Oct 13, 2017

குடும்பத்தின் கதை- போட்டிக்கதை 06

சூர்யாவின் வாரிசு பூமிகாவின் கருவில்.  ஒரு மிகப்பெரும் மோதல் வெடித்து பின்பு பிரிந்துவிட்டனர். இப்பொழுதும் கருவில் இருப்பது அந்த சூர்யாவேதான் என்று அவ்வப்போது சொல்லி வெடித்து அழுதுவிடுவாள்.

சூர்யாவுக்கு காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கும் வேலை. பூமிகாவுக்கோ சூர்யாவை சுற்றி சுற்றி அலைவது தான் வேலை. ஆனால் பொறுமைசாலி. பூமிகாவின் முதல் பிள்ளை ஆதி. கடைக்குட்டி அறிவு. இடையில் முகிலன், வருண், நதியா, மாரி என பிள்ளைகள். ஆதி பார்ப்பதற்கு காட்டு மிராண்டிகள் போல இருந்தாலும் பூமிகாவையும் மற்ற பிள்ளைகளையும் நன்றாக பார்த்துக்கொண்டான். அறிவு வந்த பிறகு ஆதி கொஞ்சம் கொஞ்சமாய் குடும்பத்தை விட்டு விலகலானான்.

அறிவு, தன் பெயருக்கு ஏற்றார்போல் படு அறிவு. அவனின் அதி புத்திசாலித்தனத்தால் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கினான். அவனுடைய அசுர வளர்ச்சி பூமிகாவை பதற்றமடையச் செய்தது. அவனின் ஒரு சில செயல்களால் முகிலன், வருண், நதியா, மாரி என அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாய் பூமிகாவை விட்டு விலகத் தொடங்கினர்.

அறிவின் அட்டூழியங்கள் பெருகத்தொடங்கியது. அறிவு தன்னை காப்பான் என்ற நம்பிக்கை குறையத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாய் பொறுமை இழந்து கொண்டிருந்தாள். அவ்வப்போது அழுது வெடிப்பாள். கோபத்தில் அனல் காற்றாய் மூச்சிரைப்பாள். அதே கோபம் தான் அந்த கருவில் இருக்கும் சிசுவுக்கும். வெளியே வந்து எரிமலையாய் வெடித்து அறிவை அழிக்கக் காத்திருக்கிறது.

அந்தக் கருவில் இருப்பது வேறு யாரும் அல்ல, சாட்சாத் அந்த சூர்யாவேதான்.

(பின் குறிப்பு: அறிவியல் புனை கதை என்று எதிர்பார்த்து வந்த உங்களை ஏமாற்றியதற்கு மன்னிக்கவும். இந்த கதைகளின் கதா பாத்திரங்களுக்கு வேறு பெயர்களும் உள்ளது. 

மாரி = மழை, நதியா = ஆறு, வருண் = காற்று, முகிலன் = மேகம், ஆதி = ஆதி மனிதன், அறிவு = தற்கால நாகரிக மனிதன், பூமிகா = பூமி, சூர்யா = சூரியன், குடும்பம்  = சூரிய குடும்பம்)

மீண்டும் ஒருமுறை கதையை வாசிக்கவும்.)

-மாரிமுத்து முருகன் 
marimurugan@gmail.com

6 எதிர் சப்தங்கள்:

Kannan said...

நல்ல முயற்சி - பின் குறிப்பு குடுத்து இருக்க கூடாது.

Marimuthu Murugan said...

நன்றி

Catherine Augustine said...

I understood there is something hidden when reading the story. Good one. I was thinking of the planets. Adhi - Mercury( first planet). Mukilan - Venus( as it is covered by cloud) and so on.

சேக்காளி said...

சில்லுனு ஒரு காதல் ரெண்டாம் பாகம் ன்னு நெனைச்சு ஏமாந்துட்டேன்.
மாரிமுத்து முருகன் நீங்க "நல்ல ஏமாத்துக்கார்"

Marimuthu Murugan said...

நன்றிகள் கேத்தரின், சேக்காளி

Marimuthu Murugan said...

மிகப்பெரும் மோதல் வெடித்து -- BIG BANG

கருவில் இருப்பது அந்த சூர்யாவே - சூரியனின் ஒரு துண்டுதான் இந்த பூமி,

அவ்வப்போது அழுது வெடிப்பாள் - Heavy rain, Earthquake

அனல் காற்றாய் மூச்சிரைப்பாள் - Global warming,Cyclone