மிகப்பெரும் முத்திரைகளைச் சுமந்து திரிகிறார்கள் சிலர். குத்துவதற்கு முகம் தேடிய களைப்பில் கிடைக்கின்ற முகம் எதுவாக இருப்பினும் குத்திவிடுவதுண்டு. என் முகத்திலும் குத்தப்பட்டிருக்கிறது.
எனக்கு பிழைப்புவாதம், பார்ப்பன அடிவருடி என்ற அடையாளங்கள் எதுவுமில்லை என்பதனை பிறருக்கு நிரூபணம் செய்ய வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்றாலும், நான் மெளனம் சாதிப்பது என்பது யார் வேண்டுமானாலும் பொதுவிடத்தில், நான் மதிக்கும் எழுத்தாளர்களை என் பெயரை உபயோகப்படுத்தி வசைபாடுவதற்கு நான் அனுமதித்தாக ஆகிவிடலாம்.
இறந்தவர்களை இகழ்வதால் தங்களை இலக்கியத்தின் பாதையில் தனித்துவ ராஜபாட்டை நடத்துபவர் என்று இச்சமூகம் நினைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் சிலர் உலவுகிறார்கள்.
சு.ரா மரணத்தின் போது சில தவளைகள் கத்தின.பிறகு நகுலனுக்கு. இப்பொழுது சுஜாதாவுக்கு.
பெரும் விருட்சத்தின் மீதான சிறுநீர் எந்தத் தகர்வினையும் விருட்சத்திற்கு ஏற்படுத்திவிடப்போவதில்லை நண்பர்களே.
தொடர்ச்சியான தன் படைப்புகளின் மூலம் தனக்கென உருவாக்கியிருக்கும் படைப்பாளியின் பிம்பத்தை நீங்கள் அவனின் படைப்பை முன் வைத்தே சிதைக்க முடியும்/வேண்டும்.
இலக்கிய அரசியலின் ஒரு கிளையான இச்செயல்பாட்டில் வெறும் தனிமனித குணங்களை மட்டுமே முன்னிறுத்தி படைப்பாளியை விமர்சனம் செய்வீர்களேயானால் அது ஏழாம்தர அரசியல் செயல்பாடாகிவிடும். படைப்பாளியின் மீதான தனிமனித விமர்சனம் தவிர்க்க இயலாததெனில் அதுவும் கூட அவனது படைப்பின் வழியாகவே வடிவம் பெற வேண்டும் என்பதில் நான் நம்பிக்கையுள்ளவன்.
படைப்பாளியின் தனிமனித குணங்களை பதிவு செய்வதற்கும் அவற்றை விமர்சனம் செய்வதற்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது. விமர்சனத்தில் உங்களுக்கு ஒவ்வாதவற்றை பிரம்மாண்டமாக்குகிறீர்கள். உங்களின் விருப்பு வெறுப்பு பட்டவர்த்தனமாகிறது. மிக நுணுக்கமாக நோக்கினால் முன் தீர்மானத்தோடு அம்பெய்த ஆயத்தமாகிறீர்கள்.
காலச்சுவடு, ஜெயமோகன், உயிர்மை, மனுஷ்ய புத்திரன் என்று நினைவில் வந்தவர்களை எல்லாம் அவர்களின் செயல்பாடுகளை விம்ர்சிப்பதற்கு முன்னதாக தமிழ் இலக்கியத்தில் நமது பங்களிப்பினையும் பரிச்சயத்தையும் சுயபரிசோதனை செய்து கொள்வது நல்லது. பங்களிப்பு செய்தவர்கள்தான் விமர்சிக்க வேண்டுமா என்ற வினாவெழுப்பபடுமெனில் தங்களின் விமர்சனத்தின் மீதான நம்பகத்தன்மையாவது குறைந்தபட்சம் அலசப்பட வேண்டும்.
எந்தப்படைப்பையும் முற்றாக புறக்கணிக்க உரிமை இருப்பதாக நினைப்பவர்கள், அதற்கான தர்க்க காரணங்களை முன்வைக்காமலேயே விமர்சிக்க இயலும் என தங்களின் வசதிக்கேற்ப நடந்து கொள்கிறார்கள்.பின் நவீனத்துவவாதிகளாகிய நீங்கள் தருக்கவியலை கடந்தவர்கள் அல்லவா? எனில், படைப்பை மீறி உங்கள் வியாக்கியானங்களில் மனிதன் எதற்காக வருகிறான்? .
இலக்கியம் அறிந்தவன் என்னும் பிம்பத்தின் மீது எல்லோருக்கும் ஒரு விருப்பு இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் அடைய விரும்பும் பிம்பத்திற்கும் உங்களின் அசலுக்குமான தொலைவினை உங்களின் வாசிப்பிலும், இலக்கிய பங்களிப்பிலும் மட்டுமே குறைக்க முடியும். கலகக்காரனாக இருப்பதற்கும், அறைகூவல் விடுப்பதற்கும் கூட உழைப்பு அவசியமாகிறது.
இந்த இடைவெளியினை 'இலக்கியவாதி'அல்லது 'கலகக்காரன்' என்னும் முகமூடி அணிந்து மட்டும் குறைத்துவிட முடிவதில்லை. எத்தனை நாட்களுக்குத்தான் வறட்சியான சொல்லாட்சி மூலமாகவே உங்களை நிரூபிக்க இயலும்?.
படைப்பினை மறுப்பதற்கு முன்னால் மறுவாசிப்பு செய்வதும், விவாதங்களை உருவாக்குவதும் தன் கருத்துக்களில் நெகிழ்வுத்தன்மை தேவைப்படுவதாயின் நெகிழ்வதும் மிக அவசியமானவை. தொடர்ச்சியான விவாதங்களே உலகின் மாபெரும் தத்துவங்களை உருவாக்கியிருக்கின்றன.
இந்த அடிப்படைச் செய்தி கூட அறியாதவனில்லை என்று தங்களை நிரூபிப்பவரென்றால் விவாதத்தை முன்னெடுக்கும் முன்னதாக படைப்பு குறித்தான ஒரு வரியாவது சேர்க்க வேண்டாமா?.
சொற்களைச் சுழட்டி எழுதுவதும், பிறர் முன்னதாக தம் அறிவுஜீவியின் பிம்பத்தைக் கட்டமைக்க முயல்வதும் எழுத முயல்பவன் செய்யும் மிகச் சாதாரண வித்தைகள். இது ஒவ்வொரு படைப்பாளியும் தாண்டி வர வேண்டிய கட்டங்கள்தான். ஆனால் அதே இடத்தில் நீங்கள் தேங்குவதென்பது உங்கள் மீதான மற்றவர்களின் பரிதாபத்தைக் கூட்டிவிடும்.
நுணுக்கமான எந்த வாசகனும் படைப்பாளியை விட அறிவுடையவன். காற்றில் நீங்கள் உதிர்த்துவிடும் சொல்லுக்கும் சைகைக்கும் உங்களின் உள்மன விருப்பின் பொருளை கண்டறிந்துவிடுவான்.
வெறும் கூச்சல் தன் அரிதாரத்தையும் வடிவையுமிழந்து உங்களின் உண்மையான முகத்தை வெளிச்சமிட்டுவிடும்.
போலிப்பாவனைகளை களைந்து கொண்டேயிருங்கள்.
குறிப்பு: என்னைப் பற்றிய சாணத்தில் கரைத்த சாட்டை வீச்சுக்கு இப்படித்தான் எனக்கு பதில் சொல்லத் தெரியும். விமர்சனங்களுக்கு பதில் சொல்வதற்கும், அற்பத்தின் வெட்டி மொழிக்கு வாய் கொடுப்பதற்கும் இடையேயான பாகுபாட்டினை எளியோனால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.
8 எதிர் சப்தங்கள்:
அன்பின் பார்ப்பன அடிவருடிக்கு,
இது என்ன இப்படி கிளம்பியாச்சு? என்னமோ நிறைய பின்னூட்டம் தானா?
Mani,
As my advice u can simply ignore these kind of people. Dont mind.
Moreover ur points are generic. I like this post much.
s.
இலக்கியவாதியாவதற்கு வாழ்த்துகள்.
மணி,
//பெரும் விருட்சத்தின் மீதான சிறுநீர் எந்தத் தகர்வினையும் விருட்சத்திற்கு ஏற்படுத்திவிடப்போவதில்லை நண்பர்களே.
தொடர்ச்சியான தன் படைப்புகளின் மூலம் தனக்கென உருவாக்கியிருக்கும் படைப்பாளியின் பிம்பத்தை நீங்கள் அவனின் படைப்பை முன் வைத்தே சிதைக்க முடியும்/வேண்டும்.
//
இவ்ள தாம் மேட்டர் !!! இதுவும் கடந்து போம் !
பார்க்க: http://balaji_ammu.blogspot.com/2008/03/428-by.html
இதுக்கு தலைப்பு விளம்பரம் II அப்படின்னு வச்சிருக்கலாம்.
அனானிமஸாக பின்னூட்டமிட்டவர்களுக்கும், ஹரன் பிரசன்னா மற்றும் பாலாவிற்கும் நன்றிகள்.
வா.மணிகண்டன்,
இந்த பதிவை படிக்க நேர்ந்து எனக்கு வந்த `உலகம் எவ்வளவு விநோதமனது' என்ற ஆச்சரியக்குறியுடனான புன்சிரிப்பிற்கு உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த பதிவின் நேர்மையின்மை கலந்த சந்தர்ப்பவாதம் (அதாவது ஹிப்பாக்கரசி)பற்றி பேசும் அளவிற்கு எனக்கு சக்தியும் பொறுமையும் இல்லை. ஒருவேளை உங்களுக்கு அல்லது மற்ற யாருக்க்காவது விளங்கினால் பயனளிக்க கூடும் என்பதற்காக ஒரே ஒரு பாயிண்ட்.
(சுஜாதா மீதான சுகுணாவின் தாக்குதல் எனக்கு ஒப்புதலில்லை என்பது வேறு விஷயம்).
தங்கள் அடையாளத்தை விமர்சித்து கொள்ளாத, ஒருவகையில் பார்பனிய எதிர்ப்பு அரசியலை மறுக்கும்/எதிர்க்கும் சுஜாதா போன்றவர்களை தூக்கி பிடிக்கும் நீங்கள், எந்த தகுதியின் அடிப்படையில் தன் பார்பன அடையாளத்தை வெகுவாக சுய விமர்சனம் செய்துகொண்ட, பார்பனிய அரசியலை (தனது பாணியில்) எதிர்த்து வரும் ஞாநியை மிக கேவலமான முறையில் திட்டி எழுதினீர்கள் என்பது கேள்வி. மீண்டும் சொல்வதானால் சுஜாதா, சுராவுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள், எந்த அடிப்படையில் ஞாநியை `கடைந்தெடுத்த சாதி வெறியர்' என்றீர்கள் என்பது கேள்வி. சுகுணாவின் பதிவில் உள்ளடக்கமாக இந்த கேள்வி உள்ளது. அதற்கு பதில் சொல்லாமல், எதோ எலக்கியவாதி ஆகிவிட்டது போன்ற, மேலோட்டமான வாசிப்பு கொண்டவர்களிடன் செல்லுபடியாகும் பாவனையை விட்டுவிட்டு, முடிந்தால் இந்த ஒற்றை கேள்விக்கு பதில் சொல்லுங்கள் - ஏற்கனவே இந்த பதிவில் சுகுணாவின் வசைகளை கண்டிக்கும் பாவனையில் நாகரீகமான பதில் வசைகளை வைத்தது போல் அன்றி, ஒரு தர்க்கரீதியான வரிகளில்.
vAyai mUdi gammunu irudaa SomARi!
Post a Comment