காலச்சுவடு கண்ணனின் நேர்காணல் எதுவரை இணைய இதழில் வெளிவருகிறது. நான் அனுப்பியிருந்த கேள்வியும் அதற்கான பதிலும் கீழே.
***
காலச்சுவடு இதழும், பதிப்பகமும், அதன் சார்பு நிறுவனங்களும் இயங்குவதற்கான நிதி ஆதாரம் என்ன என்பதை அறிவிப்பீர்களா?
காலச்சுவடு இதழும் பதிப்பகமும் 2010வரை என்னுடைய நிறுவனங்களாக இருந்தன. என்னுடைய முதலீட்டில்தான் செயல்பட்டன. வங்கிக்கடன் இருந்தது. அறிந்தவர்களிடம் பணம் பெற்று வட்டி செலுத்துவதும் தேவைக்கு ஏற்ப நடந்ததுண்டு. வேறு எந்த இந்திய, உலகளாவிய நிறுவனமும் காலச்சுவடில் முதலீடு செய்ததில்லை. என்.ஜி.ஓக்கள், தனியார் அறக்கட்டளைகள், மத்திய அரசு யாரிடமிருந்தும் உதவி பெற்றதில்லை.
என்ன என்ன உதவிகளைப் பெற்றிருக்கிறோம் என்பதையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.
1. விளம்பர உதவி
2. நிகழ்வுகளுக்கு ஸ்பான்சர்
3. காலச்சுவடு இதழில் பங்களிப்பவர்களுக்கு ஸ்ரீராம் சிட்ஸ் வழங்கும் சன்மானம்.
4. புதுமைப்பித்தன் படைப்புகள் தொகுப்புப் பணிக்கு ஸ்ரீராம் சிட்ஸ் வழங்கிய நிதி உதவி.
5. தமிழ் வளர்ச்சித் துறை அரிய நூல்களைப் பதிக்கும் திட்டத்தில் ‘தோட்டியின் மகன்’ முதல் பதிப்புக்கு வழங்கிய உதவித்தொகை.
இவை எல்லாமே வெளிப்படையானவை. உரிய இடங்களில் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கப்பட்டவை.
நான் வெளிப்படையாக அறிவிக்காத உதவி ஒன்று உண்டு. முதன் முதலில் நான் கேட்டுப் பெற்ற உதவி அது. புதுமைப்பித்தனின் ‘அன்னை இட்ட தீ’ பணியில் ஆய்வுக்காகப் பல இடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. காலச்சுவடு அப்போது இரண்டு மூன்று நூல்களே வெளியிட்டிருந்த பதிப்பகம். ஆர்.எம்.கே.வி. விஸ்வநாதன் பண்பாட்டு அக்கறை உள்ளவர் என்று அறிந்து அவரைச் சந்திக்கச் சென்றேன். ரூ. 10,000 கொடுத்தார், நான் அதை வெளிப்படையாக அறிவிக்கக் கூடாது என்ற முன்நிபந்தனையுடன். இன்று அவர் இல்லை. நன்றிக் கடனை அறிவிக்கப் பொருத்தமான சந்தர்ப்பம் இது.
‘அன்னை இட்ட தீ’ நூல் வெளிவந்த பிறகு புதுமைப்பித்தன் குடும்பத்தினரிடமிருந்து அவரது முழுப்படைப்புகளையும் வெளியிட அனுமதி பெற்றோம். பல இடங்களில் சிதறிக்கிடக்கும் மூலத் தரவுகளைச் சரிபார்த்து பதிப்பாக்கும் செலவுகளை எவ்வாறு சரிக்கட்டுவது என்பது மலைப்பாகவே இருந்தது. இக்கட்டத்தில் India Foundation for Arts என்ற அமைப்பிலிருந்து காலச்சுவடுக்கு விளம்பரம் வந்தது. விளம்பரத்தை ஆங்கிலத்தில் அனுப்பித் தமிழ்ப்படுத்தி வெளியிட முடியுமா என்று கேட்டிருந்தார்கள். அந்தப் பணியை நானே செய்தேன். கலைகள் சார்ந்த பணிகளுக்குப் பண உதவி பெற விண்ணப்பங்களைக் கோரும் அறிவிப்பு அது. அவர்களுடைய அழுத்தம் அதிகமும் நுண்கலைகள் சார்ந்து இருந்தது. புதுமைப்பித்தனின் மூலப் பிரசுரங்களை – இதழ்கள், நூல்கள், கடிதங்கள் – ஆவணப்படுத்தும் திட்டத்திற்கும் நிதியுதவி கேட்டுப்பார்க்கலாமே என்று தோன்றியது. பங்களூர் செல்லும்போது நேரில் சென்று பார்த்தேன். அவர்களுக்கு ஆர்வமிருந்தது. இன்று யோசித்துப் பார்க்கும்போது சலபதியும் நானும் உதவி கிடைக்காமல் போவதற்கான அனைத்து வேலைகளையும் செய்தோம் என்று தெரிகிறது. பண உதவி கேட்டுச் சென்ற இடத்தில் பண உதவி பெறுவதில் இருக்கும் தயக்கங்களை வெளிப்படுத்தினோம். நிதி வழங்கும் நிறுவனங்களின் அரசியலை, மேட்டுக்குடித்தனங்களை விமர்சித்தோம். IFA, ஃபோர்ட் பவுண்டேஷனின் கிளை நிறுவனம் என்பது தெரிந்ததும் ஃபோர்ட் பவுண்டேஷன் நிதி வழங்கும் தேர்வுகளைக் கிண்டலடித்தோம். இந்த எல்லா அதிகப்பிரசங்கித்தனங்களையும் மீறி உதவி கிடைத்தது. எங்கள் திட்டத்தைக் கவனித்து, விவாதித்து, முன்வைத்து ஆலோசனைகள் வழங்கி எந்தச் சிறு பிசிறும் வராமல் நிர்வகித்த அஞ்சும் ஹெசனுக்கே – இன்று பிரபல ஆங்கில எழுத்தாளர் அவர் – நன்றி சொல்ல வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு உதவி செய்ய முடியாது, அறக்கட்டளைக்கே உதவ முடியும் என்று அவர்கள் தெரிவித்ததாலும் ‘தமிழ் இனி 2000’த்தை நடத்தவேண்டியிருந்ததாலும் காலச்சுவடு அறக்கட்டளையைத் துவங்கினோம். பண உதவி கிடைப்பது உறுதிப்பட்டதும் முதல் வேலையாக அதைக் காலச்சுவடில் அறிவித்தேன்.
‘காலச்சுவடு’ ஜனவரி – மார்ச் 2000 இதழில் வெளிவந்த அறிவிப்பு இதோ,
இந்த அறிவிப்பையும் செய்தியையும் பார்த்துவிட்டு பலர் என்னைத் தொடர்பு கொண்டார்கள். அனைவருக்கும் இயன்ற அளவு உதவினோம். சிலருக்கு நிதி உதவியும் கிடைத்தது.
இரண்டு ஆண்டுகளில் ‘புதுமைப்பித்தன் ஆவணத் திட்டம்’ பணி முடிக்கப்பட்ட கணக்கு தணிக்கை செய்யப்பட்டு திட்டம் நிறைவு பெற்றது. புதுமைப்பித்தன் மூல ஆவணங்கள் மைக்ரோ பிலிம் செய்யப்பட்டு அதன் பிரதிகள் முக்கியமான உலக நூலகங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மிச்சமிருந்த ரூ.15,000த்தை அவர்கள் எங்களுக்கே அன்பளித்துவிட்டார்கள். அந்தப் பணத்தில் 2008ஆம் ஆண்டு மதுரை பில்லர் ஹோமில் புதுமைப்பித்தன் ஆய்வரங்கை நடத்தினோம். இந்தப் பணியின் பின்புலத்திலிருந்தே புதுமைப்பித்தன் படைப்புகளின் செம்பதிப்பைக் காலச்சுவடு வெளியிட்டுவருகிறது.
பண உதவி செய்ய முன்வருபவர்களிடமிருந்து உதவிபெற எனக்குத் தயக்கம் இருந்ததில்லை. ஆனால் நானே வகுத்துக்கொண்ட நெறிமுறைகள் உண்டு.
1. பெறும் எல்லாப் பதிவு உதவியையும் வெளிப்படையாக அறிவித்தே பெற வேண்டும்.
2. நாம் செய்ய வேண்டிய பணிகளுக்காகப் பண உதவி பெறலாம். எந்தத் திட்டத்திற்குப் பண ஒதுக்கீடு உள்ளதோ அதை வலிந்து செய்யக் கூடாது.
3.நம்முடைய செயல்பாடு நிதி நிறுவனங்களால் வரையறுக்கப்படக்கூடாது, நம்முடைய ஆர்வங்களால் மட்டுமே வரையறுக்கப்பட வேண்டும்.
1999இல் உதவி பெற்ற பின்னர் இன்றுவரை எந்த நிதி நிறுவனத்தின் உதவியையும் காலச்சுவடு அறக்கட்டளை பெறவில்லை என்பது ருசி கண்ட பூனையாக நாங்கள் செயல்படவில்லை என்பதற்கான ஆதாரம்.
காலச்சுவடு பல இடங்களிலிருந்து – குறிப்பாக ஏகாதிபத்திய நிறுவனங்கள், தேச விரோத அமைப்புகள் (இந்துத்துவவாதிகளின் பார்வையில்) என்ஜிஓக்களிடமிருந்தெல்லாம் பண உதவி பெற்று செழித்திருப்பதாக நேரடியாகவும் மறைமுகமாகவும் ஜெயமோகன் குற்றஞ்சாட்டி வருவதாக அறிந்தேன். அவர் அனுப்பி வைக்கும் கணக்காளரிடம் காலச்சுவடின் ஆடிட் செய்யப்பட்ட கணக்கு விவரங்களைப் பரிசீலனைக்குக் கொடுக்கச் சம்மதிக்கிறேன். பண உதவி கிடைத்த விபரங்களைக் கண்டுபிடித்து ஃபோர்ட் பவுண்டேஷன் மற்றும் இன்னபிற என்.ஜி.ஓ. உதவிகளை அம்பலப்படுத்தட்டும்.
2010இலிருந்து காலச்சுவடு பிரைவட் லிமிடெட் கம்பனியாக மாற்றம் பெற்றுவிட்டது. சுமார் 15 நண்பர்கள் அதில் பண முதலீடு செய்து பங்குகளை வாங்கியுள்ளனர்.
1 எதிர் சப்தங்கள்:
காலச்சுவடின் புத்தாண்டு வாழ்த்துக்கள் மனுஷ்யபுத்திரனின் மொழி என்பது எவ்வளவு அழகா தெரியுது கவனிச்சீங்களா மணிகண்டன்
Post a Comment