Jun 15, 2008

நித்யா கவிதை அரங்கு-2

முதல் அமர்வு முடிந்த பிறகு எனக்கு பசி அதிகமாகியிருந்தது. "ஹெட்மாஸ்டர்" ஜெயமோகன் மதிய உணவை முடித்துவிட்டு இரண்டரை மணிக்கு மீண்டும் அமர்வினை வைத்துக் கொள்ளலாம் என்றார். நான் ச‌ந்தோஷ‌மாக‌ சிரித்துக் கொண்டேன்.

சாம்பார், ரசம், மோர், பொரியலுடன் மதிய உணவு சூடாக, தயாராக இருந்தது. மதியம் ஒன்றரை மணிக்கும் இருந்த குளிருக்கு அந்த இதமான சூடு தேவையாக இருந்தது. நிர்மால்யா ஒவ்வொருவரிடமும் உணவு குறித்தான கருத்துக்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆந்திராவின் உப்புச் சப்பில்லாத பருப்பை குழைத்து, ஊறுகாய் அல்லது கோங்குராவை துணையாகக் கொண்டு விழுங்கிவிடும் எனக்கு சுவை பற்றிய நுணுக்கமான விஷயங்கள் தெரியாது. உப்புக் கட்டி ஒன்று கரையாமல் வாய்க்குள் போனால் மட்டுமே உணவில் உப்பு அதிகம் என்று முடிவு செய்யும் அளவிற்கு மட்டுமே என் சுவையறிதல் இருக்கும். எனக்கு இந்த உணவு பிடித்திருந்தது. ரசம்தான் குறிப்பாக. மற்றவர்களும் உணவு நன்றாக இருந்தததாக சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டு என் தீர்மானத்தை சரி என்றாக்கிக் கொண்டேன். சமையல் வல்லுநராகவும் இருக்கும் நாஞ்சில்நாடன் அவர்களும் நன்றாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். நான் ர‌ச‌த்தை ர‌வுண்ட் க‌ட்டி அடித்துக் கொண்டிருந்தேன். யுவ‌ன் ட‌ம்ள‌ரில் ஊற்றி குடித்துக் கொண்டிருந்தார்.

திற‌ந்த‌வெளியில் இர‌ண்டாம் அம‌ர்வு தொட‌ங்கிய‌து. என‌து க‌விதைக‌ளை வாசிக்க‌லாம் என்று ஜெய‌மோக‌ன் சொன்னார். ஆனால் ம‌லையாள‌த்தில் மொழிபெய‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ என‌து க‌விதைக‌ள் அப்பொழுது அர‌ங்கில் இருந்தவர்களிடம் இல்லை. நான் கொஞ்ச‌ம் 'கூல்' ஆனேன். முத‌ல் த‌மிழ்க் க‌விதையாக என்னுடைய‌தாக‌ இருக்கும் ப‌ட்ச‌த்தில் அரங்கில் எதிர்வினை எப்ப‌டியிருக்குமோ என்ற‌ ப‌த‌ட்ட‌மே கார‌ண‌மாக‌ இருந்த‌து.

சுகுமார‌ன் அவ‌ர்க‌ளின் க‌விதைக‌ள் வாசிக்க‌ப்ப‌ட்டன.கவிதை வாசிக்கும் போது வெயில் அதிகமானதால் மீண்டும் உள்ளரங்கிற்குள் அமர்வு இடமாற்றப்பட்டது.

"இட‌வ‌ழுவ‌மைதி" முத‌லில் வாசிக்க‌ப்ப‌ட்ட‌ க‌விதை. இந்த‌க் க‌விதையில் அமைந்திருக்கும் க‌தைய‌ம்ச‌ம் ப‌ற்றி விவாதிக்க‌ப்ப‌ட்ட‌து. பி.பி.ராம‌ச்ச‌ந்திர‌ன் இந்தக் க‌விதையில் வாசக‌னுக்கான‌ ப‌ர‌ப்பு இல்லை என்றார்.

art of creation இல் வாச‌க‌னுக்கான‌ இட‌ம் தேவையா என்ற‌ வினா எழுப்ப‌ப‌ட்ட‌து. ஜெய‌மோகன், Statement என்ப‌து வெறும் சொல்லுத‌ல் என்ப‌தையும், Literary Statement என்ப‌து உண‌ர்த்துத‌ல் என்ப‌தையும் சில‌ உதார‌ண‌ங்க‌ளோடு முன் வைத்தார். Literary Statement இல் வாச‌க‌னுக்கான‌ இட‌ம் உருவாகிற‌து என்ப‌து குறிப்பிட‌ப்ப‌ட்ட‌து.

இத‌ன் தொட‌ர்ச்சியாக வாசிக்கப்பட்ட "முத‌லாவ‌து வார்த்தை" க‌விதையில் க‌விஞ‌னோடும், க‌விதையோடும் வாச‌க‌ன் த‌ன்னை இணைத்துக் கொள்வ‌து ப‌ற்றிய‌ க‌ருத்துக்க‌ளை யுவ‌ன் முன்வைத்தார். இந்தக் கவிதை குறித்தான விவாதத்திலும் வாசகன் இடம் பெற்றது முதல் கவிதையில் மேற்கொள்ளப்பட்ட விவாதத்திற்கும், இரண்டாவது கவிதையில் மேற்கொள்ளப்பட்ட விவாதத்திற்கும் ஒரு மென்சரடு தொடர்பினை உருவாக்கியது எனலாம்.

"நீரின்றி அமையாது" க‌விதை வாசிக்க‌ப்ப‌ட்ட‌ போது மொழியில் சுகுமார‌ன் ந‌ட‌த்தும் ஆவ‌ர்த்த‌ன‌ம் ப‌ற்றி விரிவாக‌ அல‌ச‌ப்ப‌ட்ட‌து. இந்த‌க் க‌விதையில் திர‌வ‌ம் அவ்வ‌டிவ‌த்தில் இய‌ங்கும் பொருட்க‌ளை உற‌வுக‌ளோடு இணைப்ப‌து ஆகிய‌ன‌ க‌வ‌ன‌ம் பெற்றன.

இந்தக் கவிதை வாசிக்கப்பட்ட போதும் இதன் பின்னர் "கனிவு" வாசிக்கப்பட்ட போதும், தமிழில் இருந்து மலையாளத்துக்கு செய்யப்பட்ட மொழிபெய‌ர்ப்பில் சில‌ குறைபாடுக‌ள் இருப்ப‌தாக ம‌லையாள‌க் க‌விஞ‌ர்க‌ள் குறிப்பிட்டார்க‌ள். குறிப்பாக‌ அன்வ‌ர் அலியும், பி.பி.ராம‌ச் ச‌ந்திர‌னும்.

"கொற்ற‌வை" நாவ‌லுக்கான‌ த‌ன் உழைப்பு, அந்நாவ‌லின் மொழிய‌மைப்பிற்கான‌ முய‌ற்சி ஆகிய‌வை ம‌லையாள‌ம் மீதான‌ த‌ன் பிடி ந‌ழுவிய‌த‌ற்கு கார‌ண‌ம் என்று ஜெய‌மோக‌ன் குறிப்பிட்டார்.

"க‌னிவு" க‌விதையில் "மிஞ்சிய‌து ச‌ரும‌ம்" என்ற‌ சொல்லாட‌ல் மிக‌ நீண்ட‌ நேர‌ம் பேச‌ப்ப‌ட்ட‌து.

அடுத்த‌ "எட்டுக்காலியும் நானும்" அக‌ம், புற‌ம் குறித்தான‌ உரையாட‌லுக்கான‌ திற‌வுகோலாக‌ அமைந்த‌து. த‌மிழில் புற‌ம் ப‌ற்றிய‌ க‌விதைக‌ள் இல்லை என்ப‌து க‌ல்ப‌ற்றா நாராயணனின் வாத‌ம். தமிழ் இல‌க்கிய‌த்தில் புற‌நானூறு த‌விர‌ வேறெதுவும் புற‌ம் ப‌ற்றிய‌தில்லை என்றும், புற‌நானூற்றிலும் முந்நூறு பாட‌ல்க‌ள் ம‌ட்டுமே புற‌ம் சார்ந்த‌வை என்று ஜெய‌மோக‌ன் குறிப்பிட்டார். வான‌ம்பாடிக் க‌விதைக‌ள் ப‌ற்றியும் அவை புற‌க்க‌விதைக‌ள் என்றும் இந்த‌ இட‌த்தில் குறிப்பிட‌ப்ப‌ட்ட‌து.

தேவ‌தச்ச‌ன் அக‌ம் என்ப‌து உள்நோக்குப் பார்வை என்று தொட‌ங்கி நீண்ட‌ க‌ருத்தை முன்வைத்தார். ம‌ணிமேக‌லையில் அக‌ம் இல்லை என்ப‌தும், ந‌வீன‌ க‌விதையில் அக‌ம், புற‌ம் என்று பேச‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை என்ப‌தும், ஜென் தத்துவ‌ங்க‌ளை ச‌மூக‌ப்பார்வையில் வைப்ப‌து அது க‌விதையின் அடுத்த‌ ந‌க‌ர்வாக‌ இருக்கும் என்ப‌தும் அவ‌ர‌து பேச்சின் சாராம்ச‌ம்.

இந்த‌ அம‌ர்வு என‌க்கு சில‌ முக்கிய‌மான‌ க‌விதையிய‌ல் ப‌ர‌ப்புக‌ளை அடையாள‌ம் காட்டிய‌தாக‌ உண‌ரத் துவ‌ங்கினேன். வாசிக்க‌ப்ப‌ட்ட‌ சுகுமார‌னின் க‌விதைக‌ளில் ப‌ல‌ என் ம‌ன‌தில் ப‌திந்திருந்த‌ க‌விதைக‌ள்‌. இந்த‌க் க‌விதைக‌ள் மீதான ஆழ‌மான‌ விம‌ர்ச‌ன‌ப்பார்வைக‌ளும், விவாத‌ங்க‌ளும் க‌விதைக‌ள் மீதான என் ம‌திப்பீடுக‌ளை சுய‌ம‌திப்பீடு செய்து கொள்ள‌த் தூண்டின. இது கொந்த‌ளிப்பு சார்ந்த‌ ம‌னநிலையை உருவாக்கின‌. இந்த‌ ம‌ன‌ரீதியான‌ கொந்த‌ளிப்பு நீண்டு கொண்டிருந்த‌து.

இந்த‌ அம‌ர்வு முடிந்த‌ பிற‌கு நாராய‌ண‌ குருகுல‌த்தைச் சுற்றியுள்ள‌ ம‌லைப்ப‌குதிக‌ளில் ந‌ட‌ந்துவிட்டு அடுத்த‌ அம‌ர்வினைத் தொட‌ங்க‌லாம் என்று அறிவிக்க‌ப்பட்ட‌து. ஜெய‌மோக‌ன் முன்பாக‌ ந‌ட‌ந்து கொண்டிருந்தார். நான், யுவ‌ன், சுகுமார‌ன் ஆகியோரோடு இணைந்து கொண்டேன். ஓரிட‌த்தில் அனைவ‌ரும் இணைந்து அந்த‌ ம‌லையின் கீழிற‌ங்கி ந‌ட‌ந்து ஊட்டி மேட்டுப்பாளைய‌ம் தொட‌ரூர்தி பாதை வ‌ழியாக‌ குருகுல‌த்தை அடைவ‌தாக‌த் திட்ட‌ம். இந்த நடையின் போது பரவலான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். நான் எத்தனை இடங்களில் காதை நீட்ட இயலுமோ அத்தனை இடங்களிலும் நீட்டிக் கொண்டிருந்தேன்.

குருகுல‌த்தை அடையும் ச‌ம‌ய‌த்தில் க‌ம்பிவேலியைத் தாண்டிக் குதிக்கும் போது யுவ‌ன் கீழே விழுந்தார். இதை இங்கு பதிவு செய்ய‌ வேண்டிய‌தில்லைதான். ஆனாலும் தொட‌ர் க‌ட்டுரையில் அடுத்த‌ ப‌குதி வ‌ரும் வ‌ரை ஒரு ப‌ன்ச் வேண்டாமா. அத‌ற்காக‌த்தான்.

1 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

hi, friends..

very super...

jebamail.blogspot.com

this is my blog...
visit and

keep touch with me...

thank you....