Jan 5, 2012

முதல் பரிசு ஆல்டோ கார்!

ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சிக்குச் செல்வது சிலிர்ப்பாகவே இருந்திருக்கிறது. இந்த வருடமும் அப்படியே இருக்கிறது.

புத்தகங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு நண்பர்களோடு எழுத்தை பற்றி பேசுவது விரும்பிய போதெல்லாம் கிடைப்பதில்லை. ஆண்டுக்கு ஒரு முறை காத்திருக்க வேண்டியிருக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியின் சந்தோஷம் எனக்கு பெங்களூரில் நடக்கும் கண்காட்சியிலோ அல்லது வேறொரு ஊரில் நடக்கும் கண்காட்சியிலோ கிடைப்பதில்லை.

இதுவரைக்கும் முகமே அறிந்திராத ஒருவருடன் வாசிப்பு பற்றி பேசுவதன் சுகம் தனித்துவமானது.அந்த அறிமுகம் இல்லாத முகங்களுடன் நீண்ட நேரம் பேசியதுண்டு.  இத்தகைய சாத்தியங்கள் நிறைந்த இடம் என்பதற்காகவே புத்தகக் கண்காட்சிக்கு செல்ல மனம் குறுகுறுக்கிறது.

புத்தகக் கண்காட்சியில் அதிகபட்சமான நாட்கள் அலைய வேண்டும் என்று விரும்பினாலும் 'குடும்பஸ்தன்' என்று விசிட்டிங் கார்டில் அடித்துவிட்ட பிறகு இயலாமல் ஆகிவிடுகிறது. 

பயணம் சார்ந்த பெரும்பாலான மசோதாக்கள் உள்துறையின் அனுமதிக்கு பிறகே நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதால் இந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதிக்கு மட்டும் அனுமதி தேவை என மசோதாவில் சேர்த்துவிட்டு இன்னும் ஒரு நாளை முன் அனுமதியின்றி சேர்த்துவிட திட்டம் வைத்திருக்கிறேன்.

7 ஆம் தேதி(சனிக்கிழமை) புத்தகக் கண்காட்சிக்கு வரும் நண்பர்கள் 9663303156 என்ற எண்ணிற்கு தயவு தாட்சண்யம் பார்க்காமல் அழையுங்கள். நிச்சயம் சந்திக்கலாம். நான் அன்னா ஹசாரேவை தற்சமயம் பின் தொடர்வதில்லை என்பதால் 'மிஸ்டு கால்'கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
                                                                        *****
எனது 'கண்ணாடியில் நகரும் வெயில்'  கவிதைத் தொகுப்பும், 'சைபர் சாத்தான்கள்' கட்டுரைத் தொகுப்பும் உயிர்மையில் கிடைக்கின்றன. ஏற்கனவே இரண்டும் தலா 2001 பிரதிகள் விற்றுவிட்டதாகவும் 20001 பிரதிகள் அச்சடிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். மனுஷ்ய புத்திரனை பொய்யாக்கும் விதத்தில் நான் 30001 பிரதிகள் விற்க வேண்டுமென டார்கெட் வைத்திருக்கிறேன். ம்ம்ம்..தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்!

பிரதி வாங்கிக் கொண்ட விபரத்தை பில் நெம்பரோடு மின்னஞ்சலில் அனுப்பினால் புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளன்று குலுக்கல் முறையில் பம்பர் பரிசாக ஒரு ஆல்டோ காரும், இரண்டாம் பரிசாக இரண்டு ஹோண்டா ஆக்டிவாவும் வழங்கப்படுகிறது. பிரதிகள் வாங்கிய அத்தனை பேருக்கும் ஆறுதல் பரிசுகள் உண்டு. ஏற்கனவே ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் பிரதிகளை ரூ.30001, ரூ.25001 வீதம் ஏலம் எடுத்த வாசக கோடிகளுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் பார்சல் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.                                                              


3 எதிர் சப்தங்கள்:

rajamelaiyur said...

என்ன கொடும இது ...

சாருவின் விசிறி said...

ஹய்ய்யோ....சாரு புத்தகம் நிஜமாவே 2000 காப்பி வித்திருக்கு.வித்திருக்கு வித்திருக்கு.சொன்னா நம்புங்கய்யா....

Vaa.Manikandan said...

@சாருவின் விசிறி- நன்றி!நன்றி!!நன்றி!!!நம்பிட்டேன்!நம்பிட்டேன்!!நம்பிட்டேன்!!!