Apr 25, 2016

உரையாடல்

படிக்காதவர்கள் என்றில்லை படித்தவர்களிடமே கூட மிகப்பெரிய மூடநம்பிக்கை ஒன்றிருக்கிறது. எந்தக் கட்சி ஆட்சியமைக்கிறதோ அந்தக் கட்சியை சார்ந்தவர்தான் நமது ஊருக்கு எம்.எல்.ஏவாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அப்படியே இருக்கட்டும் கடந்த ஆட்சியில் அதிமுக உறுப்பினர்களில் எத்தனை பேர் அள்ளிக் கொட்டி அவரவர் தொகுதியை சீராட்டிக் குளிப்பாட்டினார்கள்? அதற்கு முந்தைய திமுக ஆட்சியில் எத்தனை திமுக உறுப்பினர்கள் தத்தம் தொகுதியை சிங்கப்பூராக மாற்றினார்கள்? ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. தொகுதிக்காக பாடுபட வேண்டும் என்று விரும்புகிற எம்.எல்.ஏ எந்தக் கட்சியாக இருந்தாலும் பாடுபட முடியும். திருட வேண்டும் என நினைக்கிற எம்.எல்.ஏ எந்த ஆட்சியிலும் திருட முடியும். 

பிரச்சினை கட்சியில் மட்டுமில்லை. நாம் தேர்ந்தெடுக்கிற உறுப்பினர்களிடமும் இருக்கிறது. சட்டமன்றத்தில் குருட்டுவாக்கில் ஆதரித்து லாவணி பாடுவதும், தலையைக் குனிந்தபடி அமர்ந்திருப்பதும், வெளிநடப்பு செய்வதும், வளர்ச்சிப்பணிகளில் கமிஷன் வாங்குவதும், ஸ்கார்ப்பியோ காரில் உள்ளூரில் சுற்றுவதும் மட்டுமே சட்டமன்ற உறுப்பினரின் வேலை இல்லை. எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் துணிந்து குரல் எழுப்ப வேண்டும். அதற்கான தகுதி இருக்கிற வேட்பாளரைக் கண்டுபிடிக்கலாம். கேள்வி கேட்காவிட்டாலும் தொலைகிறது அதிகாரிகளிடம் பேசுகிற திறனிருக்கிற வேட்பாளரை ஆதரிக்கலாம். ஒருவேளை நாம் எதிர்பார்த்தபடி செயல்படவில்லையென்றால் துணிந்து கேள்வி கேட்கலாம். அத்தனை எம்.எல்.ஏக்களும் சினிமாவில் வருகிற எம்.எல்.ஏக்களைப் போல வெட்டுகிறவர்களாகவும் குத்துகிறவர்களாகவுமே இருப்பதில்லை என்பதுதான் உண்மை. எண்பது சதவீத எம்.எல்.ஏக்களிடம் நம்மால் கேட்க முடியும். ஆனால் நாம்தான் கேட்பதில்லை.‘நமக்கு எதுக்கு வம்பு?’ என்று அமைதியாக இருந்து கொள்கிறோம். 

நம்மில் எத்தனை பேர் எம்.எல்.ஏக்களுக்கு ஆலோசனைக் கடிதங்களாவது எழுதியிருக்கிறோம்? பத்துக் கடிதங்கள் சென்றால் பதினோராவது கடிதத்துக்காவது அசைவார்கள். ஒன்று- நாம் கண்டு கொள்ளவே மாட்டோம். இல்லயென்றால் சாலை மறியல் செய்வோம். இரண்டுக்கும் நடுவில் இருக்கும் வாய்ப்புகள் பற்றி யோசிப்பதே இல்லை என்பதுதானே நிஜம்? ஆனால் அரசியல் மாற்றங்கள் பற்றி உள்ளுக்குள் ஆதங்கப்படுகிறோம்.

மாற்றம் நம்மிலிருந்து தொடங்க வேண்டும். களத்தில் இறங்கி, போராடி , தேர்தலில் நின்றெல்லாம் காமெடி செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை. அவரவர் பலம் அவரவருக்குத் தெரியாதா? சிறு கல்லை எடுத்துப் போடலாம். சலனம் உண்டாகட்டும். கட்சி, சாதி, அரசியல் சார்பில்லாமல் வேட்பாளரை மட்டும் பார்க்கலாம். நாம் ஆதரிக்கிற வேட்பாளர் வெல்கிறாரா தோற்கிறாரா என்பது இரண்டாம்பட்சம். பொதுமக்கள் வேட்பாளரின் தகுதிகளைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்கிற பேச்சு கட்சிகளிடையே எழட்டும். பணமும் அதிகாரம் மட்டுமிருந்தால் வென்றுவிட முடியும் என்கிற நினைப்பில் மண்ணை அள்ளிப் போட வேண்டும்.

இதெல்லாம் ஓரிரவில் நடந்துவிடுகிற காரியமில்லை. வெகு காலம் பிடிக்கும். ஆனால் அதற்கான முன்னெடுப்புகள் தொடர்ந்து இருக்க வேண்டும். அடுத்து உள்ளாட்சித் தேர்தல் அப்புறம் நாடாளுமன்றத் தேர்தல் என்று தேர்தல்கள் வந்து கொண்டேதான் இருக்கும். 

நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்தால் துணிந்து பேச வேண்டும். தொடர்ந்து உரையாட வேண்டும். ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை அடையாளப்படுத்தும் போது எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். முத்திரை குத்துவார்கள். எதிரிகள் உருவாவார்கள். எல்லாம் நடக்கட்டுமே. என்ன ஆகிவிடப் போகிறது? நம் மனசாட்சிக்குத் தெரிந்ததைப் பேசுவோம். சர்ச்சைகள் இல்லாமல் விவாதங்கள் சாத்தியமேயில்லை. விவாதங்கள் இல்லாமல் மாற்றங்களுக்கு வாய்ப்பேயில்லை. 

நாம் நன்றாக இருக்க வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும். எதுவும் பேசக் கூட கூடாது. ஆனால் சமூகத்தில் மாறுதல் உண்டாக வேண்டும் என்றால் எப்படி உருவாகும்? ஒவ்வொரு பிரச்சினைக்கும் தொண்டை நரம்பு புடைக்கக் கருத்துச் சொல்லிவிட்டு தேர்தல் சமயத்தில் ‘எனக்கு அரசியல் பிடிக்காது’ என்பதைப் போன்ற அபத்தம் வேறு என்ன இருக்க முடியும்? நம் ஒவ்வொருவரிடமிருந்து குரல் எழும்பினால் மட்டுமே சாத்தியமாகும். மாற்றம் நம்மிலிருந்துதான் தொடங்கட்டும்.

தகுதியான வேட்பாளர் எந்தக் கட்சியாக இருந்தாலும் வெல்லட்டும். வெல்லப் போகிற கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கண்மூடித்தனமாக நம்ப வேண்டியதில்லை. வேட்பாளர் தேர்வுதான் மிக அவசியம். அத்தகைய சரியான வேட்பாளர் தேர்வுக்கான துளி பங்களிப்பாவது நம்மிடமிருந்து இருக்க வேண்டும். ‘நமக்கு எதுக்கு வம்பு?’ என்ற மனநிலையில் ‘எவனோ ஜெயிக்கட்டும்’ என்றால் நிச்சயமாக எவனோதான் ஜெயிப்பான். பணம் இருக்கிறவன்; அதிகாரமிக்கவன்; அராஜகவாதிதான் வெல்வான். 

காமராஜரைக் கூட தோற்கடித்தவர்கள்தானே நாம்? 

‘இவனும் வேண்டாம்; அவனும் வேண்டாம்’ என்று பேசிக் கொண்டேயிருந்தால் என்னதான் நடக்கப் போகிறது? ‘சரி சரியான ஆளை அடையாளம் காட்டு’ என்று கேட்கத்தான் செய்வார்கள். கழுவின மீனில் நழுவுகிற வேலை அரசியலில் ஆகாது. யாராவது ஒருவரை ஆதரிக்கத்தான் போகிறோம். அதை வெளிப்படையாகச் செய்வோம்.

எந்தவிதமான பங்களிப்புமில்லாமல் யாரையாவது வெல்ல அனுமதித்துவிட்டு தேர்தலுக்குத் தேர்தல் ‘ஐந்து வருடங்கள் பதவியில் இருந்தான் ஆனால் ஒன்றுமே செய்யவில்லை’ என்று புலம்புவதில் அர்த்தம் எதுவுமில்லை. 

அரசியலால் எனக்கும் உங்களுக்கும் துளி ஆதாயம் இல்லாமல் இருக்கலாம். நட்டமும் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் வெளிப்படையாக பங்கெடுப்போம். மக்களின் பங்களிப்போடுதான் மாறுதல் நிகழ முடியும். எல்லாவிதமான விருப்பு வெறுப்புகளையும் விட்டுவிட்டு திறந்த மனதுடன் விவாதிக்கத் தொடங்குவோம். இங்கே நடந்து கொண்டிருப்பது அத்தனையும் கட்சி சார்ந்த, தலைவர்கள் சார்ந்த விவாதங்கள்தான். அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வேட்பாளர் சார்ந்த விவாதங்களை ஆரம்பிப்போம். அதுதான் சாமானியனின் சரியான அரசியல் செயல்பாடு. மாநில அளவிலான அரசியல் விவாதங்களை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும் ஆனால் உள்ளூர் பிரச்சினைகள் சார்ந்த வேட்பாளர்கள் சார்ந்த விவாதங்களையும் உரையாடல்களையும் அந்தந்த ஊர்க்காரர்கள்தான் செய்ய முடியும். அதை ஆரம்பிப்போம். மேலும் மேலும் விவாதிப்போம்!

4 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

http://tamil.oneindia.com/news/tamilnadu/young-voters-support-seeman-252088.html

சேக்காளி said...

//நட்டமும் இல்லாமல் இருக்கலாம்//
இல்லையென்றால் எப்படி?. யாரோ ஒரு மந்திரி விரைவாக செல்வதற்காக அரைமணி நேரம் நிறுத்தி வைக்கப்படும் போக்குவரத்தினால் நமக்கு நட்டம் இல்லையா.
இது போன்று எத்தனையோ நட்டங்கள் அன்றாட வாழ்வில் நிகழ்கிறது.

Vinoth Subramanian said...

Keep saying.

Anonymous said...

In fact I expected more feedback from your readers for this post. This is very bold and constructive step towards cleansing the system. I understand now how monumentally difficult it is. Atleast 10000 readers could have read this post. The number of responses puzzling me (or most of us become 'doers' and do their bit to elect Mr saravanan) Who could do what as I am sure Mani is not a 'that' politician to send Autos to our homes :)-. To me this is the best way to tell the political parties to select the right candidates. I may support DMK or may not. But my hearty wishes for the people to vote and elect their best candidate for Gopi. Would request then not to miss a chance to be an example for rest of Tamil Nadu.

and Mr Manikandan, I have no words to appreciate you. Wish you a long, happy and peaceful life to take more and more such initiatives.

In fact my office is in HSR and I live in Indiranagar, couldn't get a chance to meet you. I did go to the Hope I will get one soon. I did go to your coffee shop, the one near the Lido Mall. a few times..

-Dev.