வெப்துனியா தளத்தில் ஒரு தொடர் எழுதுவதற்கு ஒரு வாய்ப்பு வந்தது. வெப்துனியாவுக்கு நல்ல ரீச் உண்டு. அச்சு ஊடகத்தில் எழுதுவதற்கு ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகள் சொல்வார்கள். அதனாலேயே அச்சு ஊடகத்தில் எழுதுவதில் பெரிய சிரமம் இருக்கிறது. அவர்கள் சொன்ன ஃபார்முலாவில் எழுதிவிட்டு பார்த்தால் நமக்கும் பிடிக்காது அவர்களுக்கும் பிடிக்காது. ஆனால் வெப்துனியாவில் அதெல்லாம் சொல்லவில்லை. ‘நான் பார்த்தேன்; நான் கேட்டேன்’ என்று உங்கள் பார்வையில் இருந்து எழுதாமல் பொதுவாக எழுதித் தந்தால் போதும் என்றார்கள். வெப்துனியாவுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களில் சில நூறு பேர்களையாவது நம் பக்கமாக திருப்ப முடியும் என்ற நம்பிக்கையில் ஒத்துக் கொண்டேன்- சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
முதல் கட்டுரையை அனுப்பியாகிவிட்டது. பிரசுரமும் செய்துவிட்டார்கள்.
முதல் கட்டுரையை அனுப்பியாகிவிட்டது. பிரசுரமும் செய்துவிட்டார்கள்.
***
VIBGYOR- வானவில்லின் இந்த ஏழு வர்ணங்களைத்தான் ஒரு வாரத்திற்கும் மேலாக பெங்களூர் உச்சரித்துக் கொண்டிருக்கிறது. இது வெறும் வானவில்லின் நிறங்கள் மட்டுமில்ல- பெங்களூரில் பள்ளியின் பெயரும் கூட. இந்தப் பள்ளியைத்தான் திட்டுகிறார்கள். அதன் நிர்வாகத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்துகிறார்கள். சாபம் விடுகிறார்கள். இது சாதாரணப் பள்ளி இல்லை. இந்தியா முழுவதும் மும்பை, லக்னோ உட்பட ஏழு நகரங்களில் இந்தப் பள்ளி செயல்படுகிறது. பெங்களூரில் மட்டுமே எட்டு இடங்களில். Chain of Schools. இந்தப் பள்ளியின் ஒரு வளாகத்தில்தான் ஆறு வயது பெண் குழந்தையைச் சீரழித்திருக்கிறார்கள். ஜூலை 2 ஆம் தேதியே சம்பவம் நிகழ்ந்துவிட்டது. ஸ்கேட்டிங் சொல்லித் தரும் பயிற்சியாளன் குழந்தையை பள்ளி வளாகத்திலேயே பலாத்காரம் செய்திருக்கிறான். நடந்ததை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி அனுப்பிவிட்டான். குழந்தை பயந்துவிட்டது. யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் பிஞ்சு உடல் தாங்கவில்லை. சீர் குலையத் துவங்கியிருக்கிறது. என்னமோ ஏதோவென்று பெற்றோர்கள் மருத்துவர்களிடம் தூக்கிச் செல்ல அங்குதான் எவனோ கசக்கியிருக்கிறான் என்று கண்டறிந்திருக்கிறார்கள். இதைக் கண்டுபிடிக்கும் போது சம்பவம் நிகழ்ந்து பன்னிரெண்டு நாட்கள் ஆகிவிட்டது.
பதறிய பெற்றோர் பள்ளியை அணுகியிருக்கிறார்கள். சரியான பதில் இல்லை. பிறகு காவல்துறையை அணுகி பிரச்சினை பெரிதாக்கப்பட்ட பிறகும் வெகுநாட்களுக்கு பெரிய நடவடிக்கைகள் இல்லை. பள்ளி நிறுவனர் பெரும்புள்ளி. ஏற்கனவே மிகப்பெரிய தொழிலதிபர்- ருஸ்டோம் கெரவாலா என்ற அந்த மனிதர் மும்பையில் ஏகப்பட்ட ஹோட்டல்களை நடத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்தவர். தனது கார்போரேட் மூளையை வேறு எங்கு பயன்படுத்தினால் அள்ளியெடுக்கலாம் என யோசித்த போது கண்ணில் சிக்கிய தொழில்தான் கல்வி. எவ்வளவுதான் முட்டாளாக இருந்தாலும் ஒரு கல்வி நிறுவனத்தை ஆரம்பித்தால் கோடிக்கணக்கில் சம்பாதித்துவிடலாம். கார்பொரேட் மனநிலையுடன் ஆரம்பித்தால்? ஒரு மாணவருக்கு கிட்டத்தட்ட லட்சத்தில் ஃபீஸ். பெங்களூர் முழுவதும் பள்ளி கொடிகட்டிய போதுதான் இந்தப் பிரச்சினை வெடித்துவிட்டது.
விடுவார்களா நிர்வாகத்தினர்? எங்கள் பள்ளியில் நடக்கவே இல்லை என்றார்கள். யாரும் நம்புவதற்குத் தயாராக இல்லை. அவசர அவசரமாக தரவுகளை அழிப்பதற்கான முஸ்தீபுகளில் இறங்கிவிட்டார்கள். இந்த விவகாரம் கசிந்து பள்ளிக்கு ஏதேனும் பாதிப்பென்றால் கோடிக்கணக்கில் நஷ்டம் உண்டாகும் அல்லவா? அப்பொழுதும் பள்ளி உரிமையாளர் மீது நடவடிக்கை இல்லை. பணம் பாதாளத்தில் பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டு பெங்களூர்வாசிகள் களத்தில் இறங்க ஊர் முழுவதும் பதாகைகளும் கொடிகளும் உயர்ந்தன. போராட்டங்களும் கிளம்பின. ‘இதைத் தவிர உங்களுக்கு வேறு செய்தியே இல்லையா?’ என்று முதலமைச்சர் சித்தராமையா வெறுப்படைந்தார். மாநகர கமிஷனராக இருந்த ராகவேந்திரா அவுராத்கர் மீது சந்தேகம் திரும்பியது. அவரால்தான் விசாரணை சுணங்குகிறது என பேச்சு எழ அவரைத் தூக்கியடித்தார்கள். இப்பொழுது புது கமிஷனர் வந்திருக்கிறார். அதன் பிறகுதான் பள்ளி நிறுவனர் கைது செய்யப்பட்டார். ஆனால் ஒரே நாள்தான். காலையில் கம்பி எண்ணச் சென்றவர் மாலையில் வீடு திரும்பிவிட்டார். ஜாமீன் கொடுத்துவிட்டார்கள். இனி தரவுகளை அழிக்கமாட்டாரா?
இது ஒரு சாம்பிள் சம்பவம்தான். கல்வியை வியாபாரமயமாக்கிவிட்டு வெறும் பொருளீட்டுவதற்கான தொழிலாக மாற்றினால் இப்படித்தான் நடக்கும். அரசியல்வாதிகள் ஓய்வு பெறும் காலத்தில் சம்பாதிப்பதற்கு வாகான தொழிலாக கல்வி மாறிவிட்டது. திருடர்களும், ரவுடிகளும் தங்களின் சம்பாத்யத்தை முதலீடு செய்வதற்காக கல்விச்சாலைகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். முன்பெல்லாம் கல்வித்தந்தை என்றால் மரியாதை இருக்கும். நேர்மையாளர்கள், கல்வியாளர்கள், பண்பாளர்களைத்தான் அப்படி அழைத்தார்கள். இப்பொழுது கவனித்தால் தெரியுமே- அயோக்கியனும் பணமுதலைகளும்தான் கல்வித்தந்தைகள். எப்படி விளங்கும்?
இத்தகைய சம்பவங்களை முற்றாகத் தடுப்பது என்பது சுலபமில்லைதான். நம்மைச் சுற்றிலும் மிருகங்கள்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அந்த மிருகங்களுக்கு குழந்தைகளும் தெரியாது கிழவிகளும் தெரியாது. காமம் கண்களை மறைக்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆறு வயது குழந்தையென்றாலும் சீரழிக்கிறார்கள். பதினொன்றாம் வகுப்பு மாணவி என்றாலும் சீரழிக்கிறார்கள். ஆனால் பள்ளி வளாகத்திலேயே சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் பதினோரு மணிக்கு. அப்படியிருந்தும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளாமல் தட்டிக் கழிக்கிறார்கள் பாருங்கள். அதற்காகத்தான் இவர்களை அடித்து நொறுக்க வேண்டும். ஆறு வயதுக் குழந்தையை ஒரு வக்கிர மனிதன் கசக்கியிருக்கிறான் என்பதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் தனது தொழில் பாதிக்கப்படும் என்று ஆதாரங்களை அழிக்கிறார்கள் அல்லவா? அதற்காகவே என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்.
கல்வியை பணம் கொழிக்கும் தொழிலாக பார்ப்பதால்தான் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் மூடி மறைக்க பார்க்கிறார்கள். எங்கள் பள்ளியில் நடக்கவில்லை என்று புரட்டுகிறார்கள். அப்படியே வெளியில் தெரிந்தால் காசை வீசி ஆதாரங்களை அழிக்கிறார்கள். எவ்வளவு குரூர மனநிலையாக இருக்க வேண்டும்?
ஒரு குழந்தைக்கு ஒரு லட்சம் ஃபீஸ் என்றாலும் கணக்கு போட்டுக் கொள்ளலாம். இந்த வளாகத்தில் மட்டும் மூவாயிரத்து ஐந்நூறு குழந்தைகள் படிக்கிறார்கள். இந்த கார்போரேட் கல்வி வியாபாரிகளுக்கு குழந்தைகள் ரத்தமும் சதையுமான உயிர்கள் இல்லை. வெறும் பணம். அவ்வளவுதான். சென்னையிலும் பெங்களூரிலும் என்றில்லை. எந்தச் சிறு நகரத்திலும் தனியார் பள்ளிகள் பல்லாயிரக்கணக்கில் வசூலிக்கிறார்கள். அரசுப்பள்ளிகளில் கல்வி தரமில்லை என்கிறார்கள். ஆசிரியர்கள் சரி இல்லை என்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு பணம் போனால் போகட்டும் என்று பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு ஓடுகிறார்கள். அவர்கள் வேட்டை நடத்துகிறார்கள். வெறும் மதிப்பெண் வாங்கும் ப்ராய்லர் கோழிகளாக தங்கள் குழந்தைகளை மாற்றிக் கொடுங்கள் போதும் என்று பெற்றவர்கள் விரும்புகிறார்கள். தேதி தவறாமல் மாமூல் கொடுத்தால் போதும் என்பதோடு அரசும் அதிகாரவர்க்கமும் திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். இதைப் பயன்படுத்தி கல்வித் தந்தைகள் சம்பாதித்துக் குவிக்கிறார்கள். பெற்றோர்களின் சட்டையில் மட்டுமில்லை இதயத்திலும் ஓட்டையைப் போட்டு ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.
பள்ளிக்கல்வி என்பது வெறும் பணத்தையும் மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சீரழிந்து கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வியின் வணிகமயமாக்கலை தடுத்தால் மட்டுமே இது போன்ற சீரழிவுகளைத் தடுக்க முடியும். அரசாங்கங்கங்கள் தொலைநோக்கோடு யோசித்தால் கூடிய சீக்கிரம் கல்வியை அரசுமயமாக்கிவிடலாம். இது சாதாரணக் காரியமில்லைதான் ஆனால் சாதிக்க முடியாத விஷயமில்லை. கல்லூரிகளை விட்டுவிடலாம். குறைந்தபட்சம் பள்ளிக் கல்வியை மட்டுமாவது தனியார்களிடமிருந்து பறிக்க வேண்டும். கல்வி என்பது பணம் காய்ச்சி மரம் இல்லை என்ற நிலைமையை அரசாங்கம்தான் உருவாக்க வேண்டும். அனைத்துக் குழந்தைகளுக்கும் பொதுவான பாடத்திட்டம் என்ற சூழலை உருவாக்கி. பள்ளிக் கல்வியில் அனைத்து குழந்தைகளும் சமம் என்கிற நிலைமை வர வேண்டும். ஒரு நல்ல அரசாங்கம் வந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம். அதுவரை நாம் கனவு கொண்டேயிருக்க வேண்டியதுதான்.
10 எதிர் சப்தங்கள்:
உங்க ஸ்டைலில் தன்னிலை கட்டுரைகளே அனுப்புங்கள் மணி. இது வேறு யாரோ எழுதியது போலிருக்கிறது. வாழ்த்துக்கள்
நீங்க சொன்னது போல் தன்னிலை வார்த்தைப் பிரயோகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறீர்கள் போலிருக்கு. ஆனாலும் அது தனியாகத் தெரியவில்லை. நல்லாவே இருக்கு. வாழ்த்துக்கள்.
பணம் சம்பாதிக்க பள்ளி, கல்லூரி ஆரம்பிப்பவர்களுக்கு இதுவெல்லாம் பெரிய பிரச்சனையாக இருக்காது! ஆனால் பெரிய பள்ளி என்று சேர்த்த பெற்றோர்களுக்கு? பள்ளிகள் கல்லூரிகள் மீது அரசாங்கத்தின் கண்காணிப்பு அவசியம் தேவைப்படுகிறது
இந்த பள்ளியில் என் நண்பரின் குழந்தைகளும் படித்து வருகின்றனர். வகுப்பிற்கு பிரி.கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. ஒரு வகுப்பிற்கு 24 கட்டாயம் மாணவர்களுக்கு மேல் கிடையாது. ஒரு வகுப்பிற்கு 2 ஆசிரியர்கள் மற்றும் ஒரு உதவியாளர் உள்ளனர். சில வகுப்புகளில் ஏ பிரிவில் இருந்து இசட் பிரிவைத் தாண்டி, ஏ1, பி1, சி1 ஆகிய பிரிவுகளும் உள்ளன.
கட்டணம் 1 லட்சத்தில் இருது ஆரம்பம் ஆகிறது. பள்ளி பேருந்து வசதி வேண்டுமெனில் 35 ஆயிரம் முதல் தொலைவிற்கு ஏற்ப கூடுதல் கட்டணம்.
சுமார் 3500 மாணவர்கள் படிக்கும் மிகப் பிரமாண்டமான பள்ளி.
"பள்ளிக்கல்வியின் வணிகமயமாக்கலை தடுத்தால் மட்டுமே இது போன்ற சீரழிவுகளைத் தடுக்க முடியும்." என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
எத்தனை முறை இந்தச் செய்தியைப் படித்தாலும் கோபம் அடங்கவில்லை... பிள்ளைகளுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என மற்ற பள்ளிகள் எழுதி வாங்க முடிவு செய்ததும் எவ்வளவு பெரிய கொடுமை...
அரசாங்கம் என்று தனது கடமையில் இருந்து தவறியதோ.....பள்ளிகளின் உள் கட்டமைப்புகளுக்கு நிதி ஆதாரம் முற்றிலுமாக குரக்கப்பட்டு....தனியார் மாயம் ஊக்குவிக்கப்பட்டதோ.....இன்னும் நிலமை மோசமாக செல்லும்....
அரசு உயர்நிலைப் பள்ளிகள் எந்தவித முன்னேர்ப்பாடும் சேய்யாமல், கூடுதல் கட்டிடங்கள் இன்றி, அனுபவ ஆசிரியர்கள் இல்லாமலும்... மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன...... என்ன கொடுமை.....
தனியார் பள்ளிகளை கட்டுப்டுத்த கூட அரசால் முடியவில்லை....
மணி,
இதில் மேலும் மொள்ளமாரித்தனம் நடந்துள்ளது.
அப்பள்ளியை நடத்தத் தேவையான ICSE அங்கீகாரம் இவ்வாண்டுதான் கிடைத்துள்ளது. அதைக்கொண்டு அடுத்த ஆண்டு முதல்தான் முறையாக வகுப்புகளை நடத்த முடியும். இதை ICSE துறை இயக்குநர் தெளிவாகவே கூறி
உள்ளார்.
இத்தனை நாட்களும் அங்கீகாரமில்லாமலே வண்டி ஓட்டியிருக்கிறார்கள்.
காவல்துறையின் சுணக்கத்திற்கும், முதலமைச்சரின் எரிச்சலுக்கும் இதுதான் காரணம்.
இவர்கள் சும்மா இருக்க எவ்வளவோ வாங்கியிருக்கலாம் அல்லது வாங்கத் திட்டமிட்டிருக்கலாம்.
"ஒரு நல்ல அரசாங்கம் வந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம். அதுவரை நாம் கனவு கொண்டேயிருக்க வேண்டியதுதான்."
மேல இருக்கிற வர்த்தைகள பாக்கும் பொது இந்த டயலாக் தான் ஞாபகம் வருது "வரும் ஆனா வராது".
நல்ல அரசாங்கம் வர்றது ரொம்ப கஷ்டம் மணி.
நல்ல அரசாங்கம் வரும்னு நினைகிறதே ஒரு கனவு மாதிரிதான் இருக்கு.
"ஒரு நல்ல அரசாங்கம் வந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம். அதுவரை நாம் கனவு கொண்டேயிருக்க வேண்டியதுதான்."
மேல இருக்கிற வர்த்தைகள பாக்கும் பொது இந்த டயலாக் தான் ஞாபகம் வருது "வரும் ஆனா வராது".
நல்ல அரசாங்கம் வர்றது ரொம்ப கஷ்டம் மணி.
நல்ல அரசாங்கம் வரும்னு நினைகிறதே ஒரு கனவு மாதிரிதான் இருக்கு.
Post a Comment