Jul 1, 2009

லிபரான் கமிஷன் - கமிஷன்களின் இன்னொரு அத்தியாயம்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு குறித்தான சம்பவங்களைப் பற்றி விசாரிப்பதற்கான லிபரான் கமிஷனின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. மூன்று மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும் படி அன்றைய நடுவண் அரசால் அமைக்கப்பட்ட(16 டிசம்பர், 1992) இந்த கமிஷன், நாற்பத்தெட்டு முறைகள் கெடு நீடிக்கப்பட்டு, எட்டு கோடி ரூபாய்கள் செலவில், பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகாக நேற்று (ஜூன் 30,2009) தனது ஆயிரக்கணக்கான பக்கங்களிலான அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.

அறிக்கையை பற்றி லிபரானோ, உள்துறை அமைச்சரோ அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்களைப் பற்றி எதுவும் வெளியில் சொல்லவில்லை. அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போதுதான், அறிக்கையில் உள்ள தகவல்கள் வெளிவரும் என்று மேற்குறிப்பிட்ட இருவரும் தெரிவித்திருக்கிறார்கள் என்ற போதிலும், சில தினப்பத்திரிக்கைகளில் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

எதிர்பார்த்த செய்திகள்தான். பி.வி.நரசிம்மராவ் அரசு மசூதி தகர்ப்பை தடுக்கவில்லை. கல்யாண்சிங் உத்தரபிரதேச முதலமைச்சராக இந்த நிகழ்வை வேடிக்கை பார்த்தார். அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் அயோத்தியில் இருந்து தகர்ப்பினை வழிநடத்தினார்கள். சங் பரிவாரத்தின் அசோக் சிங்காலுக்கு இடிப்பில் மிக முக்கிய பங்களிப்பு இருக்கிறது. உமாபாரதி மசூதி தகர்ப்பின் போது மிகுந்த உற்சாகத் துள்ளலில் இருந்தார்.

வாரம் ஒரு முறை ரோட்டோர டீக்கடையில் தினத்தந்தியோ, தினகரனையோ கடந்த பதினேழு வருடங்களாக வாசித்து வரும் எந்த ஒரு சாமானியனுக்கும் இந்தத் தகவல்கள் தெரிந்திருக்கும்.இந்தத் தகவல்களை வெளியிட மெத்தப்படித்த அறிவாளிகள் நிறைந்த ஒரு குழு , பதினேழு வருடங்களாக, 399 முறை கூடி, எட்டுக் கோடி ரூபாய்கள் செலவு செய்து ஆயிரம் பக்கங்களில் வெளியிட வேண்டும் என்றால் இந்தியாவின் குற்றவியல் விசாரணை குறித்த திறன் எந்த அளவிற்கு சந்தேகத்திற்குரியது என்பது தெளிவாகும்.

இதில் இன்னொரு நகைப்பிற்குரிய செய்தி, அறிக்கை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டியதாம். லிபரானுக்கு, கமிஷனில் பணியாற்றிய வழக்கறிஞர் ஒருவருக்கும் உருவான பிரச்சினைகளின் காரணமாக, வழக்கறிஞர் விலகிக் கொள்ள அறிக்கை தாமதமாகியிருக்கிறது. Ego clash??

நாட்டின் கவனத்தை ஈர்க்கும் எந்தச் செய்தியானாலும், அதை விசாரிக்க ஒரு நீதிபதியை வைத்து விசாரணைக் கமிஷனை அமைத்துவிடும் பழக்கத்தை இந்திய அரசாங்கம் முதலில் கைவிட வேண்டும். முக்கியத் தலைவர் கொலையில் தொடங்கி, கலவரம், குண்டு வெடிப்பு வரை எதுவானாலும் அரசாங்கத்தின் இந்தப் பழக்கம் தொடர்கிறது.

ஒரு வயது மூத்த நீதிபதி, அவருக்கு ஒரு பரிவாரம், கோடிகளில் பணம், குறைந்த பட்சம் பதினைந்து ஆண்டுகள் என்று இழுத்தடித்து தனது முடிவை கமிஷன் தெரிவிக்கும் வேளையில், அந்த நிகழ்வு, மறக்கப்பட்டதாக, முடிவு வெளி வரும் காலகட்டத்தில் அவ்வளவு முக்கியத்துவமில்லாததாக மாறிவிடுகிறது.அதே நேரம், கமிஷன் சுட்டிக் காட்டும் குற்றவாளிகள், மரணம் அடைந்தோ, வயது முதிர்ந்து பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றோ இருக்கிறார்கள்.

குற்றவாளிகள் தங்கள் வாழ்வில் பதவிகளை அனுபவித்து, சொத்துச் சேர்த்து, ஓய்வு பெற கமிஷன் அமைக்கப்படும் தினத்திற்கும் அறிக்கை வெளியாகும் இடைப்பட்ட பதினைந்து ஆண்டு காலம் போதுமானதாக இருக்கிறது.

விசாரணைக் கமிஷன்களின் முடிவுகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றனவா என்றால் அதுவும் கிடையாது.

சார்புத் தன்மை, அரசியல் சாயங்கள் என்று பெரும்பாலான விசாரணைக் கமிஷன்களுக்கு எந்த நம்பகத்தன்மையும் கிடையாது. பிறகு எதற்காக விசாரணைக்கமிஷன்கள்? மிகச் சுலபமான பதில், உடனடியாக எழும் கேள்விகளில் இருந்து அரசாங்கம் பதில் சொல்லாமல் தப்பித்துக் கொள்ள ஒரு தற்காலிக அல்லது நீண்ட கால உபாயமாக விசாரணைக் கமிஷன்கள் அமைகின்றன.

உதாரணமாக சீக்கியர்கள் மீதாக டெல்லியில் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டங்களை விசாரிப்பதற்கு மட்டுமென்று அஹூஜா கமிஷன், மிஸ்ரா கமிஷன், நானாவதி கமிஷன் உள்ளிட்ட ஏகப்பட்ட கமிஷன்கள் அமைக்கப்பட்டன. இந்த கமிஷன்களின் முடிவுகள் எங்கே? கமிஷனின் முடிவுகள் மீதான நடவடிக்கைகள் என்ன என்றால் யாருக்கும் எதுவும் தெரியப்போவதில்லை.

கமிஷன்களின் நடைமுறைகளில் இருக்கும் ஏகப்பட்ட குளறுபடிகளைத் தவிர்த்துப் பார்த்தாலும், அறிக்கை வெளியிடப்படும் கால கட்டங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக தள்ளி வைக்கப்படுவதும் அல்லது சகாயமான சமயங்களில் வெளியிடுவதும் நடைபெற்று பல்லிளிக்கின்றன.

இந்தியாவில் குற்றவியல் விசாரணைகளை துரிதப்படுத்துவதும், விசாரணை முறைகள் மனித உரிமை மீறலின்றி நடைபெறுவதாகவும் மாற்றியமைக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.

அறுபது ஆண்டுகளுக்கு பிறகாக கமாண்டோ படைகளுக்கான பயிற்சி மையங்கள் மண்டல அளவில் திறக்கப்படுவது எவ்வளவு காலம் தாழ்த்திய செயலோ அதற்கு கொஞ்சம் சளைத்ததல்ல விசாரணைக்கமிஷன்களை அமைப்பதும் அதன் முடிவுக்கு காத்திருப்பதுமான விசாரணை முறைகளை மாற்றியமைக்காமல் இருப்பது.

என்னைப் பொறுத்த வரைக்கும் விசாரணைக்கமிஷன் என்ற வார்த்தை அரசாங்கத்தின் அகராதியிலிருந்து முற்றிலுமாக நீக்கப்படல் வேண்டும்.

3 எதிர் சப்தங்கள்:

Unknown said...

only rowdies are studying in law colleges and becoming lawyers ?.In such case how can we expect justice?.They never speak truth in the court.Everything has become a business.thank God at least after 17 years the commission has given the report.i think the judgement will be given in the next 'jenmam'.
"Incredible India"

கபிலன் said...

விசாரணைக் கமிஷங்கள் பற்றி நீங்கள் கூறி இருப்பது மிகவும் நேர்த்தியான ,உண்மை ! அது மட்டுமல்லாமல் அரசியல் லாபத்துக்காக அதை எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்வது தான் அரசியல்வாதிகளின் வேலை. இத்தனை கால அரசியலில், ஆளுங்கட்சி ஆட்சியில் இருக்கும் போது, ஆளுங்கட்சி சம்பந்தப்பட்ட எந்த ஒரு விசாரணை கமிஷன் அறிக்கையும் அவர்களுக்கு எதிராக சொல்லாததிலிருந்து அதன் உண்மையை மக்கள் புரிந்து கொள்வர் !

Murugesan Ponnusamy said...

Your views are 100 percent correct.The enquiry commission was just for eye washing.The real culprits of those Babri masjid demolition were LK Advani,Murli manohar joshi,PV Narasima rao and Kalyan singh.Except Mr.Rao, now all were alive whether these culprits were prosecuted in the court when the commission named these culprits.