Apr 26, 2013

சுஜாதா


உங்களுக்கு இந்நேரம் அநேகமாகத் தெரிந்திருக்கும். 

ஆம்! அதே விவகாரம்தான். 

இந்த வருடத்திற்கான சுஜாதா இணையவிருதுக்கு நிசப்தம் தளத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இது உயிர்மையும், சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் விருது. பத்தாயிரம் ரூபாய் பணமும், பாராட்டு பத்திரமும் தருவார்கள். அதுவா முக்கியம்? விருதுக்கு நிசப்தத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? அதுதான் முக்கியம்.

சென்ற மாதம் மனுஷ்யபுத்திரனை விமர்சித்து எழுதியிருந்தேன். இன்னும் கொஞ்சம் ரிவர்ஸ் அடித்தால் சென்ற வருடத்தில் இதே நிகழ்வுக்காக “கவிப்பேரரசு” என்று பேனர் வைத்ததை நக்கலடித்திருந்தேன்.  முந்தாநாள் ஆளுமைச் சிக்கல் என்றெல்லாம் என்னை நக்கலடித்து மனுஷ்ய புத்திரன் Facebook-இல் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். அப்படியிருந்தும்...

உங்களுக்கு இருக்கும் அதே சந்தேகம்தான் எனக்கும்...

எப்படி கொடுத்தார்கள்? ஆண்டவனுக்கும் சுஜாதாவுக்கும்தான் வெளிச்சம். 

“நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்; நீ அழற மாதிரி அழுன்னு ரெண்டு பேரும் சேர்ந்து டகால்ட்டி காட்டுறீங்களா?” என்று நண்பர் சாத்தப்பன் கேட்டார். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. 

விருது வேறு; நடுவர் குழு வேறு; உயிர்மை வேறு; மனுஷ்ய புத்திரன் வேறு என்று அவர் பேசுவார். 

நிசப்தம் வேறு; அதற்கு வழங்கப்படும் விருது வேறு; வா.மணிகண்டன் வேறு என்று நாம் சொன்னால் அதுக்கும் இதுக்கும் சரியாப் போச்சு என்று விட்டுவிடலாம்.

மனுஷ்யபுத்திரனுக்கும், உயிர்மைக்கும், சுஜாதா அறக்கட்டளைக்கும் எனது அன்பு.

எழுத்தாளர் இரா.முருகன், ‘கற்றது தமிழ்’ இயக்குநர் ராம், பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான மனோஜ் மூவரும்தான் நடுவர்கள். நல்ல மனிதர்கள் போலிருக்கிறது. அவர்களுக்கு தலா கோடி புண்ணியம் கிட்டட்டும். 

கவனித்தீர்களா? யாருக்குமே நன்றி சொல்லவில்லை மிச்சம் பிடித்த அத்தனை நன்றிகளும் உங்களுக்குத்தான். வெந்ததைத் தின்றுவிட்டு விரலுக்கு வருவதையெல்லாம் ஒருவன் டைப் செய்து வைக்கிறான் என்றும் புறந்தள்ளாமல் ஒவ்வொரு நாளும் ஐந்து நிமிடமாவது ஒதுக்கி வாசிக்கும் அத்தனை பேருக்கும் நன்றி. ஒவ்வொரு பதிவுக்கும் மின்னஞ்சல்கள் அனுப்பிய, அலைபேசியில் பேசிய அனைவருக்குமே டபுள் நன்றி. வயிற்றெரிச்சலின் காரணமாகவோ, நல்லெண்ணத்தின் காரணமாகவோ கிளம்பி வந்த வசைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் விடுவதற்கான அத்தனை உற்சாகத்தையும் ஓவர் டோஸாக ஊட்டிய உங்களுக்குத்தான் மொத்த நன்றிகளும்.

விருதுக்கான அறிவிப்பு வந்தவுடனேயே நிசப்தத்தில் இருந்து பத்து விருப்பமான பதிவுகளை தேர்ந்தெடுத்து “இதை அனுப்புங்க..விருது கிடைக்கும்” என்று மெனக் கெட்ட நண்பர் ராஜவெங்கடசுப்ரமணியனுக்கு ஸ்பெஷல் நன்றி.ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். நேரில் கூட பார்த்ததில்லை. 

சந்தோஷமாக இருக்கிறது. எளிய மனம் இப்படியான அங்கீகாரங்களில் குதூகலிப்பதுதானே இயற்கை. கொஞ்ச நேரம் குத்தாட்டம் போடட்டும் விடுங்கள்.

இனி? 

மே மூன்றாம் தேதி சென்னை செல்கிறேன். விருதை வாங்கி உங்களுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். 

பிறகு?

விருதுக்கு சலம்பாத மனமும் இதற்கெல்லாம் ஸீன் போடாத குணமும் கிடைக்க வேண்டும் என ஊர் உலகில் இருக்கும் அத்தனை சாமிகளையும் வேண்டிக் கொள்கிறேன். Miles to go!

மற்றபடி எல்லாமும் எப்பவும் போலவே நடக்க வேண்டும்.

வாசியுங்கள், வாழ்த்துங்கள், விமர்சியுங்கள்.

நன்றி.