Aug 17, 2013

ரெட்லைட் ஏரியாவின் கதை

“அவன் இரண்டு ரூபாயை எடுத்து அவள் கையில் தருகிறான். அதை அவள் வாங்கி நிதானமாக அவளது இடுப்பில் முடிந்து கொள்கிறாள். அவன் அவளது அழகை ரசித்த வண்ணம் நிற்கிறான். அவள் பாயைச் சரிப்படுத்திவிட்டு, தலைமயிரை விலக்கி பாயில் படுத்துக் கொண்டு ஜம்பர் முடிச்சை அவிழ்த்துவிடுகிறாள்.”

(ஜம்பர்- ஜாக்கெட்)

ஒரு புத்தகத்தை வாசிக்கத் துவங்கும் போது இரண்டாம் பக்கத்திலேயே மேற்சொன்ன ஒரு ‘ஸீன்’ இருக்கிறது. பிறகு எப்படி மூடி வைப்பது? மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டு பரபர மனநிலையுடன் தொடர்ந்தால் இரண்டாம் பக்கத்தில் மட்டுமில்லை- கிட்டத்தட்ட ஒவ்வொரு நான்கைந்து பக்கத்திற்கும் ஒரு ‘ஸீன்’.  

ஐம்பது பக்கத்தில் ஒரு குறுநாவல்- இடைவெளி இல்லாமல் வாசித்தால் ஒன்றரை மணி நேரத்தில் முடித்துவிடலாம். ‘குறத்திமுடுக்கு’தான் அந்த நாவல். 

நாவலை எழுதிய ஜி.நாகராஜன் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றில் சிறந்த புலமை பெற்றிருந்தாராம். அந்தக் காலத்திலேயே பட்டதாரி. அந்தக் காலம் என்றால் 1929 ஆம் ஆண்டில் பிறந்தவர். இன்றைக்கு மாதிரி வீதிக்கு வீதி கல்லூரி இல்லாத காலத்தில் பட்டம் வாங்குவது என்பதெல்லாம் பெரிய விஷயம்தானே? வேலை, சம்பாத்தியம் என்று இருந்திருந்தால் இரண்டு தலைமுறையாவது ‘உட்கார்ந்து சாப்பிடும்’அளவுக்கு சேர்த்திருக்கலாம். ஆனால் ஜி.என் லட்சியவாதியாகத் திரிந்திருக்கிறார். கம்யூனிஸத்தில் ஈர்ப்பு மிக்கவராக எந்த வேலையிலும் உருப்படியாக ஒட்டியிருக்கவில்லை.

அவ்வப்போது விலைமாதர்களிடமும் தொடர்பில் இருந்திருப்பார் போலிருக்கிறது.  ‘அந்தக் கால’ கம்யூனிஸ்ட்கள் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அல்லவா? ஜி.என் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார். ராணுவத்திற்கும் சென்றிருக்கிறார். கம்யூனிஸ்ட் என்பதால் அங்கும் தொடர்ந்து இருக்க முடியவில்லை.  வெளியே வந்தாகிவிட்டது. பிறகு மதுரையில் ட்யூஷன்கள் எடுத்திருக்கிறார். பெரிய சம்பாத்தியம் எதுவுமில்லை. 1970க்கு பிறகு எந்த வேலையும் செய்யாமல் அலையும் நாடோடியாகவும், விட்டேந்தியாகவும் இருந்திருக்கிறார். கடைசி காலத்தில் கஞ்சாபழக்கம் வேறு. 1981 ஆம் ஆண்டில் காலம் அள்ளிக் கொண்டது.

தனது ஐம்பதாண்டு கால வாழ்க்கையில் ஜி.என் எழுதியவற்றை ‘ஏகப்பட்டது’என்று சொல்லிவிட முடியாது. ‘குறத்தி முடுக்கு’ என்ற குறுநாவலும், ‘நாளை மற்றுமொரு நாளே’ என்ற நாவலும் எழுதியிருக்கிறார். அது போக முப்பத்தைந்து சிறுகதைகள். அவ்வளவுதான். ஆனால் தமிழில் பாலியல் எழுத்து என்றால் அதன் முன்னோடிகளின் வரிசையில் இவரைச் சேர்த்துத்தான் சொல்கிறார்கள். 

எத்தனை எழுதுகிறோம் என்பது முக்கியமில்லை பாஸ்; எப்படி எழுதுகிறோம் என்பதுதான் மேட்டர்.

குறுநாவல் பற்றி கொஞ்சம் பார்த்துவிடலாம்-

‘குறத்தி முடுக்கு’ என்ற ஒரு தெரு இருக்கிறது. அந்தத் தெருவே ‘ரெட் லைட்’ ஏரியாதான். மல்லிகையும், செம்பங்கியும், குட்டிக்குரா பவுடரும், கிளுகிளு பேச்சுமாக தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறது. பல்வேறு வயதுகளில், அழகான, அவலட்சணமான பெண்களால் நிரம்பிக் கிடக்கிறது அந்தத் தெரு. அங்கு இருக்கும் பெண்களில் ஒருத்தியான தங்கம் என்பவளிடம் பத்திரிக்கை நிருபரை அழைத்துச் செல்கிறான் ஒரு புரோக்கர். நிருபர் திருமணம் ஆகாதவன். நிருபருக்கு இது முதல் அனுபவம் இல்லை. ஆனால் தங்கத்துடன் இதுதான் முதல் முறை. முதல் தடவையே தங்கத்தின் வாஞ்சை பிடித்துவிட அவளின் ரெகுலர் கஸ்டமர் ஆகிவிடுகிறான். பிறகு அவ்வப்போது அவளிடம் போய்வருகிறான். அவளுக்கும் அவன் மீது ப்ரியம்தான்.

நாட்கள் நகர நகர அவளின் மீது ஈர்ப்பு உருவாகிவிடுகிறது. இது காதலா என்று புரியாத காதல். ஒரு நாள் அவளைத் நாடிப் போகும் போது தங்கத்தின் வீடு பூட்டியிருக்கிறது. அவளை போலீஸ் பிடித்து போய்விட்டதாக தெரிந்து கொள்கிறான். ‘தெருவில் போகிற வருகிறவர்களை கட்டாயப்படுத்தி அழைத்தாள்’ என்பதுதான் வழக்கு. இந்த வழக்கில் அவன் தனக்காக சாட்சி சொல்ல வேண்டும் என தங்கம் கேட்டுக் கொள்கிறாள். இவனும் ஒத்துக் கொள்கிறான். கோர்ட்டில் ‘தங்கம் அப்படிப்பட்டவள் இல்லை எனவும் தங்கத்தை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்’ என சாட்சி சொல்கிறான். தங்கம் விடுதலை ஆகிறாள். 

அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அவள் மழுப்பிவிடுகிறாள். அடுத்த மூன்று தினங்களில் அவள் ஊரைவிட்டே ஓடிவிடுகிறாள். அதன் பிறகு நிருபருக்கு அந்த ஊரில் இருக்க பிடிக்கவில்லை. மதுரைக்கு மாறுதல் கோருகிறான். மதுரை செல்வதற்கு முன்பாக திருவனந்தபுரம் சென்று அங்கு ஒரு வேலையை முடித்து வரச் சொல்கிறார்கள். அந்த வேலைக்காக செல்லும் போது இவன் திருவனந்தபுரத்தில் அவளைப் பார்க்கிறான். அவள் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். தான் யாரோடு வசிக்கிறேன் என்பதைப் பற்றிச் சொல்கிறாள். பேசி முடித்துவிட்டு நிருபர் தான் தங்கியிருக்கும் விடுதிக்குத் திரும்புகிறார். தங்கத்தின் நினைவோடு அறையில் படுத்திருக்கிறான். முக்கியமாக, இந்த இடத்தில் ‘ஸீன்’ எதுவும் இல்லை.

இதுதான் நாவலின் Core. இதை மட்டுமே விவரித்து எழுதியிருந்தால் நம்மவர்கள் சர்வசாதாரணமாக Pulp நாவல் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அப்படிச் சொல்வதற்கான எந்த வாய்ப்பையும் நாவலும், ஜி.நாகராஜனும் கொடுப்பதில்லை. 

குறத்தி முடுக்கில் இருக்கும் கர்ப்பிணியான செண்பகத்தை ஒரு முரட்டு நடுத்தரவயதுக்காரன் புரட்டியதில் கலையும் கர்ப்பம், மரகதம் என்ற விலைமாதுவுக்கு உருவாகும் காதல், அந்த இளைஞன், குறத்தி முடுக்கு பெண்களை விலைக்கு வாங்கி அவர்களுக்கு பாதுகாவலனாக இருக்கும் அத்தான்கள், பதினைந்து வயதுப் பெண்ணொருத்தி தற்கொலைக்கு முயன்று தோற்றுப் போகும் அவலம், போலீஸ் பிடித்துச் சென்று முடியை மழித்துவிட்ட பிறகு மனநிலை பாதிக்கப்படும் மீனாட்சி என்ற ஒவ்வொரு கேரக்டருமே ஏதாவதொரு விதத்தில் நாவலின் ‘பில்லர்’களாக மாறி நிற்கிறார்கள்.

இந்த நாவல் தமிழின் முக்கியமான Work. ஐம்பது பக்கம்தானே? அசால்ட்டாக முடித்துவிடலாம். 

(புத்தகத்தை ஆன்லைனில் வாங்கலாம்)