Nov 28, 2018

சந்ததிக்கான விளைபொருட்கள்- தினமலரில்

ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஏகப்பட்ட பேர் ஃபேஸ்புக் வழியாகத் தொடர்பு கொள்ள முயன்றார்கள்.  யாராவது என்னைப் பற்றி திட்டியிருக்கிறார்களோ என்னவோ என்றுதான் சந்தேகமாக இருந்தது. அப்படியெல்லாம் எதுவுமில்லை. தினமலரில் பாராட்டி எழுதியிருக்கிறார்கள். நிசப்தம் தளத்தில் உள்ள கட்டுரைகளைத் தொகுத்து ஒரு கட்டுரை தயார் செய்திருக்கிறார்கள். படம்தான் அட்டகாசம். ‘எப்படியும் இவனுக்கு அம்பது வயசு இருக்கும்’ என நினைக்க வைத்துவிடும். யூத் என்று காட்டிக் கொள்ள நானே படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த ஓவியர் பெட்ரோலை ஊற்றியிருக்கிறார். உச்சியில் வெறும் நான்கே நான்கரை முடி. அது சரி. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். அநேகமாக என்னை நன்கு அறிந்த ஓவியராகத்தான் இருக்க வேண்டும்.
                                                                   ***



பிளாக்' - வலைப்பூவில் எழுதி, பெரிய அளவு நிதி திரட்டி உதவி வரும், 'நிசப்தம் அறக்கட்டளை' நிறுவனரும், கவிஞருமான, வா.மணிகண்டன்: 

ஈரோடு மாவட்டம், கரட்டடிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவன் நான். கணினியில், முதுகலைப் பட்டதாரி. பெங்களூரில், பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த நான், தற்போது, கோவையில் பணி செய்து வருகிறேன்.'நிசப்தம்' என்ற வலைப்பூவில், மனித உணர்வுகள், வாழ்வின் யதார்த்தங்கள், சமூக அவலங்கள், அரசியல் போன்ற பல விஷயங்களில், என் கருத்தை பகிர்வேன். ஒருமுறை, வாசகர் ஒருவர் கேட்டதற்கிணங்க, கல்வி செலவுக்கான வேண்டுகோளை, என் வலைப்பூவில் வெளியிட, அதற்கு வந்த ஆதரவை கண்டு ஆச்சரியம் அடைந்தேன்.தொடர்ந்து அதுபோல உதவிகள் செய்யத் துவங்கியதும், உள்நாடு, வெளிநாடு என்று, பல இடங்களிலிருந்து, முகமறியாத மனிதர்களிடமிருந்து பணம் வரத் துவங்கியது. ஆரம்ப காலங்களில், என் பெயரிலேயே நன்கொடைகளைப் பெற்று உதவினேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான், 'நிசப்தம்' என்ற அறக்கட்டளையை துவங்கினேன். அதற்குள், எங்கள் அறக்கட்டளை செய்திருக்கும் உதவிகள், ஒரு கோடிக்கும் மேலிருக்கும். அறக்கட்டளையின் வரவு - செலவுகளை, வங்கியின் அறிக்கையோடு, மாதந்தோறும், வலைப்பூவில் வெளியிட்டு வருகிறேன்.

கடந்த, 2015ல், பெருவெள்ளத்தில், அரசு நிவாரணப் பணிகள் சென்றடையாத கிராமங்களைச் தேடிச் சென்று உதவினோம். கடந்த ஆண்டு முதல், ஏரி, குளங்களைத் துார் வாரி மீட்டெடுத்தல், சமுதாயக் காடுகள் உருவாக்கம் போன்றவற்றை, செய்யத் துவங்கினோம். ஈரோட்டில், வேமாண்டம்பாளையம், ஒரு சிறிய கிராமம். ஓராண்டுக்கு முன், அந்த ஊர் குளம் மட்டுமல்ல, பஞ்சாயத்து முழுவதிலும் இருந்த சீமைக் கருவேலங்கள், அறக்கட்டளை மூலம் அழிக்கப்பட்டன. கிட்டத்தட்ட, 60 ஏக்கர் குளம்; மழையைத் தவிர வேறு எந்த வழியுமில்லை; வானம் பார்த்த பூமி.காய்ந்து கருவாடாக கிடந்த குளம், மழையால் இப்போது நிரம்பி இருக்கிறது. ஓராண்டு காத்திருப்புக்குப் பின், பெருமகிழ்ச்சி. இதுபோல மேலும் இரண்டு கிராமங்களுக்கு செய்துள்ளோம். முதலில், கிராமங்களில் இளைஞர்களை அழைத்து பேசுவோம். வேமாண்டம்பாளையத்தில் அத்தனை பணிகளையும் செய்தது, உள்ளூர் இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் தான். அதிகாரிகளை சந்தித்துப் பேசினால், 95 சதவீதம் பேர் உதவுகின்றனர். நல்லவர்கள் நான்கு பேர் கொடுக்கும் பணத்தை வாங்கி, தனிப்பட்ட நபர்களுக்கு உதவுவது, ஒரு சங்கிலித் தொடராக இருக்க வேண்டும். உதவி செய்கிறவர்களை விடவும், உதவி பெறுகிறவர்களிடம் இந்த எண்ணம் வலுக்க வேண்டும். அதுதான், நாம் படும் அத்தனை சிரமங்களுக்குமான அர்த்தமாக இருக்கும்.நாம் விதைக்கிற ஒவ்வொரு ரூபாயும், அடுத்தடுத்த சந்ததிக்கான விளைபொருட்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.

                                                                ***

கட்டுரையில் இரண்டு திருத்தங்கள் :

1) எப்பொழுதுமே என்னுடைய தனிப்பட்ட கணக்குக்கு பணம் பெற்று உதவியதில்லை. ஆரம்பத்தில் பயனாளியின் கணக்கு எண்ணை நேரடியாகக் கொடுத்துவிடுவேன். நன்கொடையாளர்கள் அவர்களுக்கு பணம் அனுப்பிவிடுவார்கள். 

2) வேமாண்டம்பாளையத்தில் ஓரளவுதான் ஆதரவு இருந்தது. கோட்டுப்புள்ளாம்பாளையத்தில்தான் நல்ல ஆதரவு கிடைத்தது. ஆனால் மழையின் காரணமாக குளம் நிரம்பியது உண்மை. (கடந்த கல்கி இதழில் இந்தவொரு தொனியில் கட்டுரை வெளியாகியிருந்தது. அதனடிப்படையில் எழுதியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். அந்தக் கட்டுரையையும் நிசப்தத்தில் பதிவு செய்துவிடுகிறேன்).

தினமலர் குழுவுக்கு மனப்பூர்வமான நன்றி.

6 எதிர் சப்தங்கள்:

Nandha said...

Neengal poga vendiya dhooram innum ulladhu.. also as a regular follower of your blog, I found those two issues before I read your notes in the end.. good going boss.. happy for you..

Felix said...

அடர்வனம் status sollunga Sir

Anonymous said...

After seeing the image i thought he gave you much hair...Mani anna wil be happy.

Thirumalai Kandasami said...

அது என்னங்க.? ரெண்டு கன்னத்திலும்கதாநாயகன் மாதிரி ROSE அப்பி விட்டுருக்காங்க . ஏதாவது குறியீடா .?

Anonymous said...

ராமராஜன் தோற்றார் போங்கள். 😁

Dr.. K. Kalaiselvi said...

Congratulations Sir