May 28, 2014

மலேசியன் மசாஜ் பார்லர்

எங்கள் பழைய அலுவலகத்தில் Motor mouthக்காரர் ஒருவர் இருந்தார். யாராவது சிக்கிக் கொண்டால் காதுக்குள் தொண தொணவென்று பேசிக் கொண்டேயிருப்பார். கேட்பவனுக்கு ரத்தம் வந்துவிடும். சமீபத்தில்தான் நான் ஐ.டியில் சேர்ந்திருந்தேன். அவர் அப்பொழுதே கொட்டை போட்டிருந்தார்- பல வருடங்களாக ஐடியில் தின்ற பழங்களின் கொட்டை அது. ஆரம்பத்தில் அவரது வாய்க்குள் யாரோ மோட்டாரை வைத்திருக்கிறர்கள் என்று தெரியாது. ‘அமெரிக்கா போயிருக்கீங்களா சார்?’ என்று கேட்டுவிடுவேன். அவ்வளவுதான். இந்தியாவில் பெட்டி கட்ட ஆரம்பத்திததிலிருந்து அங்கு போய் strip tease பாரில் பேண்ட்டைக் கழட்டியது வரை அளப்பார். இதையெல்லாம் ஒரு தடவை கேட்கலாம். இரண்டு தடவை கேட்கலாம். கிட்டத்தட்ட ஐம்பது தடவையாவது சொல்லியிருப்பார். நானும் கேட்டிருக்கிறேன். சீனியராக வேறு இருக்கிறார். ‘போதும் விடுங்க’ என்றும் சொல்ல முடியாது.  தூங்கும் போது தாரைக் காய்ச்சி இந்த ஆள் வாயில் ஊற்றிவிடு கடவுளே என்று வேண்டிக் கொள்வேன்.

இப்படியான அந்த மனிதரோடுதான் மலேசியா சென்றேன். அதுதான் எனக்கு முதல் விமானப் பயணம். எங்களோடு ஒரு பெரிய டீமும் வந்தது. ஆனால் எனக்குத்தான் கெட்ட நேரம். ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகமும் இரண்டு கால்களையும் தூக்கி என் மீது போட்டிருந்தன. விமானத்தில் மோட்டார்க்காரர்தான் என் பக்கத்து இருக்கை. ஏற்கனவே எனக்கு பயத்தில் இரண்டு மூன்று முறை காற்சட்டை துளித் துளியாக ஈரமாகிக் கொண்டிருந்தது. அதில் இந்த ஆள் வேறு, கண்ணை மூடி ‘மாரியாத்தா’ என்று கூப்பிட்டால் ‘பினாங்குல மசாஜ் செமயா இருக்கும் தெரியுமா?’ என்பார். பற்களைக் கடித்துக் கொண்டு ‘பைலட் ஃப்ளைட்டை கடலில் இறக்காம ஓட்டச் சொல்லு ஆத்தா’ என்றால் ‘அங்கத் தமிழ் படம் கூட வரும்’ என்பார்.

‘ஒரேயொரு தடவை சாமியை முழுசா கும்பிட்டுக்கிறேன் இருங்க’ என்று சொல்லிவிட்டு பம்மிக் கொண்டிருந்தேன்.

‘பயமா இருக்கா? யூ ஃபன்னி கய்’ என்றார். அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. பின்னாடி இருந்தவர்களிடமெல்லாம் திரும்பி ‘இவன் பயந்துட்டான்....பயங்கரமா சாமி கும்பிடுறான்’ என்று நக்கல் வேறு. அவர்கள் நக்கல் அடித்தால் அடித்துவிட்டு போகட்டும். நமக்கு உசுரு முக்கியம் இல்லையா? சாமிகளிடம் முக்கிக் கொண்டிருந்தேன்.

விமானம் ஏறும் போது ‘Take offதான் முக்கியம்...கொஞ்சம் ஏமாந்தாலும் வெடிச்சுடும்’ என்றார். பறக்கும் போது ‘இது ரொம்ப முக்கியம்....கீழே விழுந்தால் கடல்தான்’ என்று கிலியூட்டினார். இறங்கும் போது ‘துளி நிலத்தில் பட்டாலும் போச்சு...சிதறிடும்’ என்று வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டே இருந்தார். ‘என்ன மனுஷன் இவன்?’ என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் அந்த ஆளுக்கு அதில் ஒரு த்ரில். ஸாடிஸ்ட்.

ஒரு கால் மீது இன்னொரு காலை இறுகப்போட்டு போய்ச் சேர்ந்தேன். காற்சட்டை மொத்தமும் நனைந்துவிட்டால் அசிங்கமாகிவிடும் இல்லையா?

விதி அதோடு நிற்கவில்லை. 

பினாங்கில் என்னையும் அவரையும் ஒரே அறையில் அமுக்கிவிட்டார்கள். வழக்கமாக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் தங்குவதற்கு ஆளாளுக்குத் தனி அறை கொடுப்பார்கள். எங்கள் நிறுவனம் பிசினாரி. இரண்டு பேருக்கு ஒரு அறை என்று சொல்லிவிட்டார்கள். சிக்கிக் கொண்டேன். முதல் சில நாட்களுக்கு பிரச்சினை இல்லை.  அலுவலகம் முடிந்தவுடனேயே அறைக்கு வந்துவிடுவார். அதன் பிறகுதான் சேட்டைகளை ஆரம்பித்தார். மலேசியாவில் சில நண்பர்களைப் பிடித்துக் கொண்டார். கண்டபடிக்கு ஊர் சுற்றத் துவங்கியிருந்தார். நள்ளிரவு தாண்டித்தான் அறைக்கு வந்து சேர்வார். ஆனால் சுற்றிவிட்டு வந்து அமைதியாக இருக்க மாட்டார். உசுப்பேற்றுவதுதான் அவரது நோக்கமே. ‘மசாஜ் பார்லர் போனேன்...சைனீஸ் பொண்ணுங்க___________’. இந்த ______ல் நீங்கள் எதையெல்லாம் நிரப்ப விரும்புகிறீர்களோ நிரப்பிக் கொள்ளுங்கள். அத்தனை கதைகள். 

கூட இருப்பவன் நம்மை விட இளையவன், திருமணம் ஆகாதவன் என்றெல்லாம் எதையும் நினைக்க மாட்டார். என்னாலும் கேட்காமல் இருக்க முடியாது. ஆர்வத்தைக் காட்டாதது போல விசாரித்துக் கொள்வேன். அவர் உசுப்பேற்றியதில் கிட்டத்தட்ட பாதி ஃப்யூஸ் போய்விட்டது. இனி எப்படியும் சனிக்கிழமையன்று மசாஜ் பார்லருக்கு போய்விட வேண்டும் முடிவு செய்து கொண்டேன். மசாஜ் பார்லர் பற்றிய விவரங்களை இந்த ஆளிடம் விசாரிக்கக் கூடாது என்றும் ஒரு வைராக்கியம்.

நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகாமையில் ஒரு மலாய்க்காரனின் மெஸ் இருந்தது. கொத்துபுரோட்டாவிலிருந்து அத்தனையும் கிடைக்கும். அங்கு வேலை செய்தவர்கள் எல்லோருமே நம்மவர்கள்தான். ராமநாதபுரம், புதுக்கோட்டைக்காரர்கள். அதில் குமார் என்றொரு பையன் இருந்தான். என்னுடைய வயதுதான். அவனிடம்தான் விசாரித்தேன்.

‘இங்க மசாஜ் பார்லர் எப்படியிருக்கும்’ என்றுதான் ஆரம்பித்தேன். அவன் வித்தியாசமாகச் சிரித்தான். நக்கலான சிரிப்பு. அந்தச் சிரிப்பினாலேயே இனி இவனிடம் அதிகம் கேட்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். 

‘சும்மா மசாஜ் மட்டும்தான்...ரிலாக்ஸ் பண்ணலாம்ன்னு’ என்றேன். அவன் என்னை நல்லவன் என்று நினைத்துக் கொண்டான் போலிருக்கிறது. அதன் பின்னர் சிரிக்கவில்லை.

‘சைனீஸ் மசாஜ் செண்டர் இருக்கிறது. ஆனால் நான் போனதில்லை’ என்றான்.

மோட்டார்க்காரர் சொன்ன அதே மசாஜ் செண்டராகத்தான் இருக்க வேண்டும். இடங்களைக் குறித்துக் கொண்டேன். அதன் பிறகு ஒவ்வொரு நாளுமே கற்பனைச் சிறகுகள் விரிந்தன. 

ஏகப்பட்ட கனவுகளோடு சனிக்கிழமை மதியம் சென்றிருந்தேன். கூட்டமே இல்லை. உள்ளே செல்வதற்கு நடுக்கமாக இருந்தது. உலக மகா தப்பு செய்கிறோமோ என்று பதறியபடியே இருந்தேன். ஆனால் இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது. இனி என்ன தயக்கம்? உள்ளே நுழைந்தாகிவிட்டது. வரவேற்பறையில் ஒரு பெண் இருந்தாள். சைனீஸ். 

‘என்ன மசாஜ் வேண்டும்?’ கொஞ்சும் ஆங்கிலத்தில் கேட்டாள். ஒரு அட்டையில் விலை விவரங்கள் இருந்தது. இருப்பதிலேயே விலை குறைவான மசாஜ் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். 

‘ப்ரஷர் அதிகம் வேண்டுமா, குறைவாக வேண்டுமா?’ என்றாள். இதையெல்லாம் எதற்கு இவள் கேட்கிறாள் என்று யோசனை எழுந்தது. ஒருவேளை இவளேதான் செய்வாளோ என்று குறுகுறுப்பு வேறு. இவள் எவ்வளவு அழுத்தினாலும் தாங்கிக் கொள்ளலாம் என்று ‘அதிகம்’ என்று சொல்லிவிட்டேன். கிளி சிரித்தபடியே அறையைக் காட்டியது. நினைத்தது சரிதான் போலிருக்கிறது. அவளேதான் அறை வரைக்கும் வந்தாள். ஒரு வெள்ளைத் துணியைக் கொடுத்து அணிந்து கொள்ளச் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். அடுத்த ஐந்து நிமிடங்கள் டென்ஷனாகவும் கிளுகிளுப்பாகவும் நகர்ந்து கொண்டிருந்தன. 

கதவு தட்டப்பட்டது. 

குப்புற படுத்தபடியே ‘யெஸ்’ என்றேன். அவளாகத்தான் இருக்கும் என்று திரும்பிப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி. ஒரு ஆண் வந்திருந்தான். என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகப் படுத்திருந்தேன். அடுத்த சில வினாடிகளில் அந்தப் பெண் உள்ளே வந்து ‘இவர்தான் மசாஜ் செய்வார். பார்வையற்றவர். காதும் கேட்காது, வாயும் பேச முடியாது’ என்றாள். 

‘ம்ம்ம்’

‘இவரிடம் எதுவும் பேச முயற்சிக்க வேண்டாம். அமைதியாகப் படுத்துக் கொள்ளுங்கள்’ என்று கடுப்பேற்றிவிட்டு போய்விட்டாள். அவரைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. ஆனால் நான் இதை எதிர்பார்க்கவில்லை. இனி ஒன்றும் செய்வதற்கில்லை. குப்புற படுத்துக் கொண்டேன். அவரது விரல்களைத் தொட்டு ஏதோ சைகை செய்துவிட்டு கதவை மூடிவிட்டாள். 

அந்த மனிதர் மெதுவாக படுக்கைக்கு அருகில் வந்தார். அவரது கைக்கு எட்டுமிடத்தில்தான் எண்ணெய் இருந்தது. கண்களை மூடிக் கொண்டேன். எண்ணெயை எடுத்து என் மீது பூசிவிட்டு அமுக்கத் துவங்கினார் பாருங்கள். தட் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே மொமண்ட். ‘ப்ரஷர் அதிகம் கொடு’ என்றுதான் அவள் சைகை செய்துவிட்டுப் போயிருப்பாள் போலிருக்கிறது. மனிதர் விளையாடினார். அப்பொழுது நான் படு ஒல்லியாக இருப்பேன். ஒவ்வொரு அமுக்கிலும் எலும்புகள் நெட்டி முறித்தன. முறிந்த எலும்புகளை எல்லாம் கடைசியில் மூட்டை கட்டித்தான் கொடுப்பார்கள் என்று பற்களை கடித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆளிடம் சொல்லவும் முடியாது. கத்தினாலும் கேட்காது. விரலைப் பிடித்து ஏதாவது சொல்லலாம்தான். அதை அவர் வேறு மாதிரி புரிந்து கொண்டால் என்ன செய்வது? அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்களும் என் உடலில் கொத்து புரோட்டா போட்டார். கண்கள் கலங்கிப் போயின. கழுத்து, இடுப்பு, கால்கள் என்று ஒரு இடம் பாக்கியில்லை. இனி வாழ்க்கையில் மசாஜே வேண்டாம். விட்டால் போதும் என்றிருந்தது. கிளம்பிய சூட்டில் காதில் புகை வரும் போல இருந்தது. 

‘எப்படா முடிப்ப?’ என்று நெஞ்சுக்குள் கெஞ்சியபடியே படுத்திருந்தேன். அது எங்கே முடிகிறது? யுகம் யுகமாக இழுக்கிறது. ஒவ்வொரு நொடியும் வீணாக்காமல் அந்த சைனாக்காரன் பட்டையைக் கிளப்புகிறான். குடல் குஞ்சாமணியெல்லாம் வெளியில் வந்த பிறகுதான் நிறுத்துவான் போலிருந்தது. குப்புறப் போட்டு அமுக்குகிறான் மல்லாக்க திருப்பிப் போட்டு அமுக்குகிறான். ‘அய்யனாரப்பா அடுத்த அரை மணி நேரத்துக்கு உன் பலத்தை எல்லாம் எனக்கு கொடுத்துடு’ என்றால் எந்த அய்யனும் காது கொடுப்பதாகவே இல்லை. 

ஒரு வழியாக நாற்பத்தைந்து நிமிடங்களுக்குப் பிறகு அவள் வந்து அவனைத் தொட்டாள். நிறுத்திக் கொண்டான். அப்பாடா. விடுதலையடைந்தேன். அதுவும் தற்காலிக விடுதலைதான். அடுத்த ஒரு வாரத்திற்கு உடம்பின் ஒவ்வொரு உறுப்பும் தனித்தனியாக வலித்தது.

வெளியே வந்த போது ‘ஹவ் வாஸ் த சர்வீஸ் சார்?’ என்றாள். ‘ஆசம்’ என்றேன். வேறு என்ன சொல்வது? 

அது ஒரு வித்தியாசமான பார்லர். பார்வையற்றவர்கள்தான் பணியில் இருக்கிறார்கள். ஆண்களுக்கு ஆண்களும் பெண்களுக்கு பெண்களும்தான் மசாஜ் செய்வார்கள். இந்த விஷயம் எனக்குத் தெரியாது. அழுத்தம் குறைவாகக் கொடுக்கச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ‘முன்னப்பின்ன செத்திருந்தால் சுடுகாடு தெரியும்’ என்கிற கணக்காக ‘அதிகம்’ என்று சொல்லி மாட்டிக் கொண்டேன். அவர்களைக் குறை சொல்லி என்ன பலன்? எல்லாம் என் தப்பு.

அறைக்கு வந்த முதல் வேலையாக இந்த பார்லரைப் பற்றி மோட்டார்க்காரரிடம் சொல்லிவிட்டேன். ஆண்கள்தான் மசாஜ் செய்வார்கள் என்று சொல்லவில்லை- ஆனால் பார்வையற்றவர்கள் என்பதைச் சொல்லிவிட்டேன். அடுத்த நாளே அவரும் சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்பிப் போனார். ‘ப்ரஷர் மேக்ஸிமம்ன்னு சொல்லுங்க’ என்றேன். கட்டைவிரலை உயர்த்திக் காட்டிவிட்டுச் சென்றார். சாகட்டும். அவ்வளவுதான். அதன் பிறகு அவர் இன்றுவரை என்னிடம் முகம் கொடுத்தே பேசியதில்லை.

24 எதிர் சப்தங்கள்:

Unknown said...

என்னா ஒரு வில்லத்தனம்.... :)

vidhun sahayaraj said...

super .. laughed a lot

Krish said...

siritchi siritchi vaai valichathutha mitcham... :P

Krish said...

athigam sirchaen.... hahaha

Unknown said...

Sema Siripu..thanga mudiyala...

பால கணேஷ் said...

என்ன அழகான பழிவாங்கல் பிரதர்..! ஹா... ஹா... ஹா...

Prasanthvel said...

Sema revenge sir

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

ஹாஹாஹா

dave said...

sema sir..

Sundar Padmanaban said...

கலக்கல்!

Unknown said...

why blood? Same Blood:)

Velu velunu veluthaanga :)

kadir said...

super

Unknown said...

Nalla sirichuten suthi irukravanga than oru mathiri pakranga :)

துளசி கோபால் said...

அட ராமா:-)))))))))))))))

Unknown said...

Ennala sirippa adakkavey mudiyala sir... Awesome...

”தளிர் சுரேஷ்” said...

நல்லாவே மாட்டி விட்டுருக்கீங்க!

Catherine Augustine said...

வெளியே வந்த போது ‘ஹவ் வாஸ் த சர்வீஸ் சார்?’ என்றாள். ‘ஆசம்’ என்றேன். //hahaha Awesome..!!

Unknown said...

Vai vittu sirithen, sir!!!!

Ravikutty said...

arumai..

Rajez said...

Address please? ennoda friendu orutthara anuppanum.

Krishna said...

வாலிப முறுக்குல ஆசையோட போனவர இப்படி நொறுக்கி அனுப்பிடானே சீனாகாரன்...அடுத்து கொரியன் மசாஜ் முயற்சி பண்ணுங்க பாஸ்...

Krishna said...

korean massage try pannunga boss next..

arivuindia said...

‘ப்ரஷர் மேக்ஸிமம்ன்னு சொல்லுங்க’ என்றேன். கட்டைவிரலை உயர்த்திக் காட்டிவிட்டுச் சென்றார் - ennatha solla

Subramanian Vallinayagam said...

very nice, i laughed a lot :)