May 24, 2016

ஏலம்

நாவல் அச்சுக்குச் சென்றுவிட்டது. அநேகமாக சனிக்கிழமை அல்லது திங்கட்கிழமை கைகளில் கிடைத்துவிடும். புத்தகத்தை வெறுமனே வெளியிடாமல் ஒரு நல்ல காரியத்துக்கு துணையாகச் செய்யலாம் என்று தோன்றியது. அரசுப் பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்வதற்கான உதவி கோரி நிறையப் பெண்கள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். இந்த நாவலின் வழியாக அத்தகைய ஒரு பெண்ணுக்கு உதவலாம். அதை நிசப்தம் அறக்கட்டளை என்ற பெயரிலேயே செய்ய வேண்டியதில்லை. யாவரும் பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ் மாதிரியான ஆட்களையும் உள்ளே இழுத்துவிட்டுவிடலாம் என்ற யோசனை ஓடிக் கொண்டிருக்கிறது. இனிமேல் இதனை அவர்கள் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து செய்யக் கூடும் அல்லவா?

இது ஒரு ஏல விளையாட்டு. 

முதல் ஐந்து பிரதிகளை அதிக விலை கொடுத்து யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். அது எவ்வளவு தொகையாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறைந்தபட்சத் தொகை என்றெல்லாம் எதுவுமில்லை. முதல் ஐந்து தொகையைக் கூறியவர்களுக்கு ஐந்து பிரதிகள். அந்தத் தொகையை யாவரும் பதிப்பகத்தின் கணக்குக்கு அனுப்பி வைத்துவிட்டால் மொத்தத் தொகையையும் சேர்த்து ஜூன் முதல் வாரத்தில் டிஸ்கவரி புத்தகக் கடையில் சிறு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி தகுதியான பெண்ணுக்குக் கொடுத்துவிடலாம். 

லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் மற்றும் மசால்தோசை 38 ரூபாய் புத்தக விற்பனை வருவாயிலிருந்து எனக்கு ராயல்டியாக பத்தாயிரம் ரூபாயைத் தரவிருப்பதாக யாவரும் பதிப்பகத்தினர் சொல்லியிருக்கிறார்கள். ஏலத் தொகையுடன் இந்தத் தொகையையும் சேர்த்து அந்தப் பெண்ணுக்கே கொடுத்துவிடலாம். ஒருவேளை இந்த ஏலத்தின் மூலமாக அதிகமான தொகை கிடைத்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கொடுக்கலாம் இல்லையென்றால் இந்தத் தொகையை மட்டுமாவது கொடுத்துவிடலாம். எழுத்து வழியாக வரக் கூடிய எந்த நிதியும் இப்படியான பொதுக்காரியங்களுக்கே பயன்படட்டும். ஆண்டவன் ஓரளவுக்கு நல்ல நிலையில் வைத்திருக்கிறான். இப்படியே கடைசி வரைக்கும் வைத்திருக்கட்டும் என்றுதான் வேண்டிக் கொள்கிறேன்.

இதை ஏலம் என்றும் போட்டி என்றும் நினைத்துக் கொள்ள வேண்டாம். தகுதியான மாணவிகள் படிப்பதற்கு ஏதாவதொரு வகையில் உதவுகிறோம். அப்படி எடுத்துக் கொள்ளலாம்.

ஏலத் தொகை கூறுகிறவர்கள் மின்னஞ்சல் (vaamanikandan@gmail.com) வழியாகவோ அல்லது நிசப்தம் தளத்தில் பின்னூட்டமாகவோ அல்லது ஃபேஸ்புக் பக்கத்தில் பின்னூட்டமாகவோ கூறலாம். மே 26 (வியாழன்) மாலை வரைக்கும் வரக்கூடிய விவரங்களைத் தொகுத்து வெள்ளிக்கிழமையன்று விரிவாக எழுதுகிறேன்.

ஏலத்தில் கலந்து கொள்ளாமல் நாவலை அதற்குரிய விலையை மட்டும் கொடுத்து வாங்க விரும்புகிறவர்கள் ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம். டிஸ்கவரி புக் பேலஸின் தளத்தில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

வழக்கமாக ஆயிரம் பிரதிகள் அச்சடிப்பார்கள். இந்த முறை அறுநூறு பிரதிகள்தான். வருடாவருடம் டிசம்பர், ஜனவரி மாத சென்னைப் புத்தகக் கண்காட்சி தூள் கிளப்பும். விற்பனையும் அமோகமாக இருக்கும். இந்த முறை ஜூன் மாதம் என்பதால் கூட்டம் வருமா என்பது குறித்து சந்தேகப்படுகிறார்கள். அது சரியான சந்தேகம்தான். விற்காவிட்டால் அடைகாத்துக் கொண்டிருக்க வேண்டும். விற்பனை ஆக ஆக தேவைக்கு ஏற்ப அச்சடித்துக் கொள்ளலாம் என்றார்கள். இத்தகைய விவகாரங்களில் பதிப்பாளரும் விற்பனையாளரும் முடிவெடுப்பதுதான் சரி. 

உள்ளுக்குள் கொஞ்சம் அங்கலாய்ப்புதான். லிண்ட்சே லோஹன் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் மட்டுமே தொள்ளாயிரம் பிரதிகளைத் தாண்டியது. இப்பொழுது மெனக்கெட்டு நாவலாக எழுதிக் கொடுத்தால் அறுநூறு பிரதிகள் மட்டும் அடித்திருக்கிறார்கள். நாவலின் விலையும் குறைவுதான். நூறு ரூபாய். அப்படியிருந்தும் அறுநூறுதான்.

உள்ளுக்குள் வஞ்சம் வைத்திருக்கிறேன். கவனித்துக் கொள்ளலாம். பதிப்பாளர் விற்பனையாளர் எல்லாம் ஒரு பக்கமாகக் கிடக்கட்டும். நானும் ரவுடிதான் என்று அவர்களை நம்ப வைக்கவே முடிவதில்லை. தினமும் பச்சை முட்டையெல்லாம் குடிக்கிறேன். பறவைக் காய்ச்சல் வந்தாலும் வரும் போலிருக்கிறது வாட்டசாட்டமான உடம்பு வராமல் நோகடிக்கிறது. அப்புறம் எப்படி என்னைப் பார்த்து பயப்படுவார்கள்?

புத்தக விற்பனையிலாவது தம் கட்டி கெத்து காட்டிவிடலாம். வீராப்பாக பேசி என்ன பலன்? அவர்களிடம் இதுவரையிலும் எதுவும் பேசவில்லை. நீங்கள்தான் துணையிருக்க வேண்டும். இந்திய வாழ் மக்கள் ஆளுக்கு ஐந்து பிரதிகள் வாங்கினால் அமெரிக்க ஆசிய ஐரோப்பிய அண்டார்ட்டிக்கா வாழ் பெருமக்கள் ஆளுக்கு ஐம்பது நூறு பிரதிகளாவது வாங்கவும். என்னை வாழ வைக்கும் தெய்வங்கள் என்று சினிமா நடிகர்களும் அரசியல்வாதிகளும் சொன்னால் நம்புகிறவர்கள் நான் சொன்னால் நம்பமாடடார்களா?

என்னை வாழ வைக்கும் தெய்வங்ளே! ஐந்து, பத்து, ஐம்பது, நூறு பிரதிகளை வாங்கி என்ன செய்வது என்றெல்லாம் கேட்கக் கூடாது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நண்பர்களுக்குக் கொடுக்கலாம். நூலகத்துக்குக் கொடுக்கலாம். கிழித்தும் வீசலாம். அது பிரச்சினையில்லை. ஆனால் வாங்கி விட வேண்டும். ஆன்லைன் விற்பனையைப் பார்த்து வேடியப்பன் கண்களில் வெடி வெடிக்கட்டும். கரிகாலன் காதுகளில் புகை வரட்டும்.  அந்தவொரு உற்சாகத்திலேயே அடுத்த ஒரு வருடத்துக்கு இயங்குவேன்.

ஐநூறு லட்சியம்! முந்நூறு நிச்சயம்!!
நல்லவர் லட்சியம்! வெல்வது நிச்சயம்!! யார் நல்லவர் என்று கேட்டு மானத்தை வாங்கிவிடாதீர்கள்.

ம்ம்ம்...தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்!! டிஸ்கவரி புக் பேலஸின் ஆன்லைன் விற்பனையே முடங்கிப் போகட்டும்!!

நகைச்சுவை இருக்கட்டும். இந்தப் புத்தகத்தின் விற்பனை வழியாக வரக் கூடிய வருவாயும் அடுத்த ஆண்டு ஏதாவதொரு நல்ல காரியத்துக்கு பயன்படும்படியே செய்யப்படும்.

எதைச் செய்தாலும் நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரித்துக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றி. இத்தனை மனிதர்களின் ஆதரவின்றி எதுவுமே சாத்தியமில்லை என்பதை முழுமையாக உணர்ந்திருக்கிறேன்.

ஆன்லைன் விற்பனை: டிஸ்கவரி புக் பேலஸ்

4 எதிர் சப்தங்கள்:

ARUNPRASAD.R said...

Publish in amazon kindle also if possible.

Thanks.

கல்விக்கோயில் said...

முதல் பிரதி 1000 ரூபாய்

viswa said...

மின்னூலாக கப்பம் கட்டி வாங்க முடியுமா?

Saro said...

Rs.3000. Count me in. I am proud that money will go to a struggling poor girl.