Oct 12, 2007

செங்கமலமும் இலக்கியமும்-ஒரு இலக்கிய விவகாரம்

அக்டோபர் காலச்சுவடு இதழில் ஆசிரியர் கண்ணன் எழுதியுள்ள பத்தி இது.
-----
இலக்கிய அவதூறுகளில் சில கோபத்தையும் சில அருவருப்பையும் ஏற்படுத்தக்கூடியவை. சமீபத்தில் என் பெயர் குறிப்பிட்டு எழுதப்பட்ட ஒரு 'படைப்பை'ப் புரட்டிப் பார்த்தபோது, இரண்டாம் உணர்வே ஏற்பட்டது. அவதூறுப் படைப்புகளை எழுதுவதில் பெண் எழுத்தாளர்கள் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதன் உதாரணம் இந்தப் 'படைப்பு'. பால் சமத்துவம் எந்நிலையிலும் வரவேற்கப்பட வேண்டியதுதான்.

அந்தப் 'படைப்பாளியை' ஓரிருமுறைகள் சந்தர்ப்பவசமாகச் சந்தித்திருக்கிறேன். முதல்முறை இவர் உலகக் கவிஞர் ஒருவருடன் மேற்கொண்டிருந்த பயணத்தில் இடையீடாக வீட்டிற்கு வந்திருந்தபோது. பின்னர் ஒருமுறை மதுரைக் கடைத் தெருவில். மூன்றாம்முறை, தனது திட்டங்கள் கடைசிவரை தனக்கே தெரியாதபடி செயல்படும் நண்பர், ஒரு பயணத்தின்போது முன் அறிவிப்பில்லாமல் என்னை அப்'படைப்பாளி' வீட்டு வாசலில் இறக்கியபோது. மூன்றுமுறையும் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசியதில்லை. கடிதம், மின்னஞ்சல், குறுஞ்செய்தி, தொலைபேசித் தொடர்பு எதுவும் எப்போதும் இருந்ததில்லை. ஓரிருமுறை அவர் காலச்சுவடுக்கு அனுப்பிய 'படைப்புகள்' அவற்றிற்கு உரிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்திருக்கின்றன. தமது படைப்புகளுக்கு இடமளிக்காத ஒரு தளத்தின்மீது எழுத்தாளர்கள் வருத்தம் கொள்ளலாம். ஆனால், எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. காலச்சுவடுமீது சில எழுத்தாளர்கள் 'பிளாக் மெயில்' ரக முயற்சிகளை மேற்கொள்வது ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

இந்தப் 'படைப்பு' என் பெயர் கொண்ட ஒரு கதாபாத்திரத்திற்கும் கதாசிரியருக்குமான அல்லது கதைசொல்லிக்குமான உறவையும் ஊடலையும் புனைகிறது. மேற்படி கதையில் என் பெயர் இடம் பெற்றிருப்பது வெறும் கற்பனை என்று ஒதுக்குவோம். பத்திரிகையாளர் எனத் தொழிற் பெயர் இடம் பெறுவதையும் மறந்துவிடுவோம். மேற்படி 'படைப்பாளி'க்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை? ஏன் உங்களைத் திட்டிக்கொண்டே இருக்கிறார்? என்று சில நண்பர்கள் தில்லியிலிருந்து குமரிவரை அவ்வப்போது என்னை விசாரிப்பது இப்'படைப்பாளி'யின் மனப்பிராந்துக்கு ஆதாரமாக உள்ளது. சதா பாதாளச் சாக்கடை முன் நிற்பதுபோல முகபாவம் காட்டும் அப்'படைப்பாளி'யோடு எனக்கு ஒவ்வாமையைத் தவிர வேறு எந்த உணர்வும் ஏற்பட்டது இல்லை. ஆர்.எஸ்.எஸ். அரசாங்கம் ஏற்பட்டால், அதன் சென்சார் போர்டில் பணியாற்றத் தகுதியான ஆச்சாரமான கருத்துகள்கொண்ட இந்தப் 'படைப்பாளி', இங்கு 'முற்போக்கு' வட்டாரத்தில் உலாவுவது தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்.

கதையில் இவ்வாறு ஒரு கூற்று வருகிறது "நேரடியா படுக்க வர்றியா"னு கேட்பதே யோக்கியம் என்று. தமது படைப்புகள் வழி தமது ஆற்றாமையை வெளிப்படுத்தும் படைப்பாளிகள், தமது கதாபாத்திரத்தின் சில அறிவுறுத்தல்களையும் பின்பற்றுவது நல்லது.

மேற்படி கதை வெளிவந்த 'புதிய பார்வை' இணை ஆசிரியர் மணா அவ்விதழ் வெளிவந்து சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு என்னைத் தொடர்பு கொண்டார். அவர் குரலில் பதற்றமும் வலியும். மேற்படி சிறுகதையின் உள்சரடுகள் அவரது கவனத்திற்குத் தாமதமாகவே வந்திருக்கின்றன. தெரிந்தும் என்னிடம் ஏன் கூறவில்லை என்று என்னைக் கடிந்துக்கொண்டார். உதவி ஆசிரியர்கள் அச்சிறுகதையை வெகுளித்தனமாகத் தேர்வு செய்துவிட்டார்கள் என்று வருத்தம் தெரிவித்தார். 'புதிய பார்வை' இதழ் ஏப்ரல் 1-15, 2007இல் இக்குறிப்பு இடம்பெற்றுள்ளது.

சில இதழ்களுக்கு முன் 'புதிய பார்வை'யில் வெளிவந்த ஒரு சிறுகதை, சிறுபத்திரிகை சார்ந்த இலக்கியவாதிகள் மத்தியில் சலனத்தை உருவாக்கியிருக்கிறது. காரணம் - குறிப்பிட்ட சிறுகதையில் பாத்திரத்தின் பெயராகக் கருதப்பட்ட ஒரு பெயர் குறிப்பாக ஒருவரைச் சுட்டுகிற விதத்தில் எழுதப்பட்டிருப்பதுதான். படைப்பாளியின் படைப்புச் சுதந்திரத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையின் பேரிலேயே அதைப் பிரசுரித்திருந்தோம். ஆனால் தனிப்பட்ட ஒருவர் மீதான விமர்சனத்திற்கு அந்தச் சிறுகதை வடிவத்தைப் பயன்படுத்தியிருப்பதைப் பிறகே உணர்ந்தோம். தனிப்பட்ட தாக்குதல்களும் மோசமான வசைகளும் அவ்வப்போது நவீனமாக நிகழ்கிற தமிழ் இலக்கியச் சூழலில் - 'புதிய பார்வை'யைப் பொறுத்தவரை - கடந்த இரண்டாண்டுகளாக அதைக் கவனத்துடன் தவிர்த்துவந்திருக்கிறோம். எழுதப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க -வார்த்தைகளின் மூலமாக வலியைப் பரப்பும் பிறாண்டல்களுக்கு இடமளிப்பது திரும்பத் திரும்பக் குழுவாதத்தையே கௌரவப்படுத்துவதாக அமையும் என்றிருந்த கவனத்தை மீறி, தனிப்பட்ட தாக்குதலை மையமாகக்கொண்ட சிறுகதையை வெளியிட்டதற்காக வருத்தத்தை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

'புதிய பார்வை' குறிப்பு வெளிவந்த பிறகு ஒரு பன்மொழி எழுத்தாளர் நவீன சரோஜாதேவி ரகக் கதைகளும் டௌன்லோட் கட்டுரைகளும் எழுதி விண்புகழை எட்டியிருப்பவர் - பலருக்கும் கிளுகிளுப்போடு குறுஞ்செய்தி அனுப்பிவந்ததாக அறிந்தேன். காக்கை உகக்கும் பிணம்.

சின்னக்ளூ: அந்தப் 'படைப்பாளியின்' பெயர் 'தி'யில் ஆரம்பித்து 'மா'வில் முடியும். இந்தக் கண்டுபிடிப்பிற்கெல்லாம் பரிசு கிடையாது.

0 எதிர் சப்தங்கள்: