டிசம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் ஒரு கூட்டம் நடக்கவிருக்கிறது. கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் யாவரும்.காம் நண்பர்கள் நடத்தும் கூட்டது அது.
என்னளவில் இது ஒரு முக்கியமான கூட்டம். அதற்கு காரணமிருக்கிறது. நிசப்தம்.காமும், என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவியும்தான் அஜெண்டா. ஃபார்மலாக எதுவும் இருக்காது என நம்புகிறேன். கூட்டம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நான் எழுதியதை எல்லாம் பொருட்டாக மதித்து தனிக்கவனம் கொடுத்து நடத்தப்படும் முதல் கூட்டம் இது- வாழ்நாளின் முதல் கூட்டம். சந்தோஷம் இருக்கத்தானே செய்யும்?
ஒழுங்காக எழுதிக் கொண்டிருந்தால் இன்னும் பத்து வருடங்கள் கழித்து யாராவது கூட்டம் நடத்துவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுதே என்பது சற்று அதிகப்படியாகத் தெரிந்தாலும் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது. இதைவிட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? எழுத்துக்கான அங்கீகாரத்தைத் தவிர இங்கு வேறு எதை எதிர்பார்ப்பது? யாராவது முகம் தெரியாத ஒருவர் இரண்டு வரி மின்னஞ்சல் அனுப்புகிறார்; கேட்டிராத தொலைபேசிக் குரல்கள் வாழ்த்துகின்றன என்ற சந்தோஷங்களைத் தாண்டிய இன்னொரு மகிழ்ச்சி இது.
‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக் குருவி’ கவிதைத் தொகுப்பு பற்றி கவிஞர். தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகிறார். ஆனால் நிசப்தம்.காம் பற்றி யார் பேசப் போகிறார்கள் என்று இன்னும் முடிவாகவில்லை. அது ஒரு பக்கம் முடிவாகிக் கொண்டிருக்கட்டும். அதற்கு முன்பாக உங்களிடம் தெரிவித்து விட விரும்பினேன்.
சென்னையில் இருப்பவர்கள் மற்றும் அந்த தினத்தில் சென்னை வர இயல்பவர்கள் என அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். அதிகபட்சம் இரண்டு மணி நேரம் ஒதுக்குங்கள். அது போதும்.
கடைசி நேரத்தில் சொன்னால் ‘அடடா ஊருக்கு போக டிக்கெட் புக் செஞ்சுட்டேனே’ ‘ஒரு வெளியூர் ட்ரிப் போக ஏற்கனவே ஒத்துக் கொண்டேனே’ என்று யாராவது சொல்லிவிட வாய்ப்பிருக்கிறது என்பதால் இப்பொழுதே சொல்லிவிடுகிறேன்.
தொடர்ச்சியான உங்கள் வாசிப்பும், உங்களின் தொடர்பு மட்டுமே என்னை உற்சாகத்தோடு எழுதச் செய்கிறது. அதே உற்சாகத்தோடு இன்னும் பல வருடங்களைத் தாண்டுவதற்கு உங்களின் ஆதரவும் அன்பும் தேவை. அதற்கான அத்தாட்சியாக வந்து தலையைக் காட்டிவிடுங்கள்.