இன்றைய ( 06 ஜூன், 2016) தினமலரில் மூன்றாம் நதி நாவல் குறித்து விமர்சனம் வெளியாகியிருக்கிறது.
அநேகமாக எனது எழுத்துக் குறித்து பொது ஊடகத்தில் விரிவாக எழுதப்பட்ட முதல் விமர்சனக் கட்டுரை இதுதான். அறக்கட்டளை, சமூகப்பணிகள் குறித்தான பதிவுகள் வெளியாகியிருக்கின்றன. நேர்காணல்கள் கூட வெளியாகியிருக்கின்றன. ஆனால் எழுத்து, புத்தகங்கள் பற்றியெல்லாம் எதுவும் வெளியானதில்லை. அதற்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம்- நாம் எழுதுவது இன்னமும் மேம்பட வேண்டும் என்று மட்டும்தான் நினைத்துக் கொள்வேன். அதற்கு மேல் வேறு எதையும் போட்டு அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.
என்னதான் மற்றவர்கள் நம்முடைய பிற காரியங்களைப் பாராட்டினாலும் எழுத்துக்கான மரியாதைதான் உள்ளூர மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. எழுத்துதான் இந்தச் சிறு அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. எனவே அந்தச் சந்தோஷம் இருக்கத்தான் செய்யும்.
வெளிப்படையாகச் சொன்னால் விருதுகள் குறித்தெல்லாம் எனக்கு எந்தவிதமான ஆர்வமும் எதிர்பார்ப்பும் இல்லை. பெரும்பாலான விருதுகள் எப்படி வழங்கப்படுகின்றன என்பதை அறிந்தும் இருக்கிறேன். ஆனால் நாம் எழுதியதை இப்படி யாராவது விமர்சிக்கிறார்கள் அல்லவா? உண்மையிலேயே அது உற்சாகமளிப்பதாக இருக்கிறது.
நல்லதோ கெட்டதோ பொதுவெளியில் நாம் எழுதுவதை வாசித்துப் பேசுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அதைப் பிரசுரம் செய்வதற்கு ஒரு ஊடகம் தயாராக இருக்கிறது. பிரசுரமானதைப் பார்த்துவிட்டு ‘உங்க புத்தகம் பத்தி வந்திருக்கு’ என்று உடனடியாக நம்மிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் நண்பர்கள் இருக்கிறார்கள். இது போதாதா?
விமர்சனக் குறிப்பை எழுதிய தூயனுக்கும் வெளியிட்ட தினமலருக்கும் நன்றி.
2 எதிர் சப்தங்கள்:
I am happy for you 😊
Melum valara vaalthukkal Mani Sir..
Post a Comment