் அனைவரும் தைரியமாக இருந்ததாகத் தோன்றியது- மனுஷ்ய புத்திரனைத் தவிர. அவர் அச்சத்தின் பிடிக்குள் இருந்தார். கடல் ஊருக்குள் வந்தால் எப்படித் தப்பிப்பது என்ற வினாவைச் சுழற்றிக் கொண்டிருந்தார். செய்திச் சேனல்களில் திகிலூட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சுனாமி என்ற பெயர் அறிமுகமாகவில்லை. செய்தியாளர்கள் 'டிசுனாமி' என்றே உச்சரித்தார்கள். அதன்பிறகும் வெகு நாட்களுக்கு நாளிதழ்களிலும் 'ட்சுனாமி' அல்லது 'டிசுனாமி' என்று எழுதினார்கள். செய்திகளில் வரும் பிணங்களையும், அழுபவர்களையும் பார்க்க முடியாமல் வாசலில் அமர்ந்து கொண்டிருந்தோம்.
மனுஷ்ய புத்திரனுக்கும், எனக்கும் பயம் விலகாத முகங்கள். ஏதேனும் நிகழ்ந்தால் மொட்டை மாடிக்குச் சென்றுவிடலாம் என்று யாரோ சொன்ன போது எல்லோருக்கும் சிரிப்பு வந்தது. பொங்கி வரும் கடல் பதினைந்தடி உயர மாடியை மட்டுமா விட்டு வைக்கும்?. ஒரு காரை எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டின் உட்புறமாகச் சென்றுவிடுங்கள் என்று சொன்னேன். எல்லோரும் ஒவ்வொரு ஐடியாவாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் எதிலும் மனம் லயிக்கவில்லை.
எனது தொலைபேசி ஒலிக்கத் துவங்கியது. சித்தப்பா பேசினார். கிளம்பி வரும்படி உத்தரவு. நான் ஏதோ சமாதானம் சொல்லி போனை துண்டித்து விட்டேன். அடுத்ததாக அம்மா பேசினார். புறப்படச் சொல்லி அழுதார். அழுகை என்றால் சாதாரணமாக இல்லை. தேம்பித் தேம்பி. நான் அமைதியாக இருந்திருக்கலாம், அப்படியில்லாமல் "போக வேண்டும் என்றிருந்தால் எப்படியும் போய்விடுவோம். கடல்கிட்ட இருந்து தப்பிக்க ஊருக்கு வரும் போது பஸ்ஸில் அடிபட்டால் என்ன ஆவது" என்றேன். அவ்வளவுதான். அம்மா கதறியதில் ஊரே இரண்டு பட்டிருக்க வேண்டும். அடுத்தாக அப்பா. "அம்மாவுக்கு ஏதும் ஆகக் கூடாது என்றால், இப்பொழுதே கிளம்பு" என்றார். இனியும் ஊருக்குப் போவதைத் தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை.
"நான் கிளம்புகிறேன் சார்" என்றேன் ம.பு விடம். "அடப்பாவி! எங்களை மட்டும் இங்கேயே விட்டுவிட்டா?" என்றார் விளையாட்டாக. பெரிதாக எந்தப் பதிலும் நான் சொல்லவில்லை. அடையாற்றில் அறையைத் திறந்து சான்றிதழ்களை மட்டும் எடுத்துக் கொண்டேன். அடுத்த நாற்பது நிமிடங்களுக்குள் கோயம்பேடு சென்று சேர்ந்திருப்பேன். தாம்பரம் வருவதற்குள் நான் சென்னையைக் கடந்துவிட்டேனா என்று கேட்டு வீட்டிலிருந்து மூன்று அழைப்புகள். பொய் சொன்னாலாவது அமைதியாக இருப்பார்கள் என்று தாம்பரம் தாண்டும் போது விழுப்புரத்தைத் தாண்டப் போவதாகச் சொன்னேன். வீட்டில் நான் சுனாமியைத் தாண்டிவிட்டதாக நினைத்துக் கொண்டார்கள்.
(சில வருடங்களுக்கு முன்பாக உயிரோசையில் வந்த கட்டுரை இது)